Friday, August 28, 2020

30 - கண்ணனும், எட்டு பட்டமகிஷிகளும்




துவாரகையில் கண்ணனுக்கு ஒரு காதல் கடிதம் வந்தது.

அதை விதர்ப்ப நாட்டு மன்னரின் ஒரே மகளான ருக்மிணி எழுதியிருந்தாள்.

மகாலட்சுமியின் அவதாரமாக பூவுலகில் பிறந்திருந்த அவள், கண்ணனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளில் இருந்து அவன் மீது காதலாகித் தவித்தாள்.

விதர்ப்ப நாட்டு சபைக்கு வரும் பெரியோர்கள் கண்ணனைப் புகழ்வதையும்,அவனது சிறப்புகளை  விவரிப்பதையும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள்.தன் குலதெய்வமான கௌரியை,"கிருஷ்ணனையே எனக்குக் கணவனாக மணம் முடித்து விடு அம்மா" என தினசரி வேண்டுவாள்.

ருக்மிணியின் இந்த விருப்பத்தைக் கேட்ட  தந்தை பீஷ்மனும், தாயும்கூட ஏற்று கொண்டனர்.அவளின் ஐந்து அண்ணன்களான ருக்மி,ருக்மரதன்,ருக்மபாகு,ருக்மகேசன்,ருக்மமாலி என்பவர்களில் ருக்மியைத் தவிர மற்ற நான்கு அண்ணன்கள் கூட..அவள் கிருஷ்ணனை மணப்பதற்கு மறுப்பு சொல்லவில்லை.ஆனால் ருக்மிதான் ,ருக்மிணியின் விருப்பத்தை ஏற்று கொள்ள மறுத்தான்.

அரச மகளான தன் சகோதரி, மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவனை மணப்பது அவனுக்கு விருப்பமில்லை.அது மட்டுமின்றி..கிருஷ்ணனை எதிரியாகக் கருதும் தனது நண்பன் சிசுபாலனுக்கு அவனை மணமுடிக்க ஆசைப்பட்டான்.அத்துடனின்றி சிசுபாலனுக்கு ருக்மிணியை நிச்சயமும் செய்து விட்டான்.எவராலும் அவன் முடிவை மாற்ற முடியவில்லை.

ருக்மிணி கலங்கிப் போனாள்.மனதிற்குப் பிடிக்காத திருமணத்திலிருந்து தப்பவும்,இதயத்திற்குப் பிடித்தவனை மணக்கவும் என்ன வழி என யோசித்தவள்..தனக்கு நம்பிக்கையான ஒரு அந்தணனை, கிருஷ்ணன் மீதான தன் காதலைத் தெரிவிக்க அனுப்பி வைக்க முடிவு செய்தாள்.அந்த அந்தணரிடம் , கண்ணனை விரைவில் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் கொல்லி அனுப்பிணாள்.

அந்த அந்தணன் துவாரகைக்குச் சென்று கிருஷ்ணனை சந்தித்து..ருக்மிணியின் காதலை அவள் வார்த்தைகளாலேயே சொல்லத் தொடங்கினார்..

"புவனசுந்தரா

மற்றவர்களின் புகழ்மொழியால் உன் குணாதிசியங்களைக் கேட்டு, மனத் தவிப்பைப் போக்கிக் கொண்டவள் நான்.உன் திருவுருவத்தை தரிசிப்பதற்கென்றே கண்களைப் பெற்ற பாக்கியசாலி நான்.நாணம் கடந்து உன்னையே நாடி நிற்கிறது என் மனம்.

நல்ல குலத்தில் உதித்து,நற்குணங்களில் சிறந்து விளங்குகிற எந்த இளம்பெண்தான் உன்னை விரும்பாதிருக்க முடியும்?

