Monday, August 31, 2020

33 - குசேலர்




உஷா...

அரக்கனான பாணாசுரனின் ஒரே மகள்

பாணாசுரன், மகாபலி சக்ரவர்த்தியின் மகன். சிவ பக்தன்.ஒருமுறை இவன், சிவ தாண்டவம் ஆடுகையில், தன் ஆயிரம் கைகளாலும்,வாத்தியங்கள் இசைத்தான்.இதனால் மகிழ்ச்சியடைந்த சிவன், "பாணா..உன் வாத்தியத் திறமைக்கு பரிசாக வரம் அளிக்க விரும்புகின்றேன்.என்ன வேண்டும்? கேள்"என்றார்.

பாணாசுரன் அவரை வணங்கி, "பரமேஸ்வரா! எனது நகரான சோணிதபுரத்துக்கு தாங்கள் பாதுகாவலனாக இருந்து காக்க வேண்டும்"என்று வேண்டினான்.சிவனும் அப்படியே வரம் தந்து அவனது நகரத்தைப் பாதுகாத்து வந்தார்.

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனே நகரத்தின் காவலனாக இருப்பதால், பாணாசுரன் தன் வலிமையை எண்ணி ஆணவம் கொண்டான்.ஆணவம்
தானே எப்போதும் அழிவிற்குக் காரணம் ஆகிறது. ஆயிரம் கைகளும் அரிப்பெடுக்க அவன் சிவனையேக் கேட்டான்..

"பெருமாளே என் பலத்தைக் கண்டு பயப்படுவதால் யாரும் என்னுடன் யுத்தம் செய்ய வருவதில்லை.கண்ணுக்கு  எட்டிய தூரம் வரை எதிரிகள் தெரியவில்லை.என் கண் முன்னே தாங்கள்தான் தெரிகிறீர்கள்.நாம் யுத்தம் செய்யலாமா?"என்றான்.

சிவனோ, "பாணா...உன் குரலில் ஆணவம் தெரிகிறது.
.அது நல்லதல்ல.ஆனால் உன் ஆசை நிறைவேறப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.விரைவிலேயே நீ மனதில் வேண்டும் அளவிற்கான பலமுள்ள எதிரியை சந்திப்பாய்"என்றார்.

அதற்கான விதை உஷாவின் உள்ளத்தில் காதலாக முளைத்தது.

உஷா...பாணாசுரனின் மகள்.ஆனாலும் மென்மையானவள்,பக்தி நிறைந்தவள்,பண்புள்ளவள், அறிவிலும்..அழகிலும் சிறந்தவள்.

ஒருநாள் அவள் கனவில் ஒரு ஆணழகனைக் கண்டாள்.உறங்கி எழுந்தும் அவனை மறக்க முடியவில்லை.

கனவில் வந்த அழகனைப் பற்றி, மந்திரி குமாரியான சித்ரலேகாவிடம் பகிர்ந்து கொண்டாள் உஷா."உன் காதலன் எப்படியிருப்பான்" என் அவள் கேட்க உஷாவால் பதில் சொல்ல முடியவில்லை..

சித்ரலேகா பலவிதமான யோக சித்திகள் கொண்டவள்.ஓவியம் வரைவதில் கெட்டிக்காரி.அவள் மூவுலகங்களிலும் பேசப்படக் கூடிய அழகான ஆண்களை ஓவியமாக வரைந்து ஒவ்வொன்றாகக் காட்டினாள்.அனிருத்தனின் ஓவியத்தைப் பார்த்து, உஷா முகம் சிவந்தாள்.உடன் அவனே அவள் காதலன் என அறிந்தாள் சித்ரலேகா.

உஷா மீது அதிக அன்பு கொண்ட அவள் உடனே துவாரகைக்கு வந்து,தன் மாயசக்தியால், பஞ்சணையில் தூங்கிக் கொண்டிருந்த அனிருத்தனனை கட்டிலோடு தூக்கிக் கொண்டு சென்று விட்டாள்.

விழித்தெழுந்த அனிருத்தன், நடந்ததைத் தெரிந்து கொண்டான்.அவனும் உஷாவின் மீது காதல் கொண்டான்.

விஷயம் வெளியே தெரிந்தது."கன்னி மாடத்தில் ஆளரவம் கேட்கிறது" என அனைவரும் கிசுகிசுக்க பாணாசுரன் காதிற்கும் அச் செய்தி வந்தது.கொதித்தெழுந்தவன் காவலர்கள் சூழ கன்னிமாடம் சென்றான்.அங்கு அனிருத்தனனைக் கண்டு"இவனை பாதாளச் சிறையில் அடையுங்கள்" என வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

உஷா..அழுதாள்..துடித்தாள்..தந்தையின் காலில் விழுந்து கதறினாள்.பாணாசுரன் மசியவில்லை.

விஷயம் துவாரகைக்கு எட்டியது.துவாரகைக்கு வந்த நாரதர்,"அனிருத்தனைக் காணாது நீங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.அவனோ, பாணாசுரனின் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றான்.எல்லாம் காதல் படுத்தும் பாடு"என அனைத்து விவரங்களையும் சொன்னார்.

அடுத்த கணம் யாதவர் படைகள் அணி வகுத்தன.பாணாசுரனின் நகரம் நோக்கி செல்ல ஆரம்பித்தன.

கிருஷ்ணன் தலைமையில் கோணிதபுரத்தை முற்றுகையிட்டது யாதவர்படை.பாணாசுரனின் நகரத்தைத் தாக்கி, கோட்டை கொத்தளங்களைத் தகர்த்தெறிந்தது.நகரத்தின் பாதுகாவலரான சிவன், தன் பூத கணங்களுடன் கிருஷ்ணனின் படைகளை எதிர்த்தார்.பாணாசுரனும் தன் அசுரப் படைகளுடன் வந்து யாதவர்களைத் தாக்கினான்.

கிருஷ்ணனுக்கும், சிவனுக்கும் மூண்ட யுத்தத்தைப் பார்க்க,தேவர்களும், ரிஷிகளும் வானத்தில் வந்து கூடினார்கள்.காக்கும் கடவுளுக்கும்,அழிக்கும் கடவுளுக்குமான சண்டை.

வெற்றி, தோல்வியினை நிர்ணயிக்க முடியா சண்டை..

சிவன் மூன்று தலைகள்,மூன்று கால்களைக் கொண்ட ஜுர  புருஷனை சிருஷ்டித்து ஏவினார்.அது நாலாபக்கத்துப் படைகளையும் வெப்பத்தினால் பொசுக்கிக் கொண்டே வர..கிருஷ்ணன் குளிர் ஜுரம் என்ற எதிர் சக்தியை உண்டாக்கி ஏவினான்.விஷ்ணுவின் சக்திக்கு ஈடு கொடுக்க முடியாமல், சிவ ஜுரம் கிருஷ்ணனை தஞ்சம் அடைந்தது.அதற்கு அபயமளித்து விடுவித்தார்.

பாணாசுரன், கிருஷ்ணனை எதிர்த்து தன் ஆயிரம் கைகளினாலும் பாணங்களை விடுவித்தான்.கிருஷ்ணன் தன் சக்கரத்தை வீச, அது அசுரனின் கைகளைத் துண்டக்கத் தொடங்கியது.

பாணாசுரனைக் காப்பதாக வாக்களித்திருந்த சிவன் இடைமறித்தார்.

"வாசுதேவா! இந்த பாணன் என் பக்தன்.இவனைக் காப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.அது மட்டுமல்ல நீ உன் பக்தனான பிரகலாதனுக்கு, அவன் வம்சத்தைச் சேர்ந்தவரை வதம் செய்ய மாட்டேன் என வாக்கு தந்திருக்கிறாய்.அதன்படி பிரகலாதன் வம்சத்தைச் சேர்ந்த பாணாசுரனைக்  கொல்லாமல் மன்னிக்க வேண்டும்"என்றார்.

கிருஷ்ணனும் அதை ஏற்றுக் கோண்டு நான்கு கைகள் மிச்சமிருந்த பாணாசுரனைக் கொல்லாமல் மன்னித்து அருள் புரிந்தான்.

