Saturday, August 15, 2020

17 - ராமரும்..பரசுராமரும்




ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாதேவிக்கும் பிறந்தவர் பரசுராமர். கோபத்திற்கு பிரசித்திப் பெற்றவர்.தந்தை ஜமதக்னியும் கோபக்காரர்.

தந்தை ஒருமுறை கோபத்தில் தன் மனைவியையே கொன்றுவிட ஆணையிட்டார் மகனுக்கு.

இவர் இப்படி கோபம் கொண்டவராய் இருக்க ஒரு காரணம் உண்டு.

குசிக நாட்டின் மன்னன் காதிக்கு ஒரு மகள் சத்தியவதி.அவளை தான் விரும்புவதாகச் சொல்லிப் பெண் கேட்டார் ரிசீகர் என்னும் மகரிஷி.

அரண்மனைவாசியான தன் மகளை,ஆசிரமவாசியான ஒரு முனிவருக்கு திருமணம் செய்துத் தருவதா...என தயங்கினான் மன்னன்.ஆனால் பிரம்மரிஷியான ரிசீகரைப் பகைத்துக் கொண்டால் அவர் சபித்துவிடுவாரே..என்ன செய்வது..என்ற பயத்தால் திருமணம் செய்து வைத்து விட்டான்.

ரிசீகரின் மனைவியான சத்தியவதி,தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டாள்.அதே நேரம் சத்தியவதியின் தாயும் தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும்..அவன் நாடாள வேண்டும் என்று விரும்பினாள்.

ரிசீகர் அவரவர்கள் விருப்பத்தை அறிந்ததால், இருவரும் புத்திரபாக்கியம் பெற ஒரு ஹோமம் செய்தார்.சத்தியவதிக்கு தன்னைப் போல ஒரு அந்தணக் குமாரன் பிறக்கவும், அவள் தாய்க்கு நாட்டை ஆண்டிட ஒரு க்ஷத்திரிய மக்ன பிறக்கவும் ..தனித்தனியே அன்னக் கவளம் செய்தார்.

சத்தியவதியிடம் யார்..எந்த அன்னத்தைச் சாப்பிட வேண்டும் என்று சொல்லி..பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்து விட்டுப் போனார்.

சத்தியவதியின் தாய்க்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது.சத்தியவதிக்குக் கொடுத்த பிரசாதம், தனக்குக் கொடுத்ததை விட சக்தி மிக்கதாய் இருக்கும் என எண்ணி, அந்த பிரசாதத்தைத் தனக்கு அளிக்குமாறு மகளிடம் கேட்டார்.தாய் ஆசையுடன் கேட்டதால், சத்தியவதி தனக்கு அளிக்கப்பட்டதை அவளிடம் கொடுத்துவிட்டு தாயின் பிரசாதத்தை தான் சாப்பிட்டார்.

இதை அறிந்த ரிசீகர் மனம் வருந்தினார்.சத்யவதியிடம்,"நான் அவரவர் குலத்துக்குத் தகுந்தாற் போல புத்திரர்கள் பிறக்க பிரசாதங்களைத் தயார் செய்தேன்.இப்போது நீங்கள் அவற்றை மாற்றி உண்டதால்..உனக்குப் பிறக்கப் போகும் மகன் க்ஷத்திரிய குணத்திலும், உன் தாய்க்குப் பிறப்பவன் பிரம்ம ரிஷி ஆகும் தகுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதன்படி மன்னன் காதிக்குப் பிறந்த கௌசிகன், பிற்காலத்தில் விஸ்வாமித்திரர் என்கிற பிரம்ம ரிஷியானான்.சத்தியவதிக்கு ஜமதக்னி பிறந்தார்.

ஜமதக்னியின் மனைவியான ரேணுகாதேவி கற்பில் சிறந்தவள்..தினமும் நதிக்கரைக்குச் சென்று தன் கற்பின் சக்தியால் வெறும் மணலில் தினம் ஒரு பானை செய்து, அதில் நீர் கொண்டு வருவாள்.

எப்போதும் போல அவள் நதிக்கரைக்குச் சென்றபோது ,அங்கு ஒரு கந்தர்வன் அப்ஸரப் பெண்களுடன் நதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவள், தன்னை மற ந்து சில நொடிகள் அந்த கந்தர்வனின் அழகில் மயங்கினாள்.

உடனே சுதாரித்துக் கொண்டு, மண்ணில் பானை செய்ய முற்பட்டாள்.பானை உருவாகவில்லை.நீர் எடுக்காமல் மனவருத்ததுடன் ஆசிரமம் வநதாள்.
ஜமதக்னி முனிவர் தன் தவ  வலிமையால் நடந்ததைத் தெரிந்து கொண்டார்..குற்ற உணர்வுடன் தன்முன் தலை குனிந்து நிற்கும் மனைவியின் மீது கோபம் கொண்டார்.தன் பிள்ளியகளை அழைத்தார்.

"உங்கள் தாய் தவறு செய்து விட்டாள்.அவளைக் கொன்று விடுங்கள்" எனக் கட்டளையிட்டார்.

ஆனால்,  தங்களைப் பெற்ற தாயைக் கொல்ல எந்த மகனும் தயாராய் இல்லை.

ஜமதக்னி, தன் கடைசி மகனான பரசுராமனை அழைத்தார்."ராமா..தவறு செய்த உன் தாயையும்..என் ஆணையை நிறைவேற்ற மறுத்த உன் சகோதரர்களையும் கொன்று விடு" என்றார்.

பரசுராமர் நொடியும் யோசிக்காமல்,தந்தை உத்தரவிட்டவுடன் அனைவரையும் வெட்டி வீழ்த்தினான்.

இதைக் கண்ட ஜமதக்னி மனம் மகிழ்ந்தார். பரசுராமனைப் பாராட்டினார்."ராமா..உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்றார். 

"தந்தையே! என்னால் வெட்டப்பட்ட என் தாயும், சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற வேண்டும்.நான்தான் வெட்டினேன் என்பதை அவர்கள் மறக்கவும் வேண்டும்"என்றார் பரசுராமர்.

"அப்படியே ஆகட்டும்" என ஜமதக்னி முனிவர் கூற, இறந்தவர்கள் அனைவரும் தூங்கி எழுந்ததைப் போல எழுத்தனர்.

இப்படி தந்தை வாக்கை வேதவாக்காகக் கொண்டு, தன் தாயையும், சகோதரர்களையும் கொன்றவர்,அவர் தந்தைக்கு ஒரு அவமானம் என்றால் சும்மாயிருப்பாரா?

கார்த்தவீர்யார்ஜூனன் என்பவுடன் அவருக்குப் பகை அப்படித்தான் ஏற்பட்டது.

கார்த்தவீர்யார்ஜூனன் கேய நாட்டு மன்னன்.பகவானின் அம்சமான தத்தாத்ரேயரைப் பூஜித்து அவர் அருளால் ஆயிரம் கைகளும்,எவரும் வெல்லும் வல்லமையையும்,செல்வம்,புகழ்,வீரியம் என அனைத்தையும் பெற்றான்.அவனுடைய வீரத்தைக் கண்டு,எல்லா நாட்டு அரசர்களுமே பயந்து, பணிந்து நின்றனர்.தனக்கு நிகர் யாருமில்லை என ஆணவத்தில் இருந்தான்.

ஒருமுறை அவன் நர்மதி நதியில் பெண்களுடன் நீராடிக் கொண்டிருந்தான். தன் ஆயிரம் கைகளால் நீரை அணைகட்டித் தடுப்பதும், பின் கைகளை விலக்கிக் கொண்டு தண்ணீரை வெள்ளம் போல ஓடவிடுவதுமாக ஜலக்ரீடை நடத்திக் கொண்டிருந்தான்.

அதே நதிக்கரையில் சற்றுத் தள்ளி சிவ பூஜை செய்துக் கொண்டிருந்தான் லங்கேஸ்வரன் ராவணன்.அவன் பக்தியில் இருந்த சமயத்தில் கார்த்தவீர்யாஜூனன் , அணைக்கட்டித் தடுத்திருந்த தனது ஆயிரம் கைகளை நீக்கிக் கொண்டான்.நதியில் வெள்ளம் போல வந்து, ராவணனின் பூஜைப்பொருட்களை அடித்துப் போயிற்று.

கோபமடைந்த ராவணன், அவனுடன் சண்டைக்குச் செல்ல,அவனை ஒரு சிறு பூச்சியைப் போல சுலபமாக மடக்கி சிறை செய்தான் கார்த்தவீர்யாஜூனன்.பின் வெகு நாட்களுக்குப் பின் இரக்கப்பட்டு அவனை விடுதலை செய்தான்.

இப்படி யாராலும் எதிர் கொள்ள முடியாதவனாய் இருந்தான்.ஒரு சமயம் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது ,அங்கே ஜமதக்னி தன்னிடமிருந்த தேவலோகப் பசுவான காமதேனுவின் அற்புத சக்தியால் மன்னனுக்கும், அவனது படையினருக்கும் அறுசுவை உணவளித்தார்.

காமதேனுவைக் கண்ட மன்னன்,கேட்டது அனைத்தையும் தரும் அதனை தனக்குத் தருமாறு கேட்டான்.

"அதிதிகளை உபசரிக்கவும்,வேள்விக்குத் தேவையான பால்,தயிர்,நெய் ஆகியவற்றிற்காகவும் எனக்கு இப்பசு தேவை.என்னால் இதைத் தர இயலாது.மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றார் ஜமதக்னி.

அதனால் கோபமடைந்த மன்னன் "எனக்கு யார் அனுமதியும் தேவையில்லை.நான் ஆசைப்பட்டதை அடைந்தேத் தீருவேன்.இந்தப் பசுவை என் அரண்மனைக்கு ஓட்டிச் செல்லுங்கள்" என தன் படையினருக்குக் கட்டளையிட்டான்.

அவனைத் தடுக்க முடியாமல்,ஜமத்க்னியும்,ரேணுகாதேவியும் கலங்கி நின்றனர்.அப்போது பரசுராமர் அங்கில்லை.பின், ஆசிரமத்திற்குத் திரும்பிய பர்சுராமன்,நடந்ததைக் கேள்விப்பட்டு கொதித்துப் போனார்.

கண்கள் சிவக்க தன் ஆயுதமான கோடாரி மற்றும் வில், அம்புகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

கார்த்தவீரியாஜுனனிடம் சென்று அவனைப் போருக்கு அழைத்தான்.தன்னை எதிர்க்க வந்த அவனுடைய படைகளை நிர்மூலப்ப்டுத்தினார்.

கார்த்தவீரியாஜுனன் மிகுந்த கோபத்துடன் பரசுராமருடன் போரிட்டான்.இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது.இறுதியில்  மன்னனின் ஆயிரம் கைகளையும் தன் கோடாரியால் துண்டித்தார் பரசுராமன்.பின், அவன் தலையையும் வெட்டி வீழ்த்தி, காமதேனுவை  மீட்டுக் கொண்டு..ரத்தம் சொட்டும் கோடாரியுடன் ஆசிரமம் திரும்பினான்.

ஜமதக்னி அதைக் கண்டு பதறினார்.

"ராமா..மக்களைக் காக்கும் மன்னவனை கொன்றுவிட்டாயே! அது பாவமல்லவா?" என்றவர்,'க்ஷத்திரியனைக் கொன்ற பாவம் தீர வேண்டுமானால் ,நீ தீர்த்தயாத்திரைக்குச் செல்ல வேண்டும்.உடனே புறப்படு" என்றார்.

தந்தையின் சொல்லை எப்போதும் மீறாத பரசுராமர் தீர்த்த யாத்திரைப் புறப்பட்டார்.

அவர் யாத்திரை முடிந்து திரும்பும்போது அவருக்கு ஒரு பேரதிர்ச்சிக் காத்திருந்தது.

கார்த்தவீரியனைக் பரசுராமர் கொன்றுவிட்டதால், வீரியனின் புதல்வர்கள்,பழி தீர்த்துக் கொள்ள துடித்தனர்.பரசுராமர் ஊரில் இல்லா விஷயம் அறிந்த அவர்கள் ஆசிரமம் வந்து ஜனதக்னியைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டார்கள்

தந்தையின் மரணமும், பொட்டிழந்த தாயின் முகம் அவருக்குக்
..கோபத்தை வரவழைத்தது.பிரளயத் தீ போல ஆனார்.வீரியனின் மகன்கள் அனைவரையும் கோடாரியால்  கொன்று தீர்த்தார்.அப்போதும் அவர் கோபம் அடங்காது.. ஆணவம் கொண்ட க்ஷத்திரியனின் இருபத்தோரு   தலைமுறைகளை வதைப்பேன்..என்று சபதமிட்டு அதை நிறைவேற்றினார்.

மலைமலையாகக் கொன்று தீர்த்த க்ஷத்திரியர்களின் ரத்தத்தை குருக்ஷேத்திர பூமியில் ஒரு மடுவை தேக்கினார்.அதுவே பிற்காலத்தில் "ஸ்மந்தபஞ்சகம்" எனும் புண்ணியத்தலமாக பிரசித்திப் பெற்றது.

பின் தந்தைக்கு இறுதிக் கடன்களை செய்து,ஒரு பெரிய யாகம் நடத்தினார்.அந்த யாகத்தின் போது,தான் மன்னர்களைக் கொன்று ஜெயித்த
ராஜ்ஜியங்களையும்,பொன்னையும்,பொருளையும் பிற அனைத்து செல்வங்களையும்..எல்லோருக்கும் தாராளமாக வழங்கினார்.

இவையனைத்தும் நடந்து முடிந்த பிறகு ,பின்னாளில் பகவானின் மற்றொரு அவதாரமான ராமனும்,பரசுராமனும் நேருக்குநேர் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது.

மிதிலையில் சீதையை மணப்பதற்காக ராமன் சிவதனுசை வளைத்தான் எனக் கேள்விப்பட்ட பரசுராமர்,க்ஷத்திரியனான ராமனின் வீரத்தை சோதிக்க எண்ணினார்.

சீதையை மணந்து கொண்டு,அயோத்திக்குத் திரும்பிய தசரதனின் பரிவாரத்தை வழி மறைத்தார்."ராமா..சிவ தனுசை முறித்ததாய்க் கேள்விப் பட்டேன்.உண்மையா" என்றார்.

ராமன் அமைதியாக "ஆம்" என்றான்.

 "இது விஷ்ணு தனுசு.இதை வளைத்து நாண் ஏற்று..அல்லது என்னோடு போரிடு" என்றார்.

தசரதன் முதலானோர் பதறினார்கள்.ராமனோ பதற்றமின்றி வில்லை வாங்கினான்.மிக எளிதாக வளைத்து..நாண் ஏற்றி, "பரசுராமரே!என் குறிக்கான இலக்கு என்ன?"என்றான்.

ஆனால், அந்த நொடியே, பரசுராமரின் சக்தி அனைத்தும் மறைந்து போனது.ராமன் குறி வைத்த அம்புக்கு இலக்காக தன் தவ வலிமை முழுதும் கொடுத்து விட்டுத் திரும்பினார்.

பர்சுராம அவதாரத்தின் கடமைகள் முடிந்து விட்டதாலேயே ராம அவதாரம் அவரிடம் சக்தியை தன்னிடம் ஈர்த்துக் கொண்டுவிட்டது.

பரசுராமர், தான் வென்ற நிலங்களை தானம் அளித்து விட் டதால்..இனி அந்தப் பகுதியில் வசிக்கக் கூடாது என்று கருதினார்.தன் கோடாரியை கடலை நோக்கி வீசினார்.அவர் வீசி எறிந்த தூரம் வரை  கடல் நீர் பின் வாங்கி புது நிலப்பரப்பு தென்பட்டது."பரசுராம க்ஷேத்திரம்" என்று அந்தப் பகுதிக்கு பெயர் ஏற்பட்டது.அதுவே பின்னாளில் கேரள தேசமாகியது.

பரசுராமர் அப்பகுதியில் குடியேறி, மகேந்திர பர்வதத்தில் வசிக்கலானார்.

சுகர் மகரிஷி பகவானின் ராம, பரசுராம அவதார மகிமைச் சொல்லி முடிக்க,பரவசத்தில் ஆழ்ந்தார் பரீட்சித்.

சுகர் தொடர்ந்து சொன்னார்..

"வைஸ்தவ மனுவில் தொடங்கி, அரிச்சந்திரன்,பகீரதன்,ஸ்ரீராமன் என்று சூரிய வம்சம் தழைத்து வந்தது.,மற்றொரு புறம் சந்திர குலமும் தழைத்தது.பரசுராமர் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்.

பிரம்மாவின் புதல்வனான அத்ரி மகரிஷியின் புதல்வரே! சந்திரனில் தொடங்கி அவர் மகன் புதன்..புதனின் புதல்வன் புரூரவஸ் எனும் நகுஷன்,யயாதி,துஷ்யந்தன், பரதன் வரை வந்தது.பின் பரத கண்டத்தை ஆண்ட பரதனின் வம்சாவளியினர்களான ஹஸ்தியில் ஆரம்பித்து..சந்தனு,பீஷ்மர்,பாண்டவர்,துரியோதனன் எனத் தொடங்கி இப்போது உன் சந்ததிகளாக நான்கு புதல்வரும் உள்ளனர்.

உன் மூத்த மகனான ஜனமேஜயன்உன் மரணத்துக்கு பழி தீர்ப்பதற்காக ஒரு பெரும் யாகத்தை நடத்தி..எல்லா நாகங்களையும் ஹோம குண்டத்தில் விழச் செய்யப் போகிறான்.உன்னுடைய மூன்றாவது தலைமுறைக் காலத்தில் அஸ்தினாபுரம் கங்கை வெள்ளத்தில் முழுகப் போகிறது.உன் வம்சத்தில் கடைசி அரசன் க்ஷேமகன் என்பவனால் சந்திர வம்சம் முற்று பெறப் போகிறது..என நடக்கப் போவதையும் உரைத்தார் சுகர் மகரிஷி.

அதைக் கேட்டும் சற்றும் பதறாமல் பரீட்சித், "மகரிஷி, எனது முன்னோர்களான பாண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும்,நண்பனாகவும்,உறவினனாகவும், இறைவனாகவும் இருந்து அருள்புரிந்த கிருஷ்ணனின் திருக்குணங்களையும் ,அவரது லீலா வினோதங்களையும்..தங்களது திருவாக்கால் கேட்க விரும்புகிறேன்" என்றான்.

சுகர் மகரிஷி பரீட்சித்தை கருணையுடன் பார்த்தார்..

புனித கங்கையின் கரையில் ஏழுநாட்களாக தண்ணீர் கூட இல்லாமல்,மரணத்தை வரவேற்கும் நிலையில் பாகவதப் புராணத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் பரீட்சித் எவ்வளவு பாக்கியசாலி என எண்ணினார்.

"தாயின் வயிற்றில் இருக்கும் போது கிருஷ்ணனால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்..பிறந்தது முதல் அந்த கிருஷ்ணனைத் தேடித் தேடி.. உற்று நோக்கியதால் பரீட்சித் என்ற பெயர் பெற்றவன்..கிருஷ்ண சரிதத்தைக் கேட்க விரும்புகிறான்.இவனைவிட வேறு யாருக்கு இந்த அருகதையுள்ளது"என எண்ணினார்  சுகர்.

பின் பரீட்சித்திடம், "பாற்கடலில் பள்ளிக் கொண்ட பெருமாளின் அவதாரங்கள் அனைத்தும் மகிமை வாய்ந்ததுதான் என்றாலும்...ராமனும், கிருஷ்ணனுமே பூரண அவதாரங்கள்.மற்ற அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட காரியத்துக்குக்காகத் தோன்றி மறைந்துவிட்டவை.

ராமனும், கிருஷ்ணனும் மனிதர்களிடையே மனிதர்களாக வாழ்ந்தவர்கள்.அதிலும் ராமன் தன்னை கடவுளாகக் காட்டிக் கொள்ளாது..மனிதனுக்குரிய ஆசாபாசங்களில் சிக்கி,இன்ப துன்பங்களை அனுபவித்து லட்சிய புருஷனாக வாழ்ந்த அவதாரம்.

ஆனால், கிருஷ்ணனோ பரிபூரண அவதாரம்.அவதரிக்கும் போதே..தான் கடவுள் என அனைவரும் உணருமாறு பிறந்தார். அதற்குப் பின்னும் தன் ஒவ்வொரு செயலிலும்,செயலிலும் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்.கடவுள் என் உணர்த்தியும், அதை உணர்ந்தவர்களை மறக்கடித்தும் மாயைகள் புரிந்தார்.

No comments:

Post a Comment