Monday, August 10, 2020

15 - யயாதியின் கதை



தாமரைப் பூக்களும்,அல்லி மலர்களும் பூத்திருக்கும் அக்குளத்தில்..சில அழகானப் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர்.

அப்பெண்களில் ஒருத்தி..அசுரர்களின் மன்னனான விருஷனின் மகள் சர்மிஷ்டை.இன்னொரு பெண் அசுரர் குல குருவான சுக்ராச்சாரியாரின் மகளான தேவயானி.உடன் இருந்த பெண்கள் சர்மிஷ்டையின் அரண்மனைத் தோழிகள்.

ஒருவர் மீது ஒருவர் நீரை அள்ளித்தெளித்துக் கொண்டும், போட்டிப் போட்டி நீந்திக் கொண்டும் இருந்தனர்.இருள் சூழும் நேரமாகவே,அனைவரும் கரையேறி குளக்கரையில் வைத்திருந்த தங்கள் ஆடைகளை எடுத்து அணியத் தொடங்கினர்.அப்போது சர்மிஷ்டை தவறுதலாக தேவயானியின் உடைகளை எடுத்து உடுத்திக் கொண்டாள்.

அசுரர் குல பிறப்பான தேவயானிக்கு அதனைக் கண்டு கோபம் உண்டானது.சர்மிஷ்டை தன் தோழி என்றும் பாராது"தேவர்களும் வணங்கும் அந்தண குலத்தவள் நான்.அசுரர்களின் குருவின் மகள் நான்.இதை மறந்து..வேள்விப் பொருள்களைக் கவ்விச் செல்லும் நாய்களைப் போல...புனிதம் தெரியாமல் என் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டாயே!"என்றாள்.

தேவயானியின் வார்த்தை கேட்டு சர்மிஷ்டையும் கோபமுற்றாள். பதிலுக்கு அவளும்..

"நாக்கை அடக்கு..அசுரர் மன்னனான என் தந்தையிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் அந்தணர் குலத்தில் பிறந்த உனக்கு இவ்வளவு ஆணவமா? எனக்குப் பணிப்பெண்ணாக சேவை செய்ய வேண்டிய நீ.என்னைக் கேவலமாகப் பேசுகிறாயா?"என்று சொல்லியபடியே தேவயானியிடம் இருந்த ஆடையைப் பிடிங்கிக் கொண்டு அவளை பக்கத்துக் கிணற்றில் தள்ளி விட்டாள்."கிணற்றுநீரில் விரைத்துப் போ" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

முழுதுமாக இருள் சூழ்ந்துவிட்டது.கிணற்றில் இருந்த தேவயானி, "என்னைக் காப்பாற்ற யாருமில்லையா?" என்று கூவினாள்.

அப்போதுதான் அங்கு வந்தான் யயாதி.இவன் நகுஷனின் மகன்.நகுஷனுக்குப் பின் இவனே நாட்டை ஆண்டு வந்தான்.

கானகத்தில் வேட்டையாடிக் களைத்து,தாகத்துடன் கிணற்றுக்கு அருகில் வந்த யயாதி ஒரு பெண்ணின் அலறலைக் கேட்டு திடுக்கிட்டான்.கிணற்றினை எட்டிப் பார்த்தான்.உள்ளே இளம் பெண் ஒருத்தி கிடப்பதைக் கண்டு...தன் மேலாடையை எடுத்து அணிந்து கொள்ள வீசினான்.
பின் அவள் கைகளைத் தூக்கிக் காப்பாற்றினான்.

"பெண்ணே நான் மன்னன் யயாதி நீயார்?" என்றான்.

தேவயானி வெட்கத்துடன் "அரசே! நான் சுக்ராச்சாரியாரின் மகள்.பெயர் தேவயானி.என் தோழிகளால் கிணற்றில் தள்ள பட்டேன்.என் கைகளைப் பற்றி என்னைத் தூக்கிவிட்ட நீங்கள் தான் என்னை மணந்து கொள்ள வேண்டும்" என்றாள்.

