Tuesday, August 25, 2020

28 -குருதட்சணை




வசுதேவரும், தேவகியும் வருடக்கணக்கில் பிரிந்திருந்த குழந்தைகளைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டனர்.பலராமனையும், கிருஷ்ணனையும் கேட்டுக் கேட்டு அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.

வசுதேவர் இரு பிள்ளைகளுக்கும் முதல் காரியமாகக் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

"பலராமா, கிருஷ்ணா..மாடுகள், கன்றுகள் மேய்ப்பதிலேயே உங்கள் பெரும்பான்மைக் காலம் ஓடிவிட்டது.உரிய காலத்தில் கல்வி கற்க முடியாமல் போனது.இப்போதும் இன்னமும் காலம் இருக்கிறது.கல்வி கற்க நீங்கள் குருகுலம் செல்ல வேண்டும்.ஒரு சிறந்த குருவை உங்களுக்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

"அப்படியே ஆகட்டும் தந்தையே" என்றார்கள் அவர்கள்.

சாந்தீபினி முனிவர்க்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.பலராமன், கிருஷ்ணன் சாதாரண மனிதர்கள் இல்லை.அவதார நாயகர்கள்...என்பதை அவரது உள்ளுணர்வால் அறிந்திருந்தார்.அந்த திவ்ய புருஷர்களுக்கு தான் குருவாக இருந்து கல்வி  கற்றுத்தர வேண்டுமா? என திகைத்துப் போனார்.

"குருவே நமஸ்காரம்" என இருவரும் அவர் தாள் பணிந்து வணங்கினர்.சுய நினைவிற்கு வந்தவர் அவர்களுக்கு ஆசி கூறினார்.

"மகரிஷியே! இவர்கள் இனி உங்களது பிள்ளைகள்.இவர்களைக் கல்வியில் சிறந்தவர்கள் ஆக்குவது உங்களது பொறுப்பு" என்ற வசுதேவர், அவர்களை அவரிடம் ஒப்படைத்து விட்டு விடை பெற்று கொண்டார்.

சாந்தீபினி..அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டார்.

பெயருக்குத்தான் தான் குரு.பலராம, கிருஷ்ணனுக்கு எந்த குருவும் தேவையில்லை.அவர்கள் அத்தனை சூட்டிகையாக இருந்தனர்.ஒருமுறை சொன்னதுமே, புரிந்து, அதை நன்றாக உள் வாங்கிக் கொண்டனர்.நுணூக்கமாக உணர்ந்து அதன் பொருளை தெள்ளத் தெளிவாக விளக்கினர்.

இப்படி சீடர்கள் கிடைத்ததற்கு சாந்தீபினி பெருமிதம் அடைந்தார்.அறுபத்துநான்கு கலைகளையும்..அறுபத்து நான்கு நாட்களில் கற்றுத் தேர்ந்தனர் கிருஷ்ணனும், பலராமனும்.

"அற்புதம்..மிக அற்புதம்..கிருஷ்ணா..பலராமா...இதுவரை உங்களைப் போன்ற சீடர்களை நான் பார்த்ததேயில்லை.வாழிய நீங்கள்" என வாழ்த்தினார் சாந்தீபினி.

"குருவே! தங்கள் அருளால் நிறைந்த கல்வியினைப் பெற்றோம்.அதற்கான குருதட்சணை செலுத்த விரும்புகிறோம்.என்ன வேண்டுமோ..கேளுங்கள்" என்றான் கண்ணன்.

ஆசிரமவாசியான சாந்தீபினி ஆசைகள் ஏதும் இல்லாதவர்.தேவையே அற்றவர்.என்ன கேட்பது எனத் தெரியாமல் திகைத்தார்.அப்போது அவரது மனைவி ..அவரை உள்ளே அழைத்தார்.ஏதோ சொன்னார்.

பின்னர் அவர் தயங்கபடியே அவர்கள் முன் வந்து நின்றார்.அவர் தயக்கத்தைப் பார்த்த கண்ணன்,"குருவே..தயங்காமல் எது வேண்டுமோ கேளுங்கள்.தரத் தயாராய் இருக்கிறோம்" என்றான்.

"கிருஷ்ணா..பலராமா..நீங்கள் இருவரும் தெய்வீக புருஷர்கள்.அதனால் மனிதர்கள் சக்திக்கு மீறிய ஒன்றை உங்களிடம் கேட்கிறேன்..முடியுமானால் நிறைவேற்றுங்கள்.இல்லையானாலும் மனம் வருந்த வேண்டாம்'

"உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே எங்கள் பாக்கியம்"

"எனது மகன் சில வருடங்களுக்கு முன் பிரபாஸ க்ஷேத்திரத்தில் கடலில் மூழ்கி இறந்து விட்டான்.அவனை உங்களால் மீட்டுத் தர முடியும் என என் மனைவியின் எண்ணம்.என் விருப்பமும் அதுவே"என்றார்.

பலராம..கிருஷ்ணன் உடனே புறப்பட்டு பிரபாஸ க்ஷேத்திரம் வந்தனர்.கடலரசனை அழைத்து, கடலில் மூழ்கி இறந்த குரு புத்திரனின் உடலை கொண்டு வருமாறுக் கேட்டனர்.

கடலரசன், "கண்ணா..குருபுத்திரன் என்னிடத்தில் இல்லை.பிள்ளைகளைக் கடத்திப் போகும்..சங்கின்  உடலைக் கொண்ட பஞ்சஜனன் என்னும் அரக்கன் ஒருவேளை உங்கள் குருவின் புதல்வனைக் கடத்திப் போயிருக்கலாம்"என்றான்.

கண்ணன் ,கடலுக்குள் புகுந்து..அரக்கனைத் தேடிப் பிடித்துக் கொன்றான்..ஆனால் குருவின் புதல்வன் அங்கும் இல்லை.பஞ்சஜனன் எனும் அரக்கன் உடலிலிருந்து சங்கை கண்ணன் எடுத்துக் கொண்டான்.

பின் அங்கிருந்து புறப்பட்டு, எமனுடைய நகரான "ஸ்ம்யமஸி" பட்டிணத்துக்குச் சென்றான்.கிங்கரர்கள் அவர்கள் வருகையை எமனுக்குத் தெரிவிக்க கண்ணனை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தான்.

"எனது குரு சாந்தீபினியின் மகன் கடலில் மூழ்கி மாண்டுவிட்டான்.குரு தட்சணையாக அவர் தன் மகனைக் கேட்பதால் அவனைத் தேடிக் கொண்டு இங்கு வந்தேன்" என்றான் கண்ணன்.

எமன் ஒரு வார்த்தையும் பேசாமல் குரு புத்திரனை கொண்டு வந்து ஒப்படைத்தான்.

கிருஷ்ணனும், பலராமனும் குரு புத்திரனுடன் சாந்தீபினியிடம் வந்தனர்.

சாந்திபீனியாலும், அவ்ருடைய மனைவியினாலும் இதை நம்ப முடியவில்லை.சில நொடிகள் ஸ்தம்பித்துப் போனார்கள்.மகனை வாரித் தழுவிக் கொண்டனர்.ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.கிருஷ்ணனையும், பலராமனையும் வாழ்த்தி ஆசிர்வதித்தனர்.

இருவரும் மீண்டும் மதுராபுரி திரும்பினர்.

கல்வியில் சிறந்தவர்களாக,ஆயுதப் பயிற்சியில் திறமையுள்ளவர்களாக,சாஸ்திரங்களை உணர்ந்தவர்களாகத் திரும்பிய மகன்களைக் கண்டு வசுதேவரும்,தேவகியும் மன்ம மகிழ்ந்து போனார்கள்.

தாய் தந்தையர்க்கு சந்தோஷத்தைத் தந்த கிருஷ்ணன்...தொலை தூரத்தில் தன்னை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஜீவன்களை நினைத்துப் பார்க்கவும் தயங்கவில்லை.

பிருந்தாவனத்தில் நந்கோபரும், யசோதையும் ,கோபியர்களும் தன்னை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க,அஸ்தினாபுரத்தில் அத்தை குந்தியும் தன்னையே நினைத்துக் கொண்டு ஏதோ வேதனையில் தவித்துக் கொண்டிருக்கின்றாள் என்று அவளுக்குத் தெரிந்தது.

விருஷ்ணி வம்ச மந்திரியான உத்தவரை பிருந்தாவனத்திற்கும், அக்ரூரரை அஸ்தினாபுரத்துக்கும் தன் சார்பாக அனுப்பி வைத்தான்.

உத்தவர் பிருத்தாவனத்திற்குச் சென்றார்.நந்தகோபரும், யசோதையும் கண்ணனின் நினைவாகவே துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்.அவர்களுக்கு ஆறுதல் கூறினார்."நந்தகோபரே! கண்ணனை சிறு வயது முதல் வளர்த்து வந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள்.உங்களைக் கண்டதாலேயே பாக்கியம் பெற்றவன் நான்.பகவான் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணன்..விரைவில் உங்களைக் காண வருவார்.தங்களுக்கும்யசோதைக்கும் இதைத் தெரிவிக்கச் சொன்னார்.தங்கள் நலனையும் கண்டறிந்து வரச்சொல்லி என்னை அனுப்பியுள்ளார்"என ஆறுதல் கூறினார்.பின் யசோதையிடமும், நந்தகோபரிடமும் கண்ணனின் பால்ய லீலைகளைக் கேட்டு பரவசமானார்.

நந்தகோபரின் வீட்டு வாசலில் தேர் நிற்பதைக் கண்டு, கண்ணனை அழைத்துப்போன அக்ரூரர், மீண்டும் கொண்டுவிட வந்திருப்பாரோ என ஆவலுடன் கோபியர்கள் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டனர்.கண்ணன் வரவில்லை என்றதும் ஏமாற்றம் அடைந்தனர்.

கண்ணனின் தூதுவராக உத்தவர் வந்துள்ளார் எனத் தெரிந்ததும்..அவரிடம் தங்கள் மனக் குமுறலைத் தெரிவித்தனர்.

"கண்ணனின் தூதுவரே! எங்கள் கண்ணன் எப்படியிருக்கிறான்.அவனுக்கென்ன..மதுராபுரியில் ஏராளமான அழகிகள் இருப்பார்கள்.மன்மதன் போல சந்தோசமாக அவன் இருப்பான்.இங்கே..நாங்கள் தான் அவனை நினைத்தே உருகிக் கொண்டிருக்கிறோம்.தனது தாய் தந்தையருக்குத் தகவல் சொல்லி அனுப்பியவன்,எங்களை எங்கே நினைக்கப்போகிறான்.அவன் எங்களை மறந்திருப்பானோ?" என புலம்பினர்.

உத்தவர் பிரம்மித்துப் போனார்.கண்ணன் மீது கொண்ட காதலால், வெட்கத்தை விட்டு புலம்பி..அவனை உரிமையுடன் கடிந்து கொள்ளும் கோபியர்கள் அன்பு அவரை நெக்குருக வைத்தது.அதை மனம் திறந்து அவர்களிடம் சொல்லவும் செய்தார்..

"கோபியர்களே! நீங்கள் கண்ணன் மீது கொண்டுள்ள எல்லையில்லா காதல் என்னை பிரமிக்க வைக்கிறது.கிருஷ்ணரிடம் மனதைப் பறிக்கொடுத்து ..அவனால் ஆண்டு கொள்ளப்பட்ட உங்களுக்கு உலகில் அடைய வேறேதும் இல்லை.பிறவியின் பயன் முழுதும் அடைந்தவர்கள் நீங்கள்..உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.எத்தனை அன்பை பகவான் விரும்புவானோ..அந்த அன்பின் வடிவம் நீங்கள்" என்று அவர்களிடம் சொல்லி விட்டு..கண்ணன் அவர்களுக்கு சொல்லியனுப்பிய செய்தியைக் கூறினார்..

"கோபியர்களே! நான் ஒரு போதும் உங்களை விட்டு பிரியப் போவதில்லை.எங்கும்  நிறைந்திருக்கும் காற்றினைப் போல..நான் அனைத்து இடத்திலும் நிறந்தவன்.என்னை நினைத்து..என்னிடம் உங்கள் மனதை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே நான் உங்களை விட்டு விலகி நிற்கிறேன்.நான் உங்கள் அருகில் இருப்பதை விட, வெகு தூரத்தில் இருக்கும் போதுதான் என் நினைவு உங்களிடத்தில் பசுமையாக நிலைத்திருக்கும்"

கண்ணனின் இந்த செய்தியால், கோபியர்கள் மன சாந்தியடைந்தனர்.உத்தவரிடம், கண்ணனின் லீலா வினோதங்களைச் சொல்வதிலேயே ஆத்ம திருப்தி அடைந்தனர்.சில நாட்கள் உத்தவர், கோபியர்கள்  மன ஆறுதலுக்காக அவர்களுடன் தங்கி விட்டு மதுராபுரி திரும்பினார்.கண்ணனிடம் கோபியர்களின் பக்தியைப் பற்றிச் சொல்லி, அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கினார்.

உத்தவர் சென்ற பிருந்தாவனம் பக்திபாவத்தில் சிறந்தது என்றால், அக்ரூரர் சென்றிருந்த அஸ்தினாபுரமோ விரோதபாவத்தில் இருந்தது.

துரியோதனன் தலைமையில் கௌரவர்கள், பாண்டவர்களை வெறுத்து, அவர்களுக்கு பல விதத்திலும் தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டிக்க வேண்டிய அஸ்தினாபுர மன்னன் திருதிராஷ்டிரனோ, துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் வாய்மூடிக் கிடந்தான்.

குந்தி அனைத்தையும் அக்ரூரரிடம் கூறி புலம்பினாள்.பின், "அக்ரூரரே! நான் நம்பியிருப்பது என் சகோதரன் வசுதேவனின் பிள்ளைகளான பலராமனையும், கிருஷ்ணனையும்தான்.அவர்கள் அவதரித்திருப்பது தீயோரை அழித்து நல்லவர்களை காப்பதற்காகவே1 அவர்கள்தான் இங்கு வந்து எங்கள் துன்பத்தைப் போக்க வேண்டும்"என்றாள்.

அக்ரூரர் மதுராபுரிக்குத் திரும்பி ..குந்தி சொன்ன  தகவல்களையும்..அஸ்தினாபுரத்தில் தான் பார்த்த நிலைமையையும் கண்ணனிடம் சொல்ல...கண்ணன் அஸ்தினாபுரம் செல்லலாம் என தீர்மானித்த போது..அவனை குறுக்கே வழி மறைத்தது ஒரு பெரும் போர்.

No comments:

Post a Comment