பாணாசுரன், மனம் திருந்தி, சிறையிலிருந்த அனிருத்தனையும் விடுவித்து, தன் மகள் உஷாவையும் அழைத்து கண்ணனிடம் ஒப்படைத்தான்.அவர்கள் திருமணம் முடிந்து அனைவரும் துவாரகைத் திரும்பினர்.

துவாரகையில் மகிழ்ச்சி துள்ளியது.செல்வச் செழிப்பில் துவாரகை சொர்க்கபுரியாய்த் திகழ்ந்தது.
ஆனாலும், ஒருவர் பஞ்சத்தால் அடிபட்டு பரதேசி போல இருந்தார்.அவர் கிருஷ்ணனுடன் ஒன்றாகக் குருகுலத்தில் படித்த சுதாமன்தான்.

சுதாமன் அதிக ஆசை இல்லாதவர்.கிடைத்ததைக் கொண்டு இல்லறம் நடத்தி வந்தவர்.உடுத்திக் கொள்ள நல்ல ஆடைகள் இல்லாததால் கந்தல் ஆடைகளையே உடுத்திக் கொண்டிருந்ததால் குசேலன் என அழைக்கப்பட்டார்.

அவனது மனைவி க்ஷூத்தமா, மிகவும் பொறுமைசாலி.எத்தனை வறுமையிலும் கணவனின் மனம் கோணாமல் இல்லறம் நடத்தி வந்த புண்ணியவதி.ஆனாலும், அவர்களின் குழந்தைகள் பசியால் தவிப்பதைக் காணமுடியாமல்.. வறுமையிலிருந்து மீள என்ன வழி என யோசித்தாள்.அப்போது ஒரு யோசனைத் தோன்றியது.

கணவனிடம் தயங்கித் தயங்கிச் சொன்னாள்..

"நான் சொல்வது சரியா..தப்பா எனத் தெரியவில்லை.துவாரகையில் இருக்கும் கிருஷ்ணன்..உங்கள் பால்ய நண்பன்தானே..உங்கள் மீது அன்பு கொண்டவன் என்றும் கூறியிருக்கிறீர்கள்.நீங்கள் ஒருமுரை அவரைச் சென்று பார்த்தால்,அவரால் சிறிதளவாவது நம் வறுமை நீங்கும் என்று தோன்றுகிறது..இது நமக்காக அல்ல நம் குழந்தைகளுக்காக.."

குசேலருக்கு மனைவியின் யோசனை சரியென்று தோன்றியது.தவிர கண்ணனைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலும் அவருக்கு இருந்து வந்தது.அது இப்படியாவது நிறைவேறட்டும்..எனப் புறப்பட்டார்.

ஆனால்..நீண்ட காலம் கழித்து பார்க்கப் போகும் நண்பனை எப்படி வெறும் கையோடு பார்ப்பது...அவர் மனைவி ஓடோடிப் போய் நான்கு வீடுகளில் யாசகம் கேட்டு..சிறிது அவலை ஒரு கந்தல் துணியில் முடிந்து குசேலரிடம் தந்து வழியனுப்பினாள்.

குசேலர் துவாரகைக்குப் போனார்.கிருஷ்ணனின் வாயில் காப்போனிடம், "ஏன் பெயர் சுதாமன்.கிருஷ்ணனின் பால்ய நண்பன்.அவரை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்" என்றார்.

காவலன் அவரைநிற்கச் சொல்லிவிட்டு, கிருஷ்ணனிடம் சொல்லச் சென்றான்.விஷயத்தைக் கேள்விப்பட்ட கண்ணன் ..தானே ஓடோடி வந்து"வா..சுதாமா" என்றபடியே அவரை கட்டியணைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

கிருஷ்ணன் குசேலனை சந்தோஷமாக  தன் ஆசனத்தில் அமர்வித்தான். அவருடைய பாதத்தை தட்டில் வைத்து, ருக்மிணி நீரை வார்க்க தன் கைகளால் அலம்பினான்.தானே தன் கைகளால் ருக்மிணி பலகாரங்கள் கொண்டு வந்து கொடுத்தாள்.குசேலருக்கு வெண்சாமரம் வீசினாள்.

குசேலர் அவர்களின் அன்பு கண்டு மனம் உருகினார்.இத்தனை அன்புக்கு நான் அருகதையுள்ளவனா?இதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?இப்படி கௌரவம் அளிப்பவர்களிடம், வறுமை தீர்க்க பொருள் கேட்பதா.கூடாது.கண்ணனின் இந்தப் பிரியமே எனக்குப் போதும் என மனதினுள் தீர்மானித்துக் கொண்டார்.

குசேலர் சாப்பிட்டு முடிந்ததும்..அவருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுத்தபடியே..பழைய குருகுல சம்பவங்களை சொல்லி கண்ணன் மகிழ்ந்தான்.பின்னர் "அண்ணியார் எனக்கு என்ன கொடுத்து அனுப்பியிருக்கிறார்?"என்று கேட்ட கண்ணனிடம், தயங்கியவாறே அவல் முடிச்சைத் தந்தார்.

கிருஷ்ணன், அவலை ஆவலுடன் வாங்கி ஒருவாய் வாய்க்குள் போட்டுக் கொண்டான்."ஆஹா..என்ன ருசி..அண்ணியாரின் கை பக்குவம் அருமை" என்றான்.

மீண்டும் அவன் அவலை எடுக்க..ருக்மிணி கண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டாள்."நீங்கள் மட்டும் சாப்பிட்டால் போதுமா? எனக்கு வேண்டாமா" என்றபடியே அவல் முடிச்சைப் பெற்றுக் கொண்டாள்.

"ஆம்..கண்ணன் ஒரு பிடி அவல் சாப்பிட்டதற்கே லட்சுமி தேவையான செல்வத்தைக் கொடுத்து விட்டாள்.அடுத்த பிடியை சாப்பிட்டால்..குசேலர் செல்வத்துக்கு அதிபதியாகி..அவள் குசேலர் வீடு செல்லுமாறு ஆகிவிடுமோ"என்றே தடுத்தாள்.

பகவான் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்.லட்சுமி தேவி ருக்மிணியே சாமரம் வீசினார்.இது போதும்.பொன்னும், பொருளும் கொடுத்தால் நான் மாறிவிடுவேன் என்பதாலேயே கண்ணன் எனக்கு செல்வத்தைத் தரவில்லை போலும்..என்று எண்ணியவாறே ஊர் வந்து சேர்ந்தார் குசேலர்.வீட்டை நெருங்கும் போது குட்டிச் சுவராய் இருந்த வீடு பெரிய அரண்மனையாக ஆகியிருந்தது.அவருடைய மனைவி..பட்டும், தங்க ஆபரணங்களுடன் அடையாளமே தெரியாதபடி வந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார்.அவர் முகத்தில் சந்தோஷம்.அவரது பிள்ளைகள் அனைவரும் புத்தாடை அணிந்திருந்தனர்.வீட்டில் செல்வச் செழிப்பு தாண்டவமாடியது.குசேலர் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

"கண்ணா..காக்கும் தெய்வமே,,நான் கேட்காமலேயே இத்தனை செல்வத்தை எனக்கு அளித்தவனே! செல்வத்தைத் தந்து என்னை சோதிக்கின்றாயா?வறுமையில் உன் மீது கொண்ட அன்பு..செல்வம் வந்தபின் மாறிவிடுமே என பார்க்கின்றாயா..இல்லை கண்ணா..இந்த பக்தி உன் மீது நிலைத்திருக்கும்"மனம் நெகிழ தனக்குள் சொல்லிக் கொண்டார் குசேலர்.

பகவான் அப்படித்தான்..பக்தன் தன்னை நோக்கி ஒரடி வைத்தாலே..அவர் பக்தனை நோக்கி ஆயிரம் அடிகள் வைத்து அரவணைத்துக் கொள்வார்.

ஆனால் அந்த பகவான் அவதரித்த யதுர் குலமோ ஆணவத்தின் உச்சத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

கண்ணன் அதை நினைத்தான்.இன்னமும் என் வேலை முடியவில்லை என்று சொல்லிக் கொண்டான்.

அப்படி அவன் சொல்லிக் கொண்டிருந்தது சிவனிடம்.சிவனிடம் அப்படி அவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

No comments:

Post a Comment