தேவயானியின் அழகினைக் கண்டு,அவள் மீது யயாதி காதல் கொண்டான்.அவளை மணந்து கொள்ள சம்மதித்தான்.

வீடு திரும்பிய  தேவயானி,தந்தை சுக்ராச்சாரியாரிடம் சர்மிஷ்டைப் பற்றிக் கூறினாள்.சுக்ராச்சாரியாரும் இனி விருஷனின் தேசத்தில் இருக்கக்கூடாது என மகளுடன் புறப்பட்டார்.

அசுரர்கள் மூலம் செய்தியைக் கேள்விப்பட்ட அசுர மன்னன் விருஷன், சுக்ராச்சாரியாரை வழியில் தேடிச் சென்று"போக வேண்டாம்" என வேண்டினான்.

சுக்ராச்சாரியும், "என் மகள் தேவயானியின் விருப்பமே என் விருப்பம்.பாதிக்கப்பட்டவள் அவள்.அவள் சொன்னால் நான் இங்கேயே இருக்கத் தயார்" என்றார். 

மன்னன் தேவயானியிடம், "அம்மா..உன்னையும் நான் என் மகளாகவே நினைக்கின்றேன். என் மகள் சர்மிஷ்டை செய்தது தவறுதான்.அதற்கு என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வாள்.நீயும், உன் தந்தையும் வெளியே போக வேண்டாம்" என வேண்டினான்.

தேவயானி மன்னனிடம்,"சரி.என் தந்தை குல குருவாய் இங்கு நீடிக்க வேண்டுமானால்,,நான் விதிக்கும் நிபந்தனையை ஏற்க வேண்டும்.நான் திருமணமாகி..என் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது, சர்மிஷ்டை எனது பணிப்பெண்ணாக கூட வர வேண்டும்" என்றாள்.

குருவையும், குரு  புத்திரியையும் சாந்தப் படுத்த மன்னன் விருஷனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.

 யயாதியை, தேவயானி மணந்து கொண்டாள்.சர்மிஷ்டையும், தேவயானியின் பணிப்பெண்ணாக அவளுடன் சென்றாள்.

அப்போது சுக்ராச்சாரியார் யயாதியை அழைத்து எச்சரித்தார்..

"யயாதி, என் மகள் மீது நான் மிகுந்த பாசம் வைத்து இருப்பதால்தான் அவள் விருப்பபடி க்ஷத்திரியனான உனக்கு அவளை மனம் செய்து கொடுத்தேன்.அவள் சிறிது துன்பம் அடைந்தாலும் என் மனம் தாங்காது,உன் பிரியமும், பாசமும் அவளிடத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.அவளுடன் வரும் சர்மிஷ்டையின் மேல் நீ எப்போதும் நாட்டம் கொள்ளக்கூடாது.இது என் கட்டளை" என்றார்.

சுக்ராச்சாரியாரின் கட்டளை சர்மிஷ்டைக்கும் தெரிந்தது.எப்போதும் தடுக்கப்பட்ட,மறுக்கப்பட்ட ஒன்றை அடையத்தானே மனம் நாட்டம் கொள்கிறது.சர்மிஷ்டைக்கும் அதுதான் நேர்ந்தது.
  மன்னன் யயாதியின் மேல் அளவு கடந்த காதல் கொண்டாள்.மனதிற்குள்ளேயே வைத்து மருகினாள்.

மன்னன் யயாதி,தேவயானியுடன் இனிமையாகக் காலம் கழித்தான். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன.இதையெல்லாம்  கண்டு சர்மிஷ்டை மனம் புழுங்கினாள்.தனக்கும் குழந்தைகள் வேண்டும் என ஏங்கினாள்.

ஒருநாள், தன் ஆசையை யயாதியிடம் சொல்லி அழுதாள். யயாதி அவள் மீது இரக்கம் கொண்டான்.இரக்கம் பாசமாகி, பாசம் காதலானது.

யயாதியும், சர்மிஷ்டையும் யாருக்கும் தெரியாது இணைந்தனர்.சந்தோஷமாய் இருந்தனர்.அவர்கள் காதலை நீண்ட நாட்கள் மறைக்க முடியவில்லை.சர்மிஷ்டையு ம் குழந்தைகள் பெற்றாள்.சர்மிஷ்டை, யயாதி உறவு தேவயானிக்குத் தெரிந்தது.

தேவயானி கோபமாய், சுக்ராச்சாரியாரிடம் சென்று அழுதாள்.கோபம் கொண்ட சுக்ராச்சாரியார்,யயாதியிடம் "யயாதி..நான் சொன்னதை மறந்து என் மகளுக்குத் துரோகம் செய்து விட்டாய்.இளமைத் திமிரினால்தான் சர்மிஷ்டையுடன் சல்லாபம் புரிந்தாய்.இதோ..இப்போதே இந்த இளமையை இழந்து முதுமையடைவாயாக" எனசாபமிட்டார்.

யயாதி கிழட்டுத்தன்மையடைந்தான்.

யயாதி சுக்ராச்சாரியாரிடம் வேண்டினான்..

"ரிஷியே!உங்கள் மகள் மீது எனக்கு இன்னமும் ஆசை குறையவில்லை.இன்னமும் நான் இல்லறத்தில் பூரண திருப்தியடையவில்லை.அதற்குள் என்னை இப்படி சபித்துவிட்டீர்கள்.என் இளமையைத் திருப்பித் தர வேண்டும்"

"மன்னா..கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற முடியாது.ஆனால், ஒரு வழி உள்ளது.உனது முதுமையை எந்த இளைஞனாவது பெற்றுக் கொண்டால் நீ இள்மை அடைவாய்"என்றார்.

மனிதன் வாழ்வில் அஞ்சுவது முதுமைக்கே! அதை ஒரு இளைஞன் எப்படி விரும்பி ஏற்பான்.?

பொன்னும், பொருளும் ஏராளமாய்க் கொடுப்பதாகக் கூறியும் முதுமையைப் பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை

கடைசியில் யயாதி, தன் மகன்களிடம் அவர்கள் இளமையை யாச்த்தான்.கடைசி மகனான பூரு தந்தைக்கு இளமையைத் தர ஒப்புக் கொண்டான்.மகன் இளமையினைத்  தந்ததால் யயாதி யௌவனத்தைத் திரும்பிப் பெற்றான்.

பின் , பல ஆண்டுகள் மனைவியிடம் இன்பத்தையடைந்து  விட்ட யயாதிக்கு ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட..தன் யௌவனத்தைத் திரும்பி தன்  மகனுக்குக் கொடுத்துவிட்டு தன் முதுமையைப் பெற்றுக் கொண்டு கானகம் சென்று தவமிருந்து முக்தியினை அடைந்தான்.

யயாதியின் கதையை பரீட்சித்துக்கு சொல்லி முடித்தார் சுகர் மகரிஷி.

"தாங்கள் வாமன அவதாரம் பற்றி சொல்ல ஆரம்பித்து யயாதியின் கதையுடன் முடிந்தது.வாமன அவதாரம், வராக அவதாரம்..இதற்கெல்லாம் முன்னால் திருமால் முதன் முதலாக எடுத்த அவதாரம் மச்ச அவதாரம்.அது பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.பகவான் ஏன் மச்ச அவதாரம் எடுத்தார்..அதன் நோக்கம் என்ன? என்று சொல்லுங்கள் மகரிஷியே!"என்றான் பரீட்சித்.

"திருமாலின் திரு அவதாரப்பெருமையைச் சொல்வதைவிட வேறு சந்தோஷம் எதில் இருக்கிறது" என்ற சுகர்..சொல்ல ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment