Wednesday, August 19, 2020

23 - கோபியர் கொஞ்சும் ரமணா...




கிருஷ்ணனும்,பலராமனும் இப்போது வாலிப வயதை எட்டியிருந்தார்கள்.ஆணழகர்களாக ஜொலித்தார்கள் கிருஷ்ணனின் பேரழகில் உள்ளத்தைப் பறி கொடுத்தனர் கோபிகைகள்.

காதல் வயப்பட்டு தூக்கத்தைத் தொலைத்தார்கள்.பித்துப்பிடித்தாற் போலத் திரிந்தனர்.கண்ணன் ஒருவனாலேயே பிருந்தாவனம் சொர்க்கலோகமாகத் தெரிந்தது அவர்களுக்கு.

கண்ணன் தன் நண்பர்களுடன் அதிகாலை பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப் போய் விடுவான்.பசுக்களை மேயவிட்டு,தன் புல்லாங்குழலை எடுத்து,இனிமையாக ஊதத் தொடங்கிவிடுவான்.

தலையில் மயில் தோகையும், காதுகளில் அழகிய குண்டலங்கள்.இடுப்பில் பட்டும் ,பீதாம்பரமும், கழுத்தில் வைஜயந்தி மாலையும்,சிவந்த இதழ்களில் புல்லாங்குழலுமாக அவன் வேணுகானம் இசைக்கும் போது..உலகமே அக்கணம் ஸ்தம்பித்துவிடும்.

பசுக்கள் மேய மறந்து,தன் காதுகளை விறைத்துக் கொண்டு இசையில் லயித்துவிடும்.கன்றுகளும் கூட தாயிடம் பால் குடிப்பதையும்,புற்கள் மேய்வதையும் நிறுத்தி சிலைபோல ஆகிவிடும்.பறவைகளும், மான்களும் ஏன் மரங்கள் கூட...சகல ஜீவராசிகளுமே உறைந்து போய்விடும்.

யமுனை நதிக்கரையில் கண்ணன் ஊதும் வேணுகானம் காற்றில் மிதந்து வந்து பிருந்தாவனத்துக்குள்ளும் நுழைந்து தவழ்கிறது.கோபியர்களின் இதயம் இசைப் பிரவாகம் மிதக்க..அவர்கள் கண்கள் சொக்கி கிறங்கிப் போகிறார்கள்.

"முதலில் கண்ணனிடம் இருந்து புல்லாங்குழலைப் பிடுங்க வேண்டும்" என் கிறாள் ஒருத்தி

"ஆம்..அது நம் வேலைகளைக் கெடுக்கிறது" என்கிறாள் மற்றொருத்தி.

"அது மட்டுமில்ல..அந்தப் புல்லாங்குழல்தான் எப்போதும் அவனோடு நெருக்கமாக இ ருக்கிறது.அவனது இதழ் அமுதத்தை சுவைத்துக் கொண்டே இருக்கிறது" எனபொறாமையில் புலம்பினாள் இன்னொருத்தி.

"ஆனாலும்..என்ன செய்வது?கிருஷ்ணனின் வேணுகானத்தை கேட்காமலும் இருக்க முடியவில்லை.அந்த இசை என் உள்ளத்தில் ஊடுருவி..எத்தனை விஷயங்களைச் செய்கிறது..தெரியுமா?" சற்றே வெட்கத்துடன் சொல்கிறாள் ஒருத்தி.

கிருஷ்ணனை,பிருந்தாவனத்தில் ஒவ்வொரு கோபியரும் காதலித்தனர்.ஒவ்வொரு நாளும்..ஒவ்வொரு நொடியும் அவனை நினைத்து..அவனுடன் தங்களை இணைத்து..ஆனந்தமும்,அவஸ்தையுமாகக்
காலம் கழித்தார்கள்.

அது ஒரு மார்கழி மாத பனிக்காலம்.

பிருந்தாவனத்தில் கோபியர்கள் "காத்யாயனி விரதம்" எனும் நோன்பினை  நோற்றார்கள்.

அத்தனைப் பேருக்கும் ஒரே பிரார்த்தனைதான்.

"காத்யாயனி தேவி! உலக நாயகி..நந்தகோபருக்கு மகனான கிருஷ்ணனை எனக்கு கணவனாக வாய்த்திட அருள் செய்"என்ற பிரார்த்தனையுடன் விரதத்தைக் கடைப் பிடித்தனர்.

கிருஷ்ணனை அடைவதற்கு அவர்கள் விரதம் இருந்ததில் தப்பில்லை.ஆனால்..அதைச் செய்ததில்தான் சிறு தவறிழைத்துட்டனர்.

நோன்பு முடியும் நாள்..அவர்கள் அனைவரும் யமுனைக்குச் சென்றார்கள்.தங்கள் ஆடைகளை அவிழ்த்து  கரையிலேயே வைத்து விட்டு
வெற்றுடம்புடன் நதியில் இறங்கிக் குளித்தார்கள்.

அப்போது கிருஷ்ணன் அங்கு வந்தான்.கோபியர்களின் ஜலக்ரீடையைப் பார்த்தான்.அவர்கள் ஆடையின்றி நீராடுகிறார்கள் என்பது தெரியவர..எல்லா கோபியர்களின் ஆடைகளையும் எடுத்துக் கொண்டு கடம்ப மரத்தில் ஏறி..அதன் கிளை மீது அமர்ந்து கொண்டான்.

கிருஷ்ணன் இதைச் செய்ய குறும்புத்தனம் மட்டுமே காரணமில்லை.வேறு ஒரு காரணமும் இருந்தது.

மரத்தின் மீது இருந்த கிருஷ்ணன்,"இன்னுமா உங்கள் நீராடல் முடியவில்லை"என்று குரல் கொடுத்தான்.

நிமிர்ந்து பார்த்த கோபியர்கள்..மரக்கிளையில் கண்ணன் ஆடைக்குவியலுடன் இருப்பதைக் கண்டனர்.கரையைப் பார்த்தார்கள்.அவர்கள் அவிழ்த்து வைத்திருந்த அவர்களின் ஆடைகளைக் காணவில்லை.திடுக்கிட்டனர்.அவர்கள் ஆடைகளை கண்ணன் கைகளில் வைத்திருக்கிறான்..என் அறிந்து கோபத்துடன் சீறினர்

"கண்ணா! இது என்ன விளையாட்டு..எங்கள் ஆடைகளைத் திருப்பிக் கொடு"என்றாள் ஒருத்தி.

"கண்ணா! உன் குறும்புத்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது.எங்களைக் கோபப்படுத்தாமல் ஆடைகளைக் கொடுத்து விடு"என்றாள் மற்றொருத்தி.

"நான் தருகிறேன்.எல்லோரும் கரையேறி வந்து என்னிடமிருந்து ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்"என்றான் கிருஷ்ணன்.

"கேலி செய்கிறாயா?ஆடையில்லா வெறும் மேனியாய் இருக்கிறோம்.ஆண்பிள்ளையான உன்னிடம் வந்து எப்படி எங்களால் ஆடைகளைப் பெற முடியும்?தயவு செய்து எங்கள் ஆடைகளைக் கொடுத்து விடு"என்றனர் கோபியர்கள்.

"என் அன்பு கோபியர்களே! ஆடையில்லாமல் நீராடக்கூடாது என்பது சாஸ்திரம்.அதுவும் காத்யாயனி விரதம் மேற்கொண்ட நீங்கள் இப்படி நீராடியதால்..விரதத்தின் பலனை இழந்து விடுவீர்கள்.தவிர..தோஷமும் உண்டாகும்.அதிலிருந்து விடுபட வேண்டுமானால்..நான் சொல்வது போல செய்யுங்கள்.இரு கைகளையும் தலைக்கு மேலே குவித்து, எனக்கு அஞ்சலி செலுத்தியபடி..நீரிலிருந்து எழுந்து வந்து ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான் கண்ணன்.

கோபமும், பயமும் ,வெட்கமுமாக கோபியர்கள் திண்டாடினர்.குளிர் நீரிலேயே..கழுத்துவரை நின்று கொண்டு..வெட வெடக்க''கண்ணனை வேண்டினார்கள்..கெஞ்சினார்கள்..கொஞ்சினார்கள்..சீறினார்கள்..சினந்தார்கள்.

கண்ணன் உறுதியாக இருந்தான்.

கோபியர்கள், கண்ணன் சொன்னதன் அர்த்தத்தை யோசித்தனர்.மனம் தெளிந்தனர்.அவன் கூறியபடியே..தலைக்கு மேல் கை கூப்பி தொழுது அவனிடம் வந்து ஆடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

கண்ணன் அவர்களுக்கு வாக்களித்தான்..

"கோபியர்களே!உங்கள் விருப்பங்கள் எனக்குத் தெரியும்.நோன்பின் பலனை விரைவிலேயே நீங்கள் அடைவீர்கள்.சரத்கால இரவுதனில் என்னுடன் கூடி ஆனந்தம் பெறுவீர்கள்.என்னிடம் காதல் கொண்ட உங்கள் மனங்களில் மற்ற ஆசைகள் எதுவும் இனி வராது"என அருள் வழங்கினான்.

கோபியர்கள் உடைகளை அபகரித்த கிருஷ்ணலீலை சொல்லும் தத்துவம் மிக எளிதானது.

கோபியர்கள், "தான் வேறு..கிருஷ்ணன் வேறு"என நினைத்த போது தான் வெட்கம், பயம் போன்ற உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப் பட்டனர்.பின் மதுசூதனின் சொன்ன பிறகு மனம் தெளிந்தனர்.

"கண்ணன் வேறு நான் வேறில்லை.கண்ணனே நான்.நானே கண்ணன்" கோபியர்கள் இதை உணர்ந்த பிறகு அவர்களுக்கு அச்சம் இல்லை..நாணம் இல்லை.

ஜீவாத்மா..பரமாத்மாவை உணர்ந்து..அதனுடன் ஐக்கியப்பட்டுவிட்டது.

கிருஷ்ணனுடைய இந்த லீலையின் நுட்பத்தை உணர்ந்த மனம் காமத்தை வென்று விடுகிறது.பரமானந்தத்தில் திளைத்து விடுகிறது.


No comments:

Post a Comment