மனதிற்கு இதமானவரே! நீங்கள் என் கணவர் என இதயத்தில் எழுதி விட்டேன்.என்னை ஆட்கொண்டவரே! என் உயிர் தங்களுக்கே அர்ப்பணம்.எனவே உமக்கு உரியவளான என்னை நீங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு..அருள் புரிய வேண்டும்.சிங்கத்தின் இரையை நரி கவர்ந்து   கொள்வது போல..உமக்கே உரியவளான என்னை வேறு எவரும் தீண்டக்கூடாது.

நான் விரதங்கள் இருந்து..நாராயணனை பக்தியுடன் பூஜித்து அவரை மகிழச் செய்தது உண்மையானால்..கிருஷ்ணா நீயே வந்து என்னை மாலையிடு.நாளை எனக்குக் கல்யாணம் நிச்சயித்து இருக்கிறார்கள்.நீ சேனையுடன் வந்து எதிரிகளை சிதறடித்து..உமக்கு உரிய என்னை முறைப்படி கவர்ந்து சென்று மணந்து கொள்ளவும்.

கல்யாணத்துக்கு முன் தினம் எங்களது குலதெய்வமான பார்வதியை பூஜித்து,மணமகளை எல்லையில் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் செல்வது சம்பிரதாயம்.அந்த சமயத்தில் நீ வந்து என்னைத் தூக்கிச் செல்லலாம்.

தாமரைக் கண்ணா..இது மட்டும் நடக்காமல் போய்..உன் திருவருளை நான் அடையாது போனால்..நிச்சயம் நான் உயிர் துறப்பேன்.பின் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உனக்காகக் காத்திருப்பேன்.

ருக்மிணியின் கடிதத்தில் வெளிப்பட்ட அவளின் இதயம் தோய்ந்த அன்பை கண்ணன் உணர்ந்து கொண்டான்.அந்தணரை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

ருக்மிணியைக் கண்ணன் மணந்து கொள்ள அவனுக்கு எந்த தடையும் இல்லை.ஆனர்த்தம் தேசத்து அரசனான ரைவதனின் மகள் ரேவதி க்கும் பலராமனுக்கும் திருமணம் நடந்துவிட்டது.அடுத்தது கண்ணன் திருமணம்தான் என்ற போது சரியாக ருக்மிணியின் கடிதம் வந்து சேர்ந்தது.

கிருஷ்ணன், அந்தணருடன் ஒரே இரவில் விதர்ப்பதேசத்தின் குண்டினபுரத்திற்கு வந்தான்.அங்குதான் ருக்மிணிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ருக்மிணி கோவிலுக்குப் போகும் நேரம் வந்தது.ஆனாலும் இன்னமும் கிருஷ்ணனிடம் அனுப்பிய அந்தணர் வரவில்லையே எனத் தவித்தாள்.அந்நேரம் அங்கு வந்து சேர்ந்த அந்தணர், "அம்மா..உன்னை ஏற்றுக் கொண்டு அழைத்துப் போக கிருஷ்ணன் வந்து விட்டார்"என காதருகே ரகசியமாகக் கூறினார்.

ருக்மிணி உள்ளம் குளிர்ந்தாள்.நல்ல செய்தி சொன்ன அந்தணர்க்கு என்ன வெகுமதி தருவது எனத் தெரியாததால்..சட்டென அவரை விழுந்து வணங்கினாள் ருக்மிணி.

செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருளை வேண்டி மூவுலகமும் இருக்க,அந்த மகாலட்சுமியே அந்த அந்தணன் காலில் விழுந்தாள் என்றால் அதைவிட வேறு என்ன வெகுமதி வேண்டும் அவருக்கு.

ருக்மிணி சந்தோஷத்துடன் பார்வதி தேவி கோயிலுக்குச் சென்றாள்.தேவியை வணங்கி விட்டு வெளியே வந்தாள்.அங்கே தயாராக ரதத்தில் அமர்ந்திருந்த கண்ணன் அவளது கரம் பற்றி தன் ரதத்தில் ஏற்றிக் கொண்டான்.தேர் துவாரகைக்குப் புறப்பட்டது.

தோழியர்கள் பதறிப் போய் இத்தகவலை அரண்மனையில் தெரிவித்தனர்.

கண்ணன், ருக்மிணியைத் தூக்கிச் செல்வதை அறிந்த சிசுபாலன் ஆத்திரம் கொண்டான்.அவனும் ருக்மிணியின் அண்ணன் ருக்மியும் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களும் கிருஷ்ணனைப் பின் தொடர்ந்து துரத்தினார்கள்.

இந்நிலையில் கிருஷ்ணன் விதர்ப்ப தேசத்திற்கு தனியே சென்றுள்ளான் என அறிந்த பலராமன்,ஆபத்தை எதிர்பார்த்து தன் படையுடன் விரைந்து வந்தான்.எதிரே ருக்மிணியும்,கிருஷ்ணனையும்  பின்னால் துரத்தி வரும் பகைவர்களையும் கண்டான்.

நடுவழியிலேயே யுத்தம் மூண்டது.கிருஷ்ணனும், பலராமனும் சிசுபாலனையும் அவனுடன் வந்திருந்த அரசர்களையும் தோற்கடித்தனர்.அடித்துத் துரத்தினர்.ஆனால் ருக்மியோ விடாது மேலும் மேலும் தொடர்ந்து சண்டையிட்டான்.முடிவில் கண்ணன் ருக்மியின் தேரோட்டியையும்,தேர்க் குதிரையையும் கொன்றான்.ரதத்தை உடைத்து நொறுக்கினான்.ருக்மியை வாளால் வெட்டப் போனான்.அப்போது ருக்மிணி" அண்ணனை வெட்ட வேண்டாம்" என வேண்டினாள்.அதனால், கண்ணன் ருக்மியின் தலை முடியையும், மீசையையும் சிதைத்து அவனை விகாரப்படுத்தினான்.

அவமானமடைந்த ருக்மி, அதன் பிறகு விதர்ப்ப தேசம் செல்லாது, "போஜகடகம்" எனுன் நகரை நிர்மாணித்து அங்கெயே தங்கி விட்டான்.

கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் துவாரகையில் கோலாகலமாகத் திருமணம் நடந்தேறியது.கிருஷ்ணனின் திருமணக் கோலம் இந்த ருக்மிணியுடன் மட்டும் நிற்கவில்லை..பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு பெண்கள் அவன் மனைவியாயினர்.

இதில் கரடிராஜாவான ஜாம்பவானின் மகளை மணந்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு.

ஒருமுறை விபரீத பழி ஒன்று கண்ணன் மீது  ஏற்பட்டது..

சத்ராஜித் என்பவன் சூரியபகவானை  வழிபடும் சிறந்த பக்தன்.அவனது ஈடு இணையற்ற பக்தி கண்டு மகிழ்ந்த சூரியன் "சியமந்தகம்" எனும் அற்புத ரத்தினத்தை அவனுக்குப் பரிசாக அளித்தான்.

சியமந்தக மணியின் சக்தி அலாதியானது.அது இருக்கும் இடத்தில்   செல்வத்துக்கு பஞ்சம் இருக்காது .வியாதிகளோ..அகால மரணமோ ஏற்படாது.தீயசக்திகள் எதுவும் நெருங்க முடியாது.எப்போதும் சுபிட்சமே நிலவும்.

இத்தகைய மகிமை வாய்ந்த மணி, ஒரு தேசத்தின் அரசனிடம் இருந்தால் அந்தத் தேசமே சுபிட்சமாக இருக்கும் என நினைத்த கிருஷ்ணன்,உக்ரசேன மன்னனுக்கு அதைத் தருமாறு கூறினான்.

சத்ராஜித், கிருஷ்ணன் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டு , தன்னிடம் அந்த மணியிருப்பதை  கண்ணன் பொறுக்காது, பொறாமையினால் இப்படிச் சொல்கிறான் என நினைத்து அதைத் தர மறுத்து விட்டான்.

ஆனால் விதி விளையாடியது.

ஒருநாள், சத்ராஜித்தின் தம்பி பிரசேனன் என்பவன் அந்தச் சியமந்தக மணியை அணிந்து கொண்டு காட்டுக்கு வேட்டையாடச் சென்றான்.கொடிய மனம் கொண்ட அவன், தேவையின்றி விலங்குகளின் குட்டிகளையெல்லாம் கொன்றபடி சென்றான்.கோபம் கொண்ட ஒரு தாய் சிங்கம் அவன் மீது பாய்ந்து கடித்துக் கொன்று விட்டது.அகால மரணமே நேராது என்று சொல்லப்பட்ட சியமந்தகமணி, பிரசேனனைப் பொறுத்தவரை அவன் செய்த பாவத்தால் அந்த சமயத்தில் சக்தி இழந்தது.சிங்கம் அம்மணியை எடுத்துக் கொண்டு போனது.அப்போது அந்த வழியே வந்த கரடி ராஜாவான ஜாம்பவான் சிங்கத்தின் வாயில் ஜொலிக்கும் மணியைப் பார்த்து, அதைப் பிடுங்கிக் கொண்டு தன் பிள்ளைக்கு விளையாட்டுப் பொருளாய் இருக்கட்டும் என அதை எடுத்துக் கொண்டு குகைக்குச் சென்றது.

வேட்டைக்குப் போன தன் தம்பி திரும்பாததால் சத்ராஜித், கிருஷ்ணன் மீது சந்தேகம் கொண்டான்.அவன் தன் தம்பியைக் கொன்று சியமந்தகமணியைப் பறித்திருப்பான் என்று கண்ணனின் மீது பழியை சுமத்தினான்.எல்லோரிடமும் அதைச் சொல்லி புலம்பினான்.

இதைக் கேட்ட கண்ணன், அதன் மீது சுமத்தப்பட்டப் பழியினைப் போக்க, முக்கியப் பிரமுகர்கள் சிலரை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்.அங்கு இறந்து கிடந்த பிரசேதனையும்..அங்கிருந்து சற்றுத் தொலைவில் செத்துக் கிடந்த சிங்கத்தையும் கண்டான்.பிரமுகர்கள் பிரசேதனன் சிங்கத்தால் அடிப்பட்டு செத்திருக்கிறான் என தெரிந்து கொண்டனர்.ஆனால்..சியமந்தகமணியைக் காணவில்லை.

அந்த மணியைத் தேடி அலைந்தனர்.ஒரு குகையைக் கண்டனர்.அது ஜாம்பவானின் குகைதான்.மற்றவர்களை வெளியே நிறுத்தி விட்டு..கண்ணன் மட்டும் குகைக்குள் சென்றான்.அங்கு சிறு குழந்தை ஒன்று சியமந்தகமணியை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.கண்ணன் அக்குழந்தையை நெருங்கினான்.

அப்போது உள்ளிருந்து வந்த பணிப்பெண் ஒருத்தி,புதிய மனிதனைக் கண்டதும் அலறினாள்.அந்த சப்தம் கேட்டு வந்த ஜாம்பவான், குழந்தையின் பக்கத்தில் கண்ணனைக் கண்டதும் கோபத்துடன் அவனைத் தாக்கினான்.இருவருக்கும் நீண்ட நேரம் சண்டை நடந்தது. பலவானான ஜாம்பவான் சோர்வடைந்தான்."எளிதில் வெல்ல முடியாதவனான தன்னை இவ்வளவு நேரம் எதிர்ப்பவர் யாராக இருக்கும்"என எண்ணினான்.அது கண்ணன் தான் என உணர்ந்தான்.

"ராமா..என் இதயத்தினுள் வாழ்பவரே! நீங்களா இது?" என் மகிழ்ந்தான்.தன்னை அறிந்து கொண்டு விட்ட ஜாம்பவானை கண்ணன் தழுவிக் கொண்டான்.பின்,

"கரடி ராஜனே! இந்த சியமந்தக மணியினால் என் மீது வீண் பழி ஏற்பட்டுள்ளது.அதைப் போக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன்" என்றான்.

ஜாம்பவான் அந்த சியமந்தக மணியை மகிழ்ச்சியுடன் கண்ணனிடம் ஒப்படைத்தான்.பின், தன் மகளான ஜாம்பவதியையும் அவனுக்கு மணமகளாக அளித்து மகிழ்ந்தான்.

கண்ணன், ஜாம்பவதி, மற்றும் தன்னுடன் வந்த பிரமுகர்களுடன் நகரத்திற்கு வந்து,எல்லோர் முன்னிலையிலும் சத்ராஜித்திடம் மணியை ஒப்படைத்தான்.அது கிடைத்த விவரத்தையும் கூறினான்.

சத்ராஜித் மனம் வருந்தினான்."நிரபராதியான கிருஷ்ணன் மீது சந்தேகப்பட்டு அவனை அபவாதத்திற்கு உள்ளாக்கி விட்டோமே"என்ற குற்ற உணர்ச்சியால் வருந்தினான்.அதற்கான பிராயச்சித்தம் செய்ய தீர்மானித்தான்.

கிருஷ்ணரிடம், தனது மகள் சத்யபாமாவையும் அழைத்துச் சென்று  , சொன்னான்,"கிருஷ்ணா..என்னை மன்னித்துக் கொள்.உன்னைத் தவறாக நினைத்து வீண்பழி சுமத்தி விட்டேன்.அதற்கு பிராயச்சித்தமாக என் மகள் சத்யபாமாவை உனக்கு அளிக்கிறேன்.அவளை மனைவியாக மறுக்காமல் ஏற்றுக் கொள்" என்றான்.

அவனது வேண்டுகோளின்படி சத்யபாமாவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்ட கிருஷ்ணன்,சியமந்தக மணியை சத்ராஜித்திடம் திருப்பிக் கொடுத்து விட்டான்.

இந்நிலையில், அவனுக்கு ஒருநாள் அஸ்தினாபுரத்திலிருந்து தகவல் வந்திருந்தது.காசியில் அரக்குமாளிகையில் சிக்கி மாண்டுவிட்டதாகக் கருதப்பட்ட பாண்டவர்கள் உயிரோடு வந்து விட்டார்கள் என்றும், திருதிராஷ்டிரன் அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியைத் தர ஒப்புக் கொண்டு விட்டதாகவும், கிருஷ்ணனை அங்கு வரவேண்டும் என தருமர் விருப்பட்டதாக தூதுவன் சொன்னான்

கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றான்.பாண்டவர்களையும்,அத்தை குந்தியையும் சந்தித்துப் பேசினா ன்.பாண்டவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்த பகுதி முன் காலத்தில் காண்டவப் பிரஸ்தம் என்று அஸ்தினாபுரத்தின் தலைநகராக இருந்த பகுதி.அது இப்பொழுது பாழடைந்திருந்தது.

கிருஷ்ணன்..தேவலோக சிற்பியான விசுவகர்மாவை அழைத்து,புதிதாக ஒரு நகரை நிர்மாணித்தான்.தேவலோகத்திற்கு நிகராக இருந்தது அந்நகரம்.அதற்கு "இந்திரப் பிரஸ்தம்" எனப் பெயரிட்டான்.பாண்டவர்களுடன் சில நாட்கள் அங்கு தங்கியிருந்தான்.

அப்போது ஒருநாள் கிருஷ்ணனும், அர்ஜுனனும் வேட்டைக்குச் சென்றனர்.மிருகங்களைத் துரத்திக் களைத்துப் போய் நீர் அருந்த நதிக்கரைக்குப் போனார்கள்.அங்கு ஒரு அழகியப் பெண் நின்று கொண்டிருந்தாள்.அர்ஜுனன் "அவள் யார்?" என விசாரித்தான்.

அவள், "ஏன் பெயர் காளிந்தீ..சூரியனின் புத்ல்வி. பகவான் நாராயணனின் அவதாரமான கிருஷ்ணனை மனதிற்குள் விரும்பி, அவரையே திருமணம் செய்து கொள்ள தவமிருக்கின்றேன்" என்றாள்.

கிருஷ்ணன் அவளை ஏற்றுக் கொண்டான்.

மித்ரவிந்தை என்பவள் வசுதேவரின் தங்கை  மகள்.அவந்தி நாட்டு இளவரசி.அவளும் கிருஷ்ணனை விரும்பினாள்.அவள் அண்ணன்கள், கிருஷ்ணனை மணக்கக் கூடாது என தடுத்தனர்.தன்னை எதிர்த்த அவர்களை தோற்கடித்து மித்ரவிந்தையை தூக்கிச் சென்று மணந்தார்.

மித்ரவிந்தையைப் போலவே மற்றொரு அத்தை மகளான பத்ரை என்பவளையும்.மத்ர தேசத்து இளவரசியான லக்ஷ்மணை என்பவளையும் மணந்தான் கிருஷ்ணன்.

இந்த சமயத்தில் கோசல நாட்டு மன்னனானநக்னஜித் என்பவன் தன் மகள் நக்னஜிதேவி எனும் சத்யாவிற்கு ஒரு சுயம்வரப் போட்டி அறிவித்திருந்தார்."என்னிடம் உள்ள ஏழு முரட்டுக் காளைகளையும் எவன் வென்று வீழ்த்துகிறானோ..அவனுக்கே மகளை திருமணம் செய்து வைப்பேன்'என்ற நிபந்தனை வைத்தான்.

ஏராளமான இளைஞர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு இறந்து போயிருந்தனர்.

இந்நிலையில் கண்ணனும் களத்தில் இறங்கினான்.

சீறிப்பாய்ந்த ஏழு காளைகளுக்கும் ..காளைக்கு ஒரு கண்ணனாக தன்னை ஏழு கண்ணன்களாக மாற்றிக் கொண்டான்.காளைகளின் கொம்பைப் பிடித்து இழுத்து, அலைக்கழித்து,அவற்றின் திமில்களைப் பிடித்து அழுத்தி எல்லா காளைகளையும் அடக்கினான். வெற்றி வீரனாக சத்யாவை அடைந்தான்..

இவ்விதமாக, ருக்மிணி,சத்யபாமா,ஜாம்பவதி,காளிந்தீ,சத்யா,பத்ரா,மித்ரவிந்தை,லக்ஷ்மண் என கண்ணனுக்கு எட்டு பேர் பட்டமகிஷி ஆயினர்.

எல்லோரையும் சரிசமமாக நேசித்த கண்ணன் அவர்களுடன் இன்பமாகக் காலம் கழித்தான்.ஆனால் பரமாத்மா..அப்படியே இருந்திட முடியுமா?

ஒருநாள் அழுது புலம்பியபடியே இந்திரன் ஓடி வந்தான்.

"கோவிந்தா...கோபாலா..காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்"என்றான்.

"இந்திரா..எதற்காக இந்த பதற்றம்?" என்றான் கண்ணன்.

"பூமாதேவியின் மகன் என் இந்திரப் பதவியைப் பறித்துக் கொண்டு விரட்டி விட்டான்.தேவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்துகிறான்.அவனது கொடுமை தாங்க முடியவில்லை.நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்"

ஆபத்பாந்தவன் புறப்பட்டான்.

ஆம்..யார் அந்த பூமாதேவியின் மகன்...?

அவன் தான் நரகாசுரன்.


No comments:

Post a Comment