Saturday, August 29, 2020

31 - நரகாசுரனும்...ஜராசந்தனும் மறைந்தனர்




நரகாசுரன்.....

பூமா தேவிக்கும், மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை தூக்கி வந்த போது தோன்றியவன்.

அசுரனுக்கே உள்ள ஆற்றலும்,தவம் செய்து பெற்ற வரத்தாலும் தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற ஆணவம் கொண்டவன் நரகாசுரன்.

அதுவும் தவிர மாகாவிஷ்ணு பூமாதேவிக்குத் தந்த "வைஷ்ணவாஸ்திரம்"எனும் அதி சக்தி வாய்ந்த அஸ்திரம் அவனிடம் இருந்தது.இத்துடன் மகாவிஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் அவனை அழிக்க முடியாது என்ற ஆணவமும் உண்டு.

அவனது வலிமை கண்டு மூவுலகங்களும் நடுங்க வேண்டும் என்பதற்காகவே தேவலோகத்தின் மீது படையெடுத்தான் நரகாசுரன்.தேவேந்திரனை வென்று,அவனது இந்திரபதவியைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி,வருணனின் வெண் கொற்றக் குடையையும்,இந்திரனின் தாயான அதிதியின் குண்டலங்களையும் கவர்ந்து கொண்டு விட்டான்.

நரகாசுரனின் தாய் பூமாதேவி அவனுக்கு எவ்வளவோ புத்திமதிகள் சொல்லிப் பார்த்தும் அவன் கேட்கவில்லை.அசுரனான அவன் எதிரிகளான தேவர்களை அடியோடு வெறுத்தான்.அவர்கள் நிம்மதியாய் இருக்கக் கூடாது என துரத்தித் துரத்தி அடித்தான்.மாட்டியவர்களை சித்தரவதைச் செய்தான்.சிக்கியவர்களைத் துரத்தித் துரத்தி விரட்டினான்..

அக்கிரமம் செய்பவர்களை ஆண்டவன் சகித்துக் கொள்வதும் இல்லை..அவர்களை விட்டு வைப்பதும் இல்லை.

அதனால்தான் கிருஷ்ணன் மனம் பொறுக்காமல் பொங்கி எழுந்தான்.தேரில் ஏறிச் சென்றால் கூட தாமதமாகும் என கருடன் மீதேறி பறந்தான்.அவனுடன் சத்யபாமாவும் சென்றாள்.

கிருஷ்ணன் நரகாசுரனின் நகரமான மிராக்யோதிஷபுரத்தை அடைந்தான்.அந்நகரம் பெரிய மதில்களுடன்,பலத்த கோட்டைகள் கொண்டு யாரும் நுழைய முடியாத அளவிற்கு அமைந்திருந்தது.அது மட்டுமின்றி ஐந்து தலைகள்  கொண்ட முராசுரன் என்பவன் அதைப் பாதுகாத்து வந்தான்.

கண்ணன் தன் பாஞ்சஜன்யம் எடுத்து, பகைவர்கள் நடுங்கும் படியாக முழங்கினான்.இதைக் கேட்ட முராசுரன், பெரும் கர்ஜனையுடன் கிருஷ்ணனைத் தாக்கினான்.ஐந்து வாய்கள் மூலம் அக்னியை உமிழ்ந்தான்.பலவித அஸ்திரங்கள் எய்து கிருஷ்ணனுடன் போரிட்டான்.கண்ணன் தொடர்ச்சியாக ஐந்து அஸ்திரங்களை விடுத்து அவனது ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தான்.பின் தனது கதாயுதத்தால் நரகாசுரனின் கோட்டை மதில்களை தூள் தூளாக்கினான்.

அடுத்து முராசுரனின் ஏழு பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக வந்து கண்ணனுடன்  போரிட்டனர்.அவர்கள் உபயோகித்த பாணங்களையெல்லாம் கண்ணன் பொடிப் பொடியாக்கினான்.வரிசையாக அவர்களை விழ்த்தி யமனுலகிற்கு அனுப்பி வைத்தான்.

முராசுரனும் அவன் புதல்வர்களும் படைகளும் அழிந்தது தெரிந்த நரகாசுரன், தன் அசுரப் படைகளுடன் ஆக்ரோஷமாக வெளிப்பட்டான்.சக்தி வாய்ந்த அஸ்திரங்களால் கிருஷ்ணனைத் தாக்கினான்.இருவருக்கும் இடையில் கடும் போர் மூண்டது.

