Wednesday, August 19, 2020

24 -கோவர்த்தன கிரிவாசன்




யாதவர்களின் மிகப் பெரிய சொத்தாக பசுக்களை சொல்ல வேண்டும்.அவை நன்றாக இருந்தால்தான்,யாதவ குலம் சிறப்பாக இருக்கும்.பசுக்கள் ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமென்றால்,தாவரங்களுக்கு செழுமையும்.நீர் வளமும் அவசியம்.இவற்றை அளிப்பது மழை.மழைக்குக் காரணம் வருணன்.வருணனைப் போன்ற திசைபாலகர்களின் தலைவன் இந்திரன்.எனவே யாதவர்கள் இந்திரனை வழிபடுவது வழக்கம்.இந்திரவிழா என ஆண்டுக்கும் ஒருமுறை கோலாகல விழா எடுப்பது வழக்கம்.

அந்த ஆண்டும் விழா எடுப்பதற்காக நந்தகோபரும், மற்ற பெரியவர்களும் கூடி பேசிக் கொண்டிருந்த போது, கிருஷ்ணன் அவர்களிடம்,இந்திர விழா" கொண்டாட்டம் எதற்காக " என்றான்.

"கண்ணா..இடையர்களான நம் வாழ்க்கைக்கு பசுக்கள் ஆதாரம்.பசுக்களுக்குத் தேவை புல், தாவர வகைகள் மற்றும் நீர் வளம்.மழை பெய்வதால்தான் நமக்கு இவை கிடைக்கின்றன.தவிர நாம் உண்ணத் தேவையான தானியங்கள் முதலானவையும் மழை பெய்வதால் விளைச்சல் அதிகமாகி நமக்குக் கிடைக்கிறது.ஆகவே மழைக் கடவுளான இந்திரனுக்கு நாம் நன்றி தெரிவிக்கவும், அவரை மகிழ்ச்சிப் படுத்தவும் தொடர்ந்து அவன் அருளைப் பெறுவதற்கும் இந்திரவிழா எடுத்து வருகிறோம்" என்றார் நந்தகோபர்.

"அப்பா..நம்ம வாழ்க்கைக்குத் தேவையானவை காடுகள்,மலைகள் மற்றும் பசுக்கள் தான்.அப்படியிருக்க,இந்திரனை ஏன் வழிபட வேண்டும்?அதைவிட கோவர்த்தன மலைக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்யலாம்.யாகம் செய்து அந்த அக்னி தேவனை ஆராதிப்போம்" என்றான் கண்ணன்.

கிருஷ்ணன் சொன்னதற்குப் பிறகு யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

கோவர்த்தன மலைக்கு விழா எடுக்க ஏற்பாடு செய்தனர்.

இந்திரவிழாவிற்கு செய்வது போலவே..பசுக்களை நன்கு அலங்கரித்தனர்., வேதியர்களுக்குத் தானங்கள் செய்தனர்.கோவர்த்தன மலைக்கு கும்பலாக படையலிட்டு கிரிவலம் செய்து பூஜித்தனர்.

கண்ணனின் மாயத்தால் கோவர்த்தன மலையானது பிரம்மாண்ட உருவம் எடுத்து,"நானே இந்த மலை தேவன் "எனச் சொல்லி ..கோபியர்கள் படைத்தவைகளை திருப்தியாக சாப்பிட்டு விட்டு சென்றது.

கோபியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றே கண்ணன் இந்த மாயையைச் செய்தான்.அதுபோலவே அனைவரும் ,"இத்தனை காலமாக இந்திரனுக்கு விழா எடுத்தோம்.ஒருமுறைகூட அவன் வரவில்லை.ஆனால், கோவர்த்தன கடவுள், முதல்முறை பூஜை செய்கிறோம் என கேள்விப்பட்டு அருள் பாலித்து விட்டாரே!"என பேசிக்கொண்டனர்.

ஆமாம்..கண்ணன், இந்திரவிழாவை ஏன் வேண்டாம் என்றான்.

இந்திரனின் ஆணவத்தைப் போக்கத்தான்.

அளவில்லா செல்வமும், மூவுலகங்களுக்கு அதிபதி என்ற எண்ணமும் இந்திரனிடம் மிகுந்த ஆணவத்தை உண்டாக்கிவிட்டது.கண்ணன் இதை உணர்ந்ததால் இந்திர பூஜையை,கோவர்த்தன பூஜையாக மாற்றினான்.

இதனால்..இந்திரன் கோபமானான்.பகவானின் அவதாரமான கிருஷ்ணனையே..சாதாரண மானிடச் சிறுவன் என நினைத்துவிட்டான்.

"ஓரு சிறுவன் சொல்லைக் கேட்டு..கோபர்கள் என்னை அவமானப்படுத்தி விட்டனர்.நான் யார் என்பதை இவர்களுக்கு புரிய வைக்கிறேன்.இவர்களுடைய சொத்து சுகங்கள் எல்லாவற்றையும் அழித்து..புத்தி புகட்டுகிறேன்' என்று சபதம் மேற்கொண்டான்.

மேகக் கூட்டங்களை அனுப்பி..பிருந்தாவனத்தின் மேல் பெருமழையை பெய்வித்தான்.பிரளயமே வந்துவிட்டதோ என அஞ்சும்படியான மழை.உடன் சூறாவளிக் காற்றும் சேர்ந்தது.மரங்கள் சாய்ந்தன..பலர் வீடுகள் துவம்சம் ஆகின.பிருந்தாவனம் முழுதும் வெள்ளம் சூழ்ந்தது.

மக்கள் பசுக்கள்,கன்றுகள் எதற்குமே தங்க இடமில்லை.கோபர்கள் பயந்தனர்.

"கிருஷ்ணா..இந்திரனை பூஜிக்காததால் தான் கோபம் கொண்டு விட்டான்.இந்த கடுமையான மழை அதனால் தான் ஏற்பட்டிருக்கிறது.நீதானே கோவர்த்தன மலைக்கு பூஜை செய்யலாம் என்றாய்.இந்த மழையிலிருந்தும் நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

கிருஷ்ணன் அப்போது புன்னகை செய்தான்.ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

கோவர்த்தன மலையை சிறிதும் சிரமில்லாமல் பெயர்த்து எடுத்து, தன் சுண்டு விரலால்..அம்மலையைக் குடைபோல பிடித்தான்.அனைவரும் இதனுள் வாருங்கள்" என்றான்.
கோபர்கள்,கோபியர்கள்,பசுக்கள்,கன்றுகள் மற்றும் அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிகள்,அவர்களின் உடைமைகள் எல்லாம்..மதுசூதனன் பிடித்த மலைக்குடையின் கீழ் தஞ்சம் புகுந்தன.

இந்திரன் விடாது ஏழு நாட்கள் மழை பெய்வித்தான்.ஏழு நாட்களும் கண்ணனும் சோர்வில்லாமல் மலையைப் பிடித்து நின்றான்.

இந்திரன் கர்வத்திலிருந்து மீண்டான்.பரமாத்மாவின் அவதார புருஷனுக்கு எதிராக செயல்பட்டது முட்டாள்தனம் என உணர்ந்து மழையை நிற்க வைத்தான்.

யாதவர்களும்,பசுக்களும்,கன்றுகளும் வீடு திரும்பினர்.கண்ணனை "கோவர்த்தனதரன்" என்றும் கிரிதாரி என்றும் பாராட்டினர்.

அனைவரும் சென்றவுடன், இந்திரன் வந்து பகவானின் அடி பணிந்தார்."நான் பொல்லாத அகங்காரத்தால் தவறு செய்து விட்டேன்.என்னை மன்னித்து அருள வேண்டும்"என வேண்டினார்.

"இந்திரா..புகழும், பதவியும்,செல்வமும், அதிகாரமும் எப்போது வரும்..எப்போது கைவிட்டுப் போகும் என யாருக்கும் தெரியாது.எந்த நிலையிலும் ஆணவம் இல்லாமல் இருப்பதுதான் சிறந்தது.இதை நீ அடிக்கடி மறந்து விடுவதால், அதை உணர்த்தவே இப்படி செய்தேன்" என்றான் கண்ணன்.

மனம் திருந்திய இந்திரன், தெய்வப் பசுவான.காமதேனுவின் பாலாலும்,ஐராவதத்தின் மீது கொண்டு வரப்பட்ட தேவ கங்கையினாலும் பகவானுக்கு அபிஷேகம் செய்ய..தேவர்களும், ரிஷிகளும் வந்திருந்து "கோவிந்தன்" என்று சொல்லி கொண்டாடி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment