Sunday, August 30, 2020

32 - சிசுபாலன் மறைந்தான்




அசுவமேதயாகத்தில் "அக்ரபூஜை" எனும் முதல் மரியாதை முக்கியமாகும்.

அந்த மரியாதையை யாருக்குத் தரலாம் என்றார் தருமர்

சகாதேவன் சொன்னான் ,"அண்ணா..நம் கண்ணெதிரே காட்சி தரும் தெய்வமாக நம் முன்னே நிற்பவன் கண்ணன்.அவனே எல்லா உலகங்களாலும், எல்லாவகையிலும் வழிபடத் தக்கவன்.முதல் மரியாதை பெறும் தகுதி அவனுக்கே"

யாகத்தை நடத்தி வைக்க வந்து வியாசர்,கண்வர் முதலான மகரிஷிகளும், பீஷ்மர்,துரோணர் உள்ளிட்ட பெரியோர்களும் அதை ஏற்றனர்.

தருமர் பயபக்தியுடன் முதல் மரியாதை செய்தார்..அப்போது மன்னர்களிடையே இருந்து எழுந்தான் சிசுபாலன்.

"தவத்தில் சிறந்தோரும்,ஞானத்திலும், வீரத்திலும் பெருமை பெற்றவர்களும் இருக்கும் இச்சபையில்..அவர்களில் யாருக்காவது முதல்மரியாதை செய்வதை விட்டு விட்டு தகுதியே இல்லாதவனுக்கு செய்ய பாண்டவர்களுக்கு பித்து பிடித்து விட்டதா?"என்றான்..மெலும் சொன்னான்"இந்த இடையனான கண்ணன் எந்த விஷயத்தில் உயர்ந்தவன்?குலத்திலா.குணத்திலா, வீரத்திலா..? ஜராசந்தனுக்கு பயந்து பின் வாங்கி ஓடிய கோழை இவன்.சூழ்ச்சிக்காரன்,நேர்மையில்லாதவன்.."என இழிவாகப் பேசினான்.

அவன் சொற்களைப் பொறுக்காமல்,பாண்டவர்கள் பொங்கி எழுந்தனர்.சிசுபாலனை எதிர்க்க ஆயுதமெடுத்தனர்.

இவ்வளவு நேரம் சிசுபாலன் சொல்லியவற்றை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன்..பாண்டவர்களைத் தடுத்தான்."இது எனக்கும், சிசுபாலனுக்கும் இடையே உள்ள பிரச்னை.நானே தீர்த்து வைக்கிறேன்"என்றான்.

இதைக் கேட்ட சிசுபாலன், கத்தியுடன் கண்ணன் மீது பாய்ந்தான்.

கிருஷ்ணன் அதற்கு மேல் பொறுமை காக்காமல் ,தன் சுதர்சன சக்கரததை ஏவி,சிசுபாலனின் தலையைத் துண்டித்தான்.அப்போது சிசுபாலனின் உடலிலிருந்து ஒளி எழுந்து கிருஷ்ணனின் உடலுக்குள் சென்று மறைந்தது.இதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஆனால் அங்கிருந்த மகரிஷிகள் இதன் காரணத்தை உணர்ந்து கொண்டனர்.

பாற்கடலில் துவார பாலகர்களான ஜய-விஜயர்கள் சாபத்தின் காரணமாக மூன்று பிறவிகள் பெற்று பகவானை விரோதித்தார்கள்.எவன் ஒருவனும் நண்பர்களையும்,உறவினர்களையும் விட விரோதிகளை நினைத்துக் கொண்டிருப்பதே அதிகம்.அதனால் அவர்களும் எப்போதும் பகவான் நினைவுடன் இருந்து முக்தி பெறுகிறார்கள் என்பதை மற்றவர்களுக்கும் கூறினார்கள்.

முதல்பிறவியில் ஜய-விஜயர்கள் முறையே இரண்யாட்சன்,இரண்யகசிபுவாகவும்
இரண்டாவது பிறவியில் ராவணன், கும்பகர்ணனாகவும்
மூன்றாவது பிறவியில் சிசுபாலன்,தந்தவக்த்ரனாகவும் பிறந்தனர்

ஜயனான, சிசுபாலன் முக்தி பெற்று விட,தந்தவக்த்ரன்மட்டுமே மிச்சம்.

அவன் கிருஷ்ணனை அழிப்பதற்காக தன் தோழனான சால்வனை கூட்டு சேர்த்துக் கொண்டிருந்தான்.

ருக்மிணியை கிருஷ்ணன் தூக்கி வந்த போது..நண்பர்களான சிசுபாலன், ருக்மிக்கு ஆதரவாக கிருஷ்ணனை எதிர்த்தவன் சால்வன்.அப்போது பலராமனால் தோற்கடிக்கப் பட்டு துரத்தியடிக்கப் பட்டிருந்தான்.அவமானம் தாங்காமல்...யாதவர்களை பூண்டோடு அழிப்பேன் என சபதம் எடுத்து  சிவனை நோக்கி தவம் இருந்தான்.அவர் அருளால் "ஸௌபம்"எனும் அதிசயமான ஆகாயவிமானததைப் பெற்றான்.

கிருஷ்ணன் , சிசுபாலனை வதம் செய்த கோபத்தில் அவனும்,தந்தவக்த்ரனும் ..துவரகை மீது கண்ணன் இல்லா நேரத்தில் விமானத்தில் சென்று போர் தொடுத்தார்கள்.துவாரகையின் நந்தவனங்களையும்,அரண்மனைகளையும் மற்றும் பெரிய கட்டிடங்களையும் தகர்த்தார்கள்.ஆகாயத்தில் இருந்த படியே கற்கள்,மரங்கள், நாகங்கள் போன்றவற்றை பேய்மழை போல பொழிந்தார்கள்.

சால்வனை எதிர்த்து கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னன் தனது படைகளுடன் சென்று தாக்கினான்.அஸ்திரங்களைத் தொடுத்தான்.ஆனால் விமானம் மாயமாக மறைந்தும்...திடீரென தோன்றியும் தாக்குதல் நடந்ததால்..சமாளிக்க முடியாமல் திணறினான்.

யுத்த செய்தி கேட்டு துவாரகைக்கு வந்தான் கண்ணன்.அவன்பிரத்யும்னனிடம்,"மகனே!..சால்வன் மாயப்போர் புரிவதால்..என்னால் மட்டுமே அவனை எதிர் கொள்ள முடியும்.நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான்.

பின் சால்வனுக்கும் கிருஷ்ணனுக்குமான போர் கடுமையாக நடந்தது.இறுதியாக கிருஷ்ணன் தன் கதாயுதத்தால் விமானத்தைத் தாக்கி..கடலில் விழ வைத்தான்.தன் சுதர்சன சக்கரத்தால் சால்வனின் தலையைத் துண்டித்தான்.

தோழன் சால்வனின் மரணத்தால் மேலும் ஆத்திரமடைந்த தந்தவக்த்ரன் கதையை ஓங்கிக் கொண்டு கிருஷ்ணன் மீது பாய்ந்தான்.இருவருக்குமான கதாயுத்தத்தில் கிருஷ்ணனால் தலையில் தாக்கப்பட்டு மரணமடைந்தான்.பின் மோட்சம் பெற்று மேலுலக்ம போனான்.

துவாரகாபுரி மக்கள், படையெடுப்பெல்லாம் ஓய்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.கண்ணனின் பாதுகாப்பில் அனைவரும் நிம்மதியாய் காலம்கழித்தனர்.

 இந்நிலையில்..கண்ணனின் பாதுகாப்பையும் மீறி காணாமல் போனான் அனிருத்தன்.

அனிருத்தன், கிருஷ்ணனின் மகனான பிரத்யும்னனின் மகன்.

அரண்மனையே களேபரமானது.மூலை..முடுக்கெல்லாம் போய்த் தேடினர்.நாலாதிசைகளிலும் வீரர்கள் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர்.

துக்கத்தில் இருந்த ருக்மிணியிடம் கண்ணன் சொன்னான்,"அனிருத்தை கண்டு பிடித்து விடலாம்.இது ஒன்றும் புதிதல்ல.முதலில் தகப்பன் காணாமல் போனான்.இப்போது மகன்"என்றான்.

ஆம்..கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னனும் காணாமல் போய்க் கிடைத்தவந்தான்.

அது அவன் குழந்தையாக இருந்த போது நடந்தது.

பிரத்யும்னன் வேறு யாருமில்லை.மன்மதன்தான் அவன்.

தவத்தில் இருந்த சிவனின் மீது மன்மத பாணம் எய்து நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கப்பட்ட மன்மதன்..கிருஷ்ணன்-ருக்மிணிக்கு மகனாகப் பிறந்திருந்தான்.

கம்சனுக்கு எமனாக கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானோ, அதுபோல சம்பாசுரன் எனும் அரக்கனுக்கு பிரத்யும்னனால் மரணம் என விதி எழுதியிருந்தது.

முன்பு கம்சனனுக்கு அசரீரி இதைச் சொன்னது போல,சம்பாசுரனிடம் சென்று இச்செய்தியை நாரதர் சொல்லி விட்டார்.

எதிரி இவன்தான் என தெரிய வந்தபின் அவனை உயிரோடு விட்டு வைப்பானா சம்பாசுரன்.

துவாரகையில் யாரும் அறியாமல் மாயா ரூபத்தில் புகுந்தான்.பச்சைக் குழந்தை  என்றும் பார்க்காமல், பிரத்யும்னனைத் திருடிக் கொண்டுபோய் கடலில் போட்டான்.

துவாரகையில் குழந்தையைக் காணாமல் அனைவரும் பதறித் துடித்தனர்.அழுது அழுது மயங்கினாள் தாய்.குழந்தை என்னவானது என கடைசி வரைத் தெரியவில்லை.

அனைத்தும் அறிந்த கண்ணனோ..அதைப் பற்றி மூச்சு விடவில்லை.எல்லாவற்றையும் அதனதன் போக்கில் விட்டுவிட்டு..முடிவைத் தீர்மனைப்பது அவன்தானே!

சம்பாசுரனின் மரணம் பிரத்யும்னனால் நடைபெற வேண்டும் என இருக்கையில் அதை வேடிக்கைப் பார்ப்பது மட்டுமே கண்ணனின் வேலை.

கடலில் போடப்பட்ட குழந்தையை ஒரு மீன் விழுங்கியது.அந்த மீன் ஒரு செம்படவனின் வலையில் சிக்கியது.அவன் அந்த மீனை அரசனின் அரண்மனைக்குக் கொண்டு வந்து கொடுத்தான்.அந்த அரசன் சம்பாசுரன்.

அந்த மீனை அரண்மனை சமையல்காரன் நறுக்க முனைந்தான்.மீன் வயிற்றுக்குள் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.அரண்மனைப் பணிப்பெண்ணான மாயாவதி அந்த குழந்தையின் மனைவி.ஆம்...மன்மதனின் மனைவி ரதிதான் அவள்.சம்பாசுரன் ஒருமுறை அவளைக் கடத்தி வந்த போதுதான்..மன்மதனின் மனைவி ரதி என்பதை அவள் வெளிப்படுத்திக் கொள்ளாமல்..மாயாவதி என்ற பெயரில் அரண்மனை பணிப்பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தாள்.சம்பாசுரன், அவள் மீது மோகம் கொண்டிருந்தான்.அவளை அடையத் துடித்தான்.தன் ஆசைக்கு இணங்கச் சொல்லி வற்புறுத்தினான்.

மாயாவதி அவனிடமிருந்து தப்பிக்க, "மன்னா..நான் தற்போது உங்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.எனக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது.எனவே..என்னை யார் மணந்தாலும், விரும்பி அடைந்தாலும் அவர் இறந்து விடுவார்.இந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள சிவனை எண்ணி விரதம் இருந்து வருகிறேன்.தோஷம் நீங்கியதுடன் நான் தங்களை மணந்து கொள்ள எந்தவிதத் தடையும் இல்லை.ஆகவே..தயவு செய்து சிறிது காலம் பொறுத்து கொள்ளுங்கள்" என்று பொய் சொல்லி சம்பாசுரனை ஏமாற்றி வந்தாள்.

அவனும், அவளைத் தொட்டால் உயிர் போய் விடுமே..என்ற பயத்தில் காத்திருந்தான்.

மீன் வயிற்றில் இருந்த குழந்தையை மாயாவதி அன்புடன் வளர்த்து வந்தாள்.நாரதர் ஒருமுறை சம்பாசுரனைப் பார்க்க வந்த போது, மாயாவதியிடம்"மீனின் வயிற்றில் இருந்த இந்த குழந்தை மன்மதனே"எனச் சொல்லி,"இக்குழந்தையை பத்திரமாக வளர்த்து வா.இவன் வாலிபன் ஆனதும் சம்பாசுரனை அழித்து விடுவான்"என்றார்.

அதுபோல மாயாவதி, பிரத்யும்னனை, அறிவு,போரிலும் வல்லவனாக வளர்த்து..மாயக்கலைகளைச் சொல்லிக் கொடுத்து வலிமையுள்ளவன் ஆக்கினாள்.பிரத்யும்னன வாலிபன் ஆனான்.மாயாவதி தன் மனைவியே என அறிந்து கொண்டான்.

இச்சமயம் சம்பாசுரனும் அதை அறிந்து கொண்டான்.அவனுக்கு இச் செய்தியை சொன்னவரும் நாரதரே! அசுர வதம்  நடைபெற வேண்டுமே!

சம்பாசுரன் மன்மதனைக் கொல்ல முற்பட்டான்.இருவருக்கும் நடந்த போரில்  இறுதியில் மன்மதனால் கொல்லப்பட்டான்.

பின் பிரத்யும்னனும்,மாயாவதியும் துவாரகை வந்தனர்.நாரதர் அங்கு வந்து நடந்ததையெல்லாம் விளக்கினார்.பின் இருவருக்கும் மணம் முடித்து வைக்கப்பட்டது.

பிரத்யும்னன் , பின்னாளில் ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியின் மகன் ருக்மவதியை மணந்தான்.அவர்களுக்குப் பிறந்த மகனே காணாமல் போயிருக்கும் அனிருத்தன்.

பிரத்யும்னன் காணாமல் போனது பகையால்..ஆனால்.
அனிருத்தன் காணாமல் போனது காதலால்.

No comments:

Post a Comment