கருடன் புயல் வேகத்தில் பறந்து சென்று நரகாசுரனின் படைக ளைத் தாக்கித் துன்புறுத்தினான்.அவன் யானைகளைத் தாக்கியதில்,அவை மிரண்டு திரும்பியபடி அசுரர் சேனையையே அழித்தன.

கிருஷ்ணன் நரகாசுரனின் வில், வாள் எல்லாவற்றையும் தாக்கி முறித்தான்.அசுரன் சூலாயுதத்தைச்  செலுத்த கண்ணன் தன் சுதர்சன சக்கரத்தை அவன் மீது ஏவினான். அது சூலாயுதத்தைத் தகர்த்து விட்டு, மேலும் சென்று நரகாசுரனின் தலையையும் துண்டித்து வீழ்த்தியது.

தேவர்கள் மகிழ்ச்சியடைந்து பூமாரி  பொழிந்தனர்.

நரகாசுரனின் தாய் பூமாதேவி, மகன் கவர்ந்து சென்ற வருணனின் குடை,அத்தியில் குண்டலங்கள் போன்றவற்றை கிருஷ்ணனிடம் சமர்ப்பித்தாள்.

கண்ணன் அவற்றைப் பெற்றுக் கொண்டு தேவலோகம் செல்ல முற்பட்ட போது, பதினாறாயிரம் அரச குமாரிகள் அவனது காலடியில் வந்து பணிந்தனர்.அத்தனைப் பேரையும் பல தேசங்களிலிருந்து நரகாசுரன் கடத்தி வைத்திருந்தான்.

"பகவானே! இனி நாங்கள் எங்கள் தேசத்திற்குச் செல்ல முடியாது.எங்கள் அனைவரையும் நீங்களே ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்"என்றார்கள்.

கண்ணன் அவர்கள் அனைவரையும் பறக்கும் சிவிகைகளில் ஏற்றி,"எல்லோரும் துவாரகைக்குச் சென்று அங்கிருங்கள்.நான் வந்து உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்" என அனுப்பி வைத்தான்.

பின் , சத்யபாமாவுடன் புறப்பட்டு தேவலோகம் சென்றான்.இந்திரனிடம் கவர்ந்து சென்ற பொருள்களைக் கொடுத்தான்.சத்யபாமா தேவலோகத்தில் இருந்த பாரிஜாத மரத்தின் மீது ஆசை கொண்டாள். அவள் விருப்பத்தை அறிந்த கிருஷ்ணன், அம்மரத்தை துவாரகைக்குக் கொண்டு செல்ல வேருடன் பிடுங்கிக் கொண்டு கருடன் மீது ஏறினான்.

ஆனால் இந்திரனோ..சொர்க்கலோகத்தின் உடைமைகளை பூவுலகிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என தடுத்தான்,காவலர்களை அனுப்பி பாரிஜாத மரத்தை கிருஷ்ணனிடமிருந்து பிடுங்கச் சொன்னான்.

கிருஷ்ணன்...இந்திரனின் நன்றி மறந்தத் தன்மையை நினைத்து சிரித்தாலும்,காவலர்களையும், இந்திரனையும், மற்ற தேவர்களையும் தன் பாணத்தால் அடித்தான்.

அதன் பின் இந்திரனுக்கு புத்தி வர, பாரிஜாத மரத்துடன்..கிருஷ்ணனையும், சத்யபாமாவையும் வழியனுப்பி வைத்தான்.

துவாரகை திரும்பிய கண்ணன், நரகாசுரனிடம் இருந்து விடுவித்த பதினாறாயிரம் பெண்களையும்,பதினாறாயிரம் கிருஷ்ணன்களாக தானே மாறி மணம் புரிந்து கொண்டான்.ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொருவனாக சாதாரண பாமரனைப் போல குடும்பம் நடத்தலானான்.

இச்சமயம் பாண்டவர்களிடமிருந்து தூதுவன் ஒருவன் வந்தான்..

"மன்னர் தருமன்..அசுவமேத யாகம் நடத்த விரும்புகிறார்.தங்களின் யோசனையைக் கேட்பதற்காக உங்கள் வரவை அன்புடன் எதிர்பார்க்கிறார்"என்ற செய்தியை சொன்னான்.

அப்போது அதைக் கேட்டுக் கொண்டே நாரதர் அங்கு வந்தார்.

"அசுவமேதயாகமா? தருமர் நடத்துகிறாரா? நடக்காத காரியம்" என்றார் நாரதர்..கண்ணன் "ஏன்?" என வினவ..

"கண்ணா..ஒரு மன்னன் அசுவமேதயாகம் செய்ய விரும்பினால்..எல்லா தேசத்து மன்னர்களும் அவனை ரஜாதிராஜனாக ஒப்புக் கொள்ள வேண்டும்.அதை ஏற்க விரும்பாத மன்னர்களுடன் போரிட்டு வெல்ல வேண்டும்"

"ஆம்..ஆனால் அர்ஜுனன் ஒருவன் போதுமே! அனைத்து அரசர்களையும் ஒரு நாழிகையில் ஜெயித்து விடும் வீரனாயிற்றே!"

"ஆனால்..ஜராசந்தன் இருக்கின்றானே! அவனை யார் வெல்ல முடியும்?அத்துடன் அவன் நரமேதம் எனும் யாகத்தைச் செய்ய நிச்சயித்து இதுவரை எண்பத்தியாறு அரசர்களை வென்று சிறை பிடித்துள்ளான்.இன்னும் பதினான்கு வீரர்களை ஜெயித்துவிட்டால்..நூறுஅரசர்களை ருத்ரனுக்கு பலி கொடுத்து கட்டுக்கடங்காத சக்தியை பெற்று விடுவான்.ஏற்கனவே அவன் மூர்க்கன்.பின் அவனை யாரால் வெல்ல முடியும்" என்று சொன்ன நாரதர் வந்த காரியம் முடிந்து விட்டது எனக் கிளம்பினார்.

கிருஷ்ணன் ,தருமரிடம் இவ்விஷயத்தைச் சொன்னதும் தருமரும் யோசனையில் ஆழ்ந்தார்.

ஆனால்... அர்ஜுனனும், பீஷ்மரும் சோகத்தில் கொதித்தார்கள்.

"கண்ணா..ராஜசூய யாகம் செய்கிறோமோ இல்லையோ..ஜராசந்தனிடம் சிறைபட்டுள்ள அரசர்களை மீட்டு காப்பாற்றுவதற்காகவாது ஜராசந்தனைத் தோற்கடிக்க வேண்டும்" என்றான் அர்ஜுனன்.

"ஆம்..இப்போதே படை திரட்டிப் புறப்படுவோம்"என்றான் பீமன்.

"இல்லை பீமா..நேர் வழியில் மோதி ஜாரசந்தனை நாம் தோற்கடிக்க முடியாது.சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும்.ஜராசந்தனுக்கு பிராமணர்களிடம் விஸ்வாசம் அதிகம்.அவர்கள் எதைக் கேட்டாலும் தந்துவிடுவான்.நாம் அந்த பலவீனத்தைப் பயன்படுத்தி வெல்வோம்.நாம் மூவர் மட்டும் அந்தணர்கள் வேடம் போட்டு அவனிடம் செல்வோம்."என்று கிருஷ்ணன் சொல்ல..மூவரும் தங்களை மாற்றிக் கொண்டு..மகத நாட்டுக்குச் சென்று ஜராசந்தனை சந்தித்தனர்.

அந்தணர்கள் என்பதால் ஜராசந்தன் அவர்களை அன்புடன் வரவேற்றான்.ஆனால், வந்தவர்கள் உடலிலும்,கைகளிலும் வாள் பட்ட வடுக்கள் இருந்ததால்..அவர்கள் உண்மையில் அந்தணர்கள் அல்ல என அறிந்து ,மூவரையும் வணங்கி..

"அந்தணர்களே! நீங்கள் யார்.? வந்த நோக்கம் என்ன?என்னிடம் எதை நாடி வந்தீர்கள்?"எனக் கேட்டான்.

"மன்னா! நாங்கள் உன்னிடம் த்வந்த யுத்தத்தையே யாசிக்கிறோம்.எங்களுள் ஒருவருடன் நீ சண்டையிட வேண்டும்.இவர்கள் குந்தியின் மகன்கள்.இவன்..அர்ஜுனன், இவன் பீமன்..நான் இவர்களின் மாமன் மகன்..உனக்குப் பகைவன் கிருஷ்ணன்"என்றான் கண்ணன்.

இதைக் கேட்டதும் ஜராசந்தன் சிரித்தான்.

"நீங்கள் கேட்ட யுத்தத்தை நானும் தருகிறேன்.நீ எனக்கு பயந்து ஓடிய கோழை.உன்னுடன் யுத்தம் செய்வது எனக்கு அகௌரவம்.அர்ஜூனன் வயதில் சிறியவன்.ஆனால் பீமன் எனக்கு சமமான பலசாலி..எனவே த்வந்த யுத்தம் செய்கிறேன்.அவனை ஜெயித்து விட்டு, பின் உங்கள் இருவரையும் கொன்று விடுகிறேன்" என்றான்.

பின், பீமனுடன் சண்டையிடத் தயாரானான்.

அவனும், பீமனும் முதலில் கதாயுதத்தால் தாக்கிக் கொண்டார்கள்.கதைகள் முறிந்ததும் மல்யுத்தத்தில் இறங்கினர்.சமபலம் கொண்ட இருவரின் யுத்தம் பிரமிக்க வைத்தது.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.கட்டித் தழுவிக் குத்திக் கொண்டார்கள்.சுற்றிச் சுழன்ற அந்தப் போராட்டத்தின் முடிவில் பீமன், ஜரசாந்தனை கீழே வீழ்த்தி..அவனது இரு கால்களையும் பற்றி உடலை இரண்டாகக் கிழித்துப் போட்டான்.

என்ன அதிசயம்..

கிழித்துப் போட்ட ஜராசந்தனின் உடல் மீண்டும் ஒட்டிக் கொண்டது.

பீமனும், அர்ஜுனனும் ஆச்சரியமடைந்தனர்.கண்ணன் அதிசயிக்கவில்லை.

ஜராசந்தனின் உடல் தானே ஒட்டிக் கொண்டதற்குக் காரணம் இருந்தது.மகத மன்னனான பிருகத்ரதனுக்கு இரண்டு மனைவிகள்.இருவருக்கும் குழந்தைகள் இல்லை.அதனால் மனம் வருந்தினான்.அப்போது, சண்டகௌசிக் மகரிஷி என்பவர் அவனை சந்தித்து ஒரு பழத்தைக் கொடுத்தார்."இதை சாப்பிட்டால் உன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்றார்"

பிருகத்ரதன், ஒருவர் மட்டுமே சாப்பிட வேண்டிய அந்தக் கனியை இரு மனைவியினருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.

இருவரும் கர்ப்பமடைந்தனர்.ஆனால், பிறந்ததோ..இரண்டு துண்டான உடல்கள்.அந்த உடல் துண்டுகளை வருத்ததுடன் தூக்கி எறிந்தான்.

உயிரற்ற அந்தப் பிண்டங்களை "ஜரா" எனும் அரக்கி உண்ண எடுத்தாள்.அவள் அந்த இருபாதி உடல்களை ஒன்று சேர்த்தாள்.அந்த குழந்தை உடன் உயிர் பெற்றது.ஜராவால் உயிர் பெற்றதால் ஜராசந்தன் ஆயிற்று.

பீமன் ஜராசந்தனை மீண்டும்..மீண்டும் கிழித்துப் போட்டான்.உடல் சேர்ந்து கொள்வதால் செய்வதறியாது திகைத்தான்.

அப்போது கிருஷ்ணன் அருகே இருந்த புல்லை எடுத்து அதை சரிபாதியாக்கிக் கிழித்து..தலை மாற்றிப் போட்டான்.யுத்தம் செய்து கொண்டே அந்தக் குறிப்பைப் பார்த்த பீமன்..ஜராசந்தனை வீழ்த்தி,உடலைக் கிழித்து..இம்முறை அதை தலை மாறிப் போட்டான்.

ஜராசந்தனின் கிழிந்த உடல் ஒன்று சேர முடியாமல், செத்துப் போனான்.

பின், அவனால் சிறைபடுத்த பட்டிருந்த மன்னர்கள் விடுவிக்கப் பட்டனர்.

அதன்பின் இந்திரபிரஸ்தத்தில் ராஜசூய யாகம் சிறப்பாக நடைபெற்றது.உலகத்தில் அத்தனை அரசர்களும்,கௌரவர்களும், பீஷ்மர்,துரோணர்,கிருபாச்சாரியார் போன்ற பெரியோர்களும் கலந்து கொண்ட அந்த யாகத்தில் முதல் மரியாதை யாருக்குக் கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது.

அதனால், அங்கு பெரும் கலகம் விளைந்தது.மற்றொரு வதமும் நடந்தது.       



No comments:

Post a Comment