Wednesday, August 26, 2020

29 - ஜராசந்தன்




மகதநாட்டு மன்னன் ஜராசந்தன் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

அவனின் இரண்டு மகள்களான அஸ்தியும்,பிராப்தியும் கண்ணெதிரே கணவனை இழந்து நின்ற காட்சி ..மனதை வருத்தியது.

மதுராபுரி மன்னன் கம்சனுக்குத்தான்..அவனது இரண்டு மகள்களையும் திருமணம் செய்து தந்திருந்தான் ஜராசந்தன்.கண்ணன் கம்சனைக் கொன்றதால்,துயரும், வேதனையும், கண்ணீருமாக நிற்கும் மகள்களின் அவலம்..அவனை கண்ணன் மேல் கோபம் கொள்ள வைத்தது.

இரண்டு இடையச்சிறுவர்கள் என் மாப்பிள்ளையைக் கொன்றார்களா?ஆடு மேய்ப்பவர்கள், என் மகள்களின் தாலியை அறுபட வைத்தார்களா? பழி வாங்காமல் விட மாட்டேன்.அந்த இரண்டு சிறுவர்களையும் என் கைகளாலேயே கொன்று, யாதவ குலத்தையே ஒழிப்பேன்..என முழங்கினான்.

பெரும்படையுடன் மதுராபுரியை முற்றுகையிட்டான்.

ஜராசந்தனின் லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட  படையைப் பார்த்ததுமே கிருஷ்ணன் மனதிற்குள் உற்சாகமானான்.அவதார நோக்கத்திற்கான காலம் வந்து விட்டது என மகிழ்ந்தான்.பலராமனிடம் சொன்னான்.

"அண்ணா..உங்கள் வீரத்துக்கு..பெரும் தீனியுடன் வந்திருக்கிறான் ஜராசந்தன்.இந்த மதுராபுரி நகரையும்..குடிமக்களையும் காக்கும் பொறுப்பு இனி உங்களுக்குத்தான்" என்றான்.

"ஜராசந்தனையும், அவன் படையையும் வெல்வேன்"எனச் சொன்ன பலராமனுடன் கிருஷ்ணனும் புறப்பட..மதுராபுரி படைகள், ஜராசந்தனின் படைகள் மீது பாய்ந்து துவம்சம் செய்தன.பலராமன், கிருஷ்ணன் தந்த உற்சகத்தில் மதுராபுரி வீரர்கள் ஒவ்வொரு பத்து வீரர்களுக்கு சமாகப் போரிட்டனர்.

பலராமனின் தாக்குதலால், ஜராசந்தனின் வில் முறிக்கப்பட்டது.வாள் உடைபட்டு, தேரை இழந்து தெருவில் நின்றான் .பலராமன் அவனை வருணபாசத்தால் கட்டிப் போட்டான்.பின், கிருஷ்ணன் பலராமனிடம் சொல்ல ஜராசந்தனை விடுவித்தான்.

அவமானப்பட்டு, தலை குனிந்து நாடு திரும்பிய ஜராசந்தன் மனதில் வன்மம் அதிகரித்தது.

எதிரியான ஜராசந்தனை அழிக்காமல் அவனை ஏன் கண்ணன் விடுவிக்கச் சொன்னான் என பலராமனுக்குப் புரியவில்லை.

"அண்ணா..ஜராசந்தனை கொல்வதைவிட, அவனது சேனைகளை அழிப்பதுதான் நம் அவதார நோக்கத்திற்கு பலம் சேர்க்கும்.ஜராசந்தனை உயிருடன் விட்டால் ,அவன் மீண்டும்...படைகளைத் திரட்டிக் கொண்டு வருவான்.நமக்கு பூமியின் பாரத்தைக் குறைப்பது சுலபமாக இருக்கும்"என சிரித்தான் கண்ணன்.

கிருஷ்ணன் எதிர்பார்த்தது போல மீண்டும் படையினைத் திரட்டிக் கொண்டு போனான் ஜராசந்தன்.இம்முறையும் அவன் படைகளை அழித்து அவனை விரட்டி அடித்தார்கள்.அப்போதும் ஜராசந்தன் அடங்கவில்லை.சில நாட்களிலேயே மீண்டும் போருக்கு வந்தான்.மீண்டும் தோற்கடிக்கப் பட்டான்.இப்படி ஒருமுறை..இருமுறைகள்அல்ல பதினேழு முறைகள் போர்  ந்டத்தித் தோற்றான்.

ஆனாலும் சலிக்காமல் பதினெட்டாம் முறை படை திரட்டி மதுராபுரியை தாக்க முயன்றான்

அதே சமயம் மதுராபுரி நோக்கி மற்றொரு ஆபத்தினையும் அனுப்பி வைத்தார் நாரதர்.

அந்த ஆபத்தின் பெயர் காலயவனன்.

காலயவனன் ஒரு முரட்டு அரக்கன்.கொரூர புத்தி கொண்டவன்.மிகப் பெரிய படைபலம் கொண்டவன்.உலகையே தன் காலடியின் கீழ் கொண்டு வரும் பேராசை மிக்கவன்.

கோடிக்கணக்கான வீரர்களைக் கொண்ட தனது படைபலத்தால், கண்ணில் படும் ராஜ்ஜியங்களை எல்லாம் தாக்கி அடிமைப்படுத்தினான்.அந்த நாட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி, கொள்ளை அடித்தான்.நகரங்களை தீ வைத்துக் கொளுத்தினான். 

அவனை எதிர் கொள்ள முடியாமல் மன்னர்கள் பலரும் தோற்றுபோய் தலை வணங்கினர்.பலர் அவனுடன் சமாதானம் செய்து கொண்டனர்.இதனாலேயே காலயவனன் ஆணவம் கொண்டான்.பலத்திலும், வீரத்திலும் வல்லவனான தன்னை வீழ்த்த யாருமில்லை என மார் தட்டினான்.

இவன் பகவானின் கையில் சிக்க வேண்டிய பூச்சி என எண்ணினார் நரதர்.

அவனிடம் சென்று, "காலயவனா! நீ மா பெரும் வீரன்.ஆனாலும் மதுராபுரியில் கிருஷ்ணன் பெரிய பலசாலியாம்.மல்லர்களையும்..அவ்வளவு ஏன்..யானையைக் கூட தன் கையினாலேயே குத்திக் கிழித்தவனாம்.அவனை யாரும் வெல்ல முடியாது என்கிறார்கள்.காலயவன் வந்தாலும் அவனிடம் தோற்றுப் போவான்..என்கிறார்கள்."என்றார்.

அவர் எதை எண்ணி இப்படிப் பேசினாரோ..அந்த எண்ணம் நிறைவேறியது..

"நாரதா..நல்லது.அந்த கிருஷ்ணனை வெற்றி கொண்ட பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறேன்"என்றவன் அப்போதே படையுடன் கிளம்பினான் மதுராபுரிக்கு.

பலராமன் ,கிருஷ்ணனிடம் கவலையுடன் கேட்டான்..

"கிருஷ்ணா..ஒரு பக்கம் ஜராசந்தன்.மறுபுறம் காலயவனன்.இருவருக்கும் இடையில் மதுராபுரி.மத்தளம் போல மாட்டிக் கொண்டு விட்டது..என்ன செய்யலாம்?"

இது குறித்து முன்னமேயே யோசித்து வைத்திருந்த கண்ணன், "அண்ணா..இந்த சிக்கலான சூழ்நிலையில் இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுவோமாயின்..மதுராபுரி அழிவது உறுதி.மதுராபுரி மக்களை ஆபத்திலிருந்து காக்க வேண்டுமானால் உடனடியாக இப்போது வெளியேறி வேறு எங்கேனும் குடியேற வேண்டும் "என்றான்.

மேலும் கண்ணன் சொன்னான்,"கடலுக்கு நடுவே..ஒரு நகரை உருவாக்கி மதுராபுரியை அங்குக் கொண்டு சேர்க்கலாம்.பின் திரும்பி வந்து எதிரிகளைப் பார்த்துக் கொள்ளலாம்"

கண்ணனின் யோசனை பலராமனுக்கும் பிடித்திருந்தது.உடனே தேவசிற்பியான விசுவகர்மாவைக் கொண்டு..கடல் நடுவே ஒரு நகரத்தை உண்டாக்கினான் கண்ணன்.தன் மாயசக்தியால் மதுராபுரி மக்களை அந்நகருக்குக் கொண்டு சென்றான்.அந்நகருக்கு துவாரகை என்றும் பெயரிட்டான்.

பின் துவாரகையைக் காக்கும் பொறுப்பை பலராமனிடம் விட்டுவிட் டு மதுராபுரிக்கு வந்தான் கிருஷ்ணன்.காலயவனன் முற்றுகையிட்டிருந்த வடக்கு வாசலைத் திறந்து கொண்டு நிராயுதபாணியாக வெளிப்பட்டான்.

காலயவனன் அவனை ஆச்சரியமாகப் பார்த்தன."இவன்தான் கண்ணனா..ஏதும் ஆயுதங்கள் இன்றி ஏன் வருகிறான்?நேருக்கு நேர் மோதும் எண்ணமோ?அப்படியாயின் நானும் ஆயுதம் ஏதும் ஏந்தாமல் இவனிடம் போர் புரிவேன்"என எண்ணியபடியே..தானும் தேரிலிருந்து இறங்கி கிருஷ்ணனை நோக்கி வந்தான்.

"கிருஷ்ணன் முதலில் தாக்குவானா? அல்லது..நாம் அவனைத் தாக்குவதா?"ஏன யோசித்தபடி நடந்த காலயவனன் ஆச்சரியமும்..அதிர்ச்சியும் அடைந்தான்.

அவன் கொஞ்சமும் எதிர்பாராதபடி,ஓடத் தொடங்கினான் கிருஷ்ணன்.எதிர்பாரா ஏமாற்றத்தால் கோபம் கொண்ட காலயவனன்  கிருஷ்ணனைப் பின் தொடர்ந்து ஓடினான்.வெகுநேரம் ஓடிக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு மலையின் மீது ஏறி அங்கிருந்த குகைக்குள் சென்று மறைந்தான்.

"இனி, இந்த கோழை என்னிடமிருந்து தப்ப முடியாது.குகைக்குள் வைத்தே அவனை நான் கொன்றுவிடுவேன்"என்றபடியே..காலயவனனும் கண்ணனைப் பின் தொடர்ந்து குகைக்குள் சென்றான்.உள்ளே இருள் மண்டிக் கிடந்தது.தட்டுத்தடுமாறி நடந்தான்.கண்கள் இருட்டுக்குப் பழகியப் பின்னர்..சற்று தூரத்தில் யாரோ படுத்திருப்பது தெரிந்ததும்..அவனுக்கு கோபம் ஏற்பட்டது.

மாபெரும் வீரனான தன்னை இத்தனை தூரம் மூச்சிறைக்க ஓடவிட்டு..இங்கே வந்து நிம்மதியாகப் படுத்துக் கொண்டு விட்டானே..என்று சினத்துடன் ஓங்கி ஒரு உதை விட்டான்.படுத்திருந்தவன் உறக்கம் கலைந்து..கண் விழித்தான்.எதிரே நின்றிருந்த காலயவனனைப் பார்த்தான்.அவ்வளவுதான்..காலயவனன் எரிந்து சாம்பலானான்.

காலயவனை..எரித்து சாம்பலாக்கியவன் முசுகுந்தன்.

இஷ்வாகு குலத்தில் தோன்றிய முசுகுந்தன், முன்பொரு சமயம் ,தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்கள் சார்பில் போரிட்டான்.பின் முருகப்பெருமான் சேனாதிபதியானதும், முசுகுந்தன் பூமிக்குத் திரும்பி விட்டான்.பூமியில் அதற்குள் தலைமுறைகள் கடந்திருந்ததால்..அவனுடன் வாழ்ந்தவர்கள் யாரும் இப்போது இல்லை.

பலவருடங்கள் உறங்காமல் போய் விட்டதால்,யுத்தம் செய்து களைத்திருந்த முசுகுந்தான்..யாருடைய தொந்தரவும் இல்லாமல் உறங்க வேண்டும் என விரும்பினான்.அதன்படியே..தேவர்கள் இந்தக் குகையைக் காண்பித்து..அங்கு அவன் ஆயிரம் ஆண்டுகள் தூங்கலாம் என்றும்..அவனை யாராவது தூக்கத்திலிருந்து எழுப்பினால், அவர்கள் முசுகுந்தனின் அக்கினிப் பார்வையால் பொசுங்கிப் போவார்கள் என்று வரம் அளித்துவிட்டு சென்றிருந்தனர்.

கலாயவனன், முசுகுந்தனை..கிருஷ்ணன் என நினைத்து காலால் உதைத்து அவனை எழுப்ப, அவனைப் பார்த்தான் முசுகுந்தன்.அவன் பொசுங்கிப் போனான் .

முசுகுந்தனுக்கு கண்ணன் தரிசனம் தந்து "பக்தியில் சிறந்தவனான நீ..உரிய காலத்தில் என்னை வந்து அடைவாய்" என ஆசிர்வதித்தார்.

முசுகுந்தன் அங்கிருந்து புறப்பட்டு,பதரிகாசிரம் சென்று..நாராயணனை நோக்கி தவம் செய்யத் தொடங்கினான்.

கிருஷ்ணன் மீண்டும் மதுராபுரி சென்று, பலராமனுடன் சேர்ந்து காலயவனனின் கோடிக்கணக்கான வீரர்களையும் போரிட்டுக் கொன்றான்.

அப்போது ஜராசந்தன் பதினெட்டாம் முறையாக, தன் படைகளுடன் வந்து, பலராம, கிருஷ்ணன் முன் நின்றான்.பலராமனும், கிருஷ்ணனும் அவனது படையை எதிர்க்க முடியாதவர்கள் போல பின் வாங்கி ஓடினர்.

ஜராசந்தன் வெற்றிப் பெருமிதத்துடன், அவர்களைத் துரத்த இருவரும் ப்ரவர்ஷணம் எனும் மலையின் மீது ஓடி ஒளிந்து கொண்டனர்.ராம கிருஷ்ணர்களைக் கண்டு பிடிக்க முடியாத ஜராசந்தன் அந்த மலையைச் சுற்றிலும் கட்டைகளை அடுக்கி தீ மூட்டினான்.அந்தத் தீயில் ராம..கிருஷ்ணர்கள் அழிந்து போயிருப்பார்கள் எனும் எண்ணத்தோடு நாடு திரும்பினான்.

ஆனால்..பலராமனும், கிருஷ்ணனும் மலையிலிருந்து கீழே குதித்து பத்திரமாக துவாரகை சென்று சேர்ந்து விட்டார்கள் என அப்போது அவன் அறியவில்லை.

No comments:

Post a Comment