Friday, August 21, 2020

25 - உலக ஜீவன்களும், பரமாத்மாவும்




கோபர்கள் பிருந்தாவனத்தில் எந்த பயமும் இன்றி காலம் கழிக்க ஆரம்பித்தனர்.

ஒரு சரத்கால இரவு..

ஆகாயத்தில் சந்திரன் குளிர்ந்து பிரகாசித்தான்.பிருந்தாவனம் முழுதும் மல்லிகை மலர்கள் வாசம்.நிசப்தமான சூழலில் ஒரு மெல்லிய குழலோசை,மனதை மயக்கும் விதத்தில் கேட்டது.

வேணுகானம்..

அந்த குழலோசையில்    கோபியர்களும் தங்களை மறந்து இதயத்தைப் பறி கொடுத்தனர்.உயிரெல்லாம் ஊடுருவிய அந்த கானம் அவர்கள் இதயத்தையும் உருக வைத்து ஆத்மாவை ஈர்த்து கவர்ந்தது.காதலில் மூழ்க வைத்தது.

கோபியர்கள் தவித்துப் போனார்கள்.

வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை அப்படியே நிறுத்தி ஸ்தம்பித்தனர்.
ஒரு கோபியரின் வீட்டில் பால் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
இன்னொருத்தர் வீட்டில் சாதம் கொதித்துக் கொண்டிருந்தது.
குழந்தைக்கு பால் புகட்டியவர்கள், அதை அப்படியே விட்டு விட்டு புறப்பட்டனர்
கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தவள்..அதை அப்படியே மறந்து போனாள்.
தலையலங்காரம் செய்து கொண்டிருந்தவள், உடை மாற்றிக் கொண்டிருந்தவள்,தயிர் கடைந்து கொண்டிருந்தவள் என பல வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்கள்..அதை..அதை..அப்படியே நிறுத்தி விட்டு..குழலோசை கேட்கும் இடம் நோக்கி விரைந்தனர்.

யமுனை நதிக்கரைக்கு வந்தனர்.அங்கே ஒரு அழகிய மாயன், புல்லாங்குழல் ஊதியபடியே, ஒற்றைக் காலில் நின்று..மற்றொரு காலை சற்றே மடித்து நின்றவாறு..கண்களை மூடி..மனம் லயித்துப் போய் வேணுகானம் பொழிந்து கொண்டிருந்தான்.

கோபியர்கள் வரவால்..மோன நிலையிலிருந்து விடுபட்டு, அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

"இப்போது எல்லோரும் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?இது இரவு வேளை.உங்கள் கடமைகளை மறந்து இப்படி வருவது தவறில்லையா?"

"நாங்கள் என்ன செய்வோம் கண்ணா! உன் மீது நாங்கள் எல்லையில்லா அன்பினை வைத்துவிட்டோம்.உனது குழலோசை எங்களைக் கட்டி இழுத்து அழைத்து வந்து விட்டது.அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.நீயே பொறுப்பு"

"கோபியர்களே! உங்கள் அன்பை நான் அறிவேன்.அதற்காக எப்போதும் என் அருகில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவது சரியல்ல.தூர இருந்தாலும்,என்னை நினைத்து என்னிடம் மனதை செலுத்துங்கள்.நான் உங்கள் அருகில் இருப்பது போலