Monday, August 17, 2020

20 - கோகுலத்தில் கண்ணன்




குழந்தைகள் பலராமனும், கிருஷ்ணனும் தவழத் தொடங்கினர்.

வீட்டில் எந்த ஒரு பொருளையும் கீழே வைக்க முடியவில்லை. தட்டிக் கவிழ்த்து,கொட்டி களேபரம் செய்தார்கள்.

யசோதையும், ரோஹிணியும் அதைக் கண்டு ரசித்தனர்.குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தனர்.

தவழ்ந்த குழந்தைகள், நின்று,நடந்து ஓடத் தொடங்கினர்.கோகுலத்தில் இருந்த மற்ற சிறுவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடினார்கள்.கிருஷ்ணனோ குறும்புத்தனம் அதிகம் உடையவனாகத் திகழ்ந்தான்.

பசுக்களிடம் பால் கறப்பதற்கு முன்னாலேயே..கன்றுகளை அதனிடம் அவிழ்த்து விடுவது..கறந்து இருக்கும் பாலை யாருக்கும் தெரியாமல் குடித்து  விடுவது..வெண்ணெய்,பாலை எடுத்துக் கொண்டு ஓடி விடுவது என அவனது குறும்பு செயல்கள் அதிகரித்துக் கொண்டே போனது.

கோபிகைகள் இதைக் கண்டித்தால், முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சிணுங்குவான்.கண்கள் கலங்குவது போலத் தோன்றும்.இதைப் பார்த்ததுமே கோபிகைகள் மனம் தாளாது அவனை சமாதானப் படுத்த வெண்ணெய் தருவார்கள்.அப்போது அவன் சிரிக்கும் மாயப் புன்னகையைப்  பார்த்தால் நம் மனம் அப்படியேத் திருட்டுப் போய் விடும்.

ஒருநாள்..கண்ண்னைன் சேஷ்டைகளை கோபிகைகள் யசோதையிடம் போய்ச் சொன்னார்கள்.
"யசோதை! உன் பிள்ளை கிருஷ்ணனை கொஞ்சம் கண்டித்து வை.அவனுடைய குறும்புகள் எல்லை மீறிப் போகன்றன.யாருமில்லா வீட்டில் தயிர்,வெண்ணெய் திருடித் தின்கின்றான். தான் சாப்பிடுவது மட்டுமில்லாமல் குரங்குகளுக்கும் அவன் அள்ளி அள்ளிக்  கொடுக்கிறான்.இவன் கைகளுக்கு எட்டாமல் உறியில் எடுத்து வைத்தாலும், உரல்கள்,முக்காலி போன்றவற்றை அடுக்கி, அதன் மீதேறி பானைகளில் ஓட்டைப் போட்டு எடுத்து உண்கின்றான்.வீட்டில் சாப்பிட எதுவும் இல்லையென்றால்..இருக்கும் குழந்தையைக் கிள்ளி அழவிட்டு ஓடுகிறான்'

கோபிகைகள் சொன்னதை கேட்ட யசோதை, கிருஷ்ணனைப் பார்க்க, அவனோ பரம சாதுவாய் நின்று கொண்டிருந்தான்."இந்த சமர்த்துப் பிள்ளையா இத்தனை விஷமங்கள் செய்கின்றான்"  என யசோதையால் நம்பமுடியவில்லை என்றாலும், அவர்களிடம், "நான் கண்டித்து வைக்கின்றேன்' என அவர்களை அனுப்பி வைக்கின்றாள்.

அவர்கள் போனதும், "ஏன்டா கண்ணா..நீயா இப்படி செய்யற?" என்று கேட்க..

"இல்லைம்மா" என்கின்றான் கிருஷ்ணன்.

பின் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள்..என குழம்பினாள் யசோதை.

ஒருநாள் பலராமனும், மற்ற சிறுவர்களும் ஓடி வந்து..'கிருஷ்ணன் மண்ணைத் தின்கிறான்" என்றனர்.

யசோதை கோபத்துடன் கிருஷ்ணனை அழைத்து,"உண்மையைச் சொல்..மண்ணத் தின்றாயா?" என்றாள்.

"இல்லையம்மா"

"ஆனால்..நீ மண்ணைத் தின்றதாக பலராமனும், மற்ற குழந்தைகளையும் சொல்கிறார்களே"

"அவர்கள் விளையாட்டிற்கு சொல்கிறார்கள்.நீ வேண்டுமானால் பார்" என்ற படியே கிருஷ்ணன் யசோதனையின் முன் வாயை "ஆ" எனத் திறந்து காட்டினான்.

வாயப் பார்த்த யசோதை பிரமித்தாள்.அவளுக்கு மயக்கமே வரும் போல ஆகிவிட்டது.கண்ணனின் வாயில் பிடி மண்ணை எதிர்பார்த்தவளுக்கு அண்ட சராசர பிரபஞ்சமே தெரிந்தது.அதனுள்..

உயர்ந்த மலைகள்,கடல்கள்,ஆகாயம்,நட்சத்திரங்கள்,பூலோகம்,கோகுலம்,கோபிகைகள்..அட..அதோ யசோதையும்..அவள் முன்னால் வாயைத் திறந்தபடி கிருஷ்ணனும்..

இது கனவா..இல்லை மாயஜாலமா..இல்லை கிருஷ்ணனுக்கு இவ்வளவு சக்தியா? கண்ணனைக் கை கூப்பித் தொழுதாள்.உட னே கண்ணன் தன் தெய்வீக காட்சியை மறைத்துக் கொண்டு  மாயையில் யசோதைப் பார்த்த அனைத்தையும் மறக்க வைத்தான்.

யசோதை தான் கண்டது எதுவும் நினைவின்றி, கள்ளமில்லா சிரிப்போடு தன் முன்னே நிற்கும் கிருஷ்ணனை வாரி அணைத்துக் கொண்டாள்.

யசோதை கிருஷ்ணனைக் கூப்பிட்டுக் கண்டிப்பாள் என நினைத்தால் கொஞ்சுகிறாளே என பலராமனும், குழந்தைகளும்..குழம்பியபடியே விளையாடச் சென்று விட்டார்கள்.யசோதையும், ரோஹிணியின் வீட்டிற்குச் சென்றாள்.

கிருஷ்ணன் மட்டும் வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தான்.அப்போது பழம் விறபவள் ஒருவள், "பழம் வாங்கலையோ பழம்" என கூவியபடியே வந்தாள்.

கிருஷ்ணன் அவளைக் கூப்பிட்டு, "அம்மா..எனக்குப் பழம் தருவியா?" எனக் கேட்டான்.

அவளுக்கு, குழந்த மிகுந்த ஆசையுடன் மழலையில் கேட்டது ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

"ஓ! தரேனே.நீ எனக்கு என்ன தருவே"என்று கேட்டபடியே கிருஷ்ணனின் பிஞ்சு கைகளில் பழங்களைத் திணித்தாள்.

"உனக்கு என்ன வேணும்" என்றான் கண்ணன்..

"நீ என்ன கொடுத்தாலும் சரி"

குழந்தை கிருஷ்ணன் கையில் பழங்களுடன்   , பிஞ்சுக் கால்களுடன் தள்ளாடிய படியே நடந்து போய் பழங்களை கீழே வைத்து விட்டு தானிய பானைக்குள் கைவிட்டு இரண்டு கைகள் நிறைய தானியங்களை எடுத்துச் சென்றான்.

தானியங்களை எடுத்ததில் பானைக்குள்ளேயே பெரும்பகுதி விழ, உள்ளிருந்து வெளியே வருவதற்குள் வழியெங்கும் தானியங்கள் சிந்தியபடியே வந்தது.பழக்காரியிடம் வந்த போது சில தானியங்களே இருந்தது.

பழக்காரி, குழந்தையின் செயலிலே மனம் மகிழ்ந்து ,அந்த சில தானியமணிகளை திருப்தியுடன் வாங்கிக் கூடைக்குள் போட்டுக் கொண்டு புறப்பட்டாள்.கூடையில் அவள் வாங்கி போட்ட தானியங்கள் அனைத்தும் ரத்தினங்களாக மாறிவிட்டிருந்தன.

கிருஷ்ணன் அத்தனை ஆசையுடன் பழக்காரியிடம் வாங்கிய பழம் நாவற்பழம்.அவனைப் போலவே கரிய நிறப்பழம்.அவனைத் துதிப்பவர்கள் மனதில் தங்கியிருக்கும் கிருஷ்ணனைப் போல..சாப்பிடுபவர்கள் நாக்கில் தன் நிறத்தைப் பதிக்கும் பழம்.

கிருஷ்ணன் பழங்களை எடுத்துக் கொண்டு..பின்புறம் தோட்டத்திற்கு சென்று அமர்ந்து..சுவைத்து சாப்பிடத் தொடங்கினான்.

அப்போது அவனுடைய பார்வை..தோட்டத்தில் இருந்த இரண்டு மரங்களின் மீது விழுந்தது.அவற்றைப் பார்த்து புன்னகைத்தான்.

அடுத்தநாள் யசோதை,தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.கிருஷ்ணன் அவளருகே வந்து மெல்ல சிரித்தான்.உரசினான்.பின், யசோதையின் மடியில் அமர்ந்தான்.

அவன் இப்படி செய்தால்...தாயிடம் பாலருந்த விரும்புகிறான் என்று பொருள்.யசோதை அதை புரிந்து  கொண்டு.."நீ எதற்கு வந்து நிற்கிறாய் எனத் தெரியும் கண்ணா" எனக் கொஞ்சிய படியே அவனை மடியின் மீது போட்டுக் கொண்டு பால் கொடுக்கத் தொடங்கினாள்.

அப்போது அடுப்பில் பால் பொங்கும் சப்தம் கேட்டதால், குழந்தையை கீழே இறக்கி விட்டுவிட்டு சமையலறைக்கு விரைந்தாள்.

பால் குடித்துக் கொண்டிருக்கும் போது பாதியில் இறக்கி விடப்பட்ட கண்ணன் கோபம் கோண்டான்.விசும்பலும்,அழுகையுமாக, ஒரு மத்தை எடுத்து பக்கத்திலிருந்த வெண்ணெய் பானையை ஆத்திரத்தில் உடைத்தான்.வழிந்த வெண்ணெயை எடுக்க ஓடோடி வந்த ஒரு குரங்கிற்குக் கொடுத்து விட்டு,தானும் உண்ணத் தொடங்கினான்.

சமையலறையிலிருந்து வந்த யசோதை, கண்ணனின் கண்களில் விஷமத்தைக் கண்டாள். அதை உள்ளூர ரசித்தாலும் காட்டிக் கொள்ளாது பொய்க் கோபத்துடன், "கண்ணா..வர வர உன் குறும்புத்தனத்திற்கு எல்லையில்லாமல் போய் விட்டது.உன்னை தண்டித்து வழிக்குக் கொண்டு வர வேண்டும்"என்றபடியே ஒரு கயிற்றினை எடுத்து கொண்டு அவனிடம் வந்தாள்.

"'இன்று உன்னை இந்த உரலுடன் கட்டிப் போடப் போகிறேன்.அதுதான் உனக்கு தண்டனை"என்றாள்.

உரலுடன் கண்ணனைக் கட்டிப்போட முயன்றாள்.கயிறின் நீளம் இரண்டு அங்குலம் குறைந்தது.மேலும் சில கயிறுகளைக் கொண்டு வந்து இணைத்து கண்ணனின் இடுப்பைச் சுற்றி கட்ட முயன்றாள்.அப்போதும் இரண்டு அங்குலம் போதாமல் இருந்தது.மீண்டும் கொஞ்சம் கயிறு துண்டுகள்.நீளம் போதவில்லை..

எல்லையில்லா பரம்பொருளை ஒரு கயிற்றினைக் கொண்டு கட்டிவிட முடியுமா..என்ன?.யசோதைக்கு ஆச்சரியமாய் இருந்தது.அவள் சோர்வடைந்தாள்.

கிருஷ்ணனுக்கு, அவளைப் பார்க்க பரிதாபமாய் இருக்க..அவன் கருணை காட்டினான்.யசோதை அடுத்த முறை கட்ட முயலுகையில் கட்டுப்பட்டு நின்றான்.அவளும் அவை உரலில் கட்டிப் போட்டுவிட்டுச் சென்றாள்.

"கொஞ்ச நேரம் இப்படியே இரு.அப்போதான் புத்தி வரும்" என்று சொல்லிவிட்டு தயிர் கடையச் சென்று விட்டாள் யசோதை.

"தாமம்" என்றால் கயிறு.."உதரம்"என்றால் வயிறு.இடுப்பில் கயிறில் கட்டுண்டதால் கண்ணன் "தாமோதரன்" என்றானான்.,

உரலில் கட்டப்பட்ட கண்ணன், அக்கம் பக்கம் பார்த்து விட்டு,உரலையும் இழுத்துக் கோண்டு தோட்டத்துப் பக்கம் செல்ல ஆரம்பித்தான்.இப்போது அவன் நோக்கமெல்லாம் அங்கிருந்த இரண்டு மருத மரங்கள் மீது இருந்தன.

ஆம்..அவை அவனுக்காகத்தான் பல ஆண்டுகளாகக் காத்துக் கிடந்தன.அவை விமோசனம் பெற ஏங்கிக் கொண்டிருந்தன.அவை மரங்கள் அல்ல..உண்மையில் தேவர்கள்.

பொதுவாகவே தேவர்களுக்கு "தாங்கள் எல்லோரையும் விட மேலானவர்கள்"என்ற கர்வம் உண்டு.அந்த ஆணவ்த்தினாலேயே..பலமுறை குட்டுப் பட்டனர்.பகவானை சரணடைந்து..பின்..கஷ்டங்களிலிருந்து வெளியே வந்தவர்கள்.

அதிலும் பணக்கர வீட்டுப் பிள்ளைகள் என்றால் கேட்கவா வேண்டும்! குபேரனின் பிள்ளைகளான நலகூபுரன்,மணக்ரீவன்.இருவரும் ஆணவத்துடன்,பெரியோரை மதிக்காது,எளியோரை ஏளனம் செய்து..அகங்காரம் மற்றும் மோசமான குணமுடையவ்ர்களாகத் திகழ்ந்தனர்.

ஒருமுறை இருவரும் கங்கா நதியில் ஜலக்ரீடை நடத்திக் கொண்டிருந்தனர்.ஒரு கையில் "வாருணீ"எனும் மதுவும்..மறு கையில் அப்சரஸ்  பெண்களுமாக, அந்த புண்ணிய நதியில் பொல்லாத காரியங்களை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது நாரதர் அந்தப் பக்கம் வந்தார்.

அவரைக் கண்டதும் அப்சரஸ்கள் அவசர அவசரமாக ஆடைகளை உடுத்திக் கொண்டனர்.ஆனால் குபேரனின் மகன்கள் நாரதரை அலட்சியப் படுத்தியதோடு..தாங்கள் இருந்த கோலத்தையும் உணராது இருந்தனர்.

பொதுவாக நாரதருக்குக் கோபம் வராது.

 அந்தப் பிள்ளைகளிடம்இப்போதும் கோபம் வரவில்லை.ஆனால், இப்படி ஏற்பட்டது ,...பணக்கார வீட்டு பிள்ளைகளிடம் காணப்பட்ட திமிர்.அதற்காக இவர்கள் கொஞசமேனும் கஷ்டத்தை அனுபவிக்கட்டும்" என எண்ணினார்.

"மரியாதையோ..வெட்க உணர்வோ இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த நீங்கள் மரங்களாக ஆவீர்கள்"என சபித்தார்.

"மகரிஷி..நாங்கள் தப்பு செய்து விட்டோம்..எங்களை மன்னித்து விடுங்கள்"என் இருவரும் நாரதரின் கால்களில் விழுந்து வேண்டினர்.

நாரதரும் அவர்கள் மனம் திருந்தினால் போதும் என்றுதானே எண்ணினார்.ஆகவே அவர்களைத் தேற்றி..

" கவலைப்படாதீர்கள் .கோகுலத்தில் நீங்கள் இருவரும் மருத மரங்களாக இருங்கள்.கிருஷ்ணன் குழந்தையாக உலாவும் தருணம்..உங்களுக்கு சாப விமோசனம் கிடைக்கும்"
என்றார்.

நாரதர் சொன்னபடி மருத மரங்களாக மாறிய குபேரனின் மைந்தர்கள் சாபவிமோசனம் பெறவே கண்ணன் உரலை இழுத்துக் கொண்டு அவர்களிடம் போனான்.பிரம்மாண்டமாய் நின்ற இரு மரங்கள் நடுவே தவழ்ந்து சென்றான்.அப்போது அவனது இடுப்புடன் கட்டப்பட்ட உரல் மரங்களிடையே மாட்டியது.

குழந்தை உரலையும் சேர்த்து இழுக்க..அது வராததால் தன் பலம் கொண்ட மட்டும் சேர்த்து இழுத்தான்.அவ்வளவுதான்..மரங்கள் இரண்டுமே வேருடன் சாய..அதிலிருந்து குபேர புத்திரர்கள் சாப விமோசனம் பெற்று..பகவானை வணங்கி விடை பெற்றனர்.

தோட்டத்தில் மரங்கள் முறிந்த சப்தம் கேட்டு, நந்தகோபரும், மற்றவர்களும் ஓடி வந்து பார்த்தனர்.பல வருடங்களாக இருந்த மரங்கள் எப்படி விழுந்தன என திகைத்தனர்.

அங்கிருந்த சிறுவர்கள் "கிருஷ்ணன் உரலை இழுத்ததால் மரங்கள் விழுந்தன..பின் அதிலிருந்து இரண்டு தேவ புருஷர்கள் வெளியேறி வந்து மறைந்தனர்" என்று சொன்னதை யாரும் நம்பவில்லை.

எப்படியோ..கண்ணன் மீது மரங்கள் விழாது தப்பியது போதும் என மன நிம்மதியடைந்தனர்.ஆனால்..எதுவுமே நடக்காதது போல கிருஷ்ணன் அப்பாவியாக நின்றான்.

ஆனால்..நநத்கோபர் மனதிலோ கவலை.அடுக்கடுக்காக கண்ணனுக்கு தொடர்ந்து ஆபத்துகள் வந்து சென்றுக் கொண்டிருக்கிறதே..என எண்ணி, இது குறித்து யாதவர்கள் கூட்டத்தில் விவாதித்தார்.

"நந்தகோபா..இனியும் நாம் கோகுலத்தில் வசிப்பது சரியெனத் தோன்றவில்லை.இங்கு பாதுகாப்பு இல்லை என்றே தோன்றுகிறது.குழந்தைகளுக்கு ஏதேனும் விபரீதங்கள் நடக்கும் முன் நாம் கோகுலத்திலிருந்து குடி பெயர்வதே சிறந்த வழி"என்றார் கூட்டத்தில் மூத்தவரான உபேந்திரன்.

"நாம் வேறு எங்கே செல்வது?'

"அந்த கவலை வேண்டாம்.பிருந்தாவனம் என்றொரு காட்டுப் பிரதேசம் உள்ளது.அற்புதமான, செழிப்பான இடம்.இடையர்களான நாம் நம் பசுக்களுடன் அங்கு செல்வோம்"

இந்த யோசனையை நந்தகோபர் முதலான அனைவரும் ஏற்றனர்.பசுக்களை ஓட்டிக் கொண்டு,மனைவி..மக்களுடன் புறப்பட்டனர்.

No comments:

Post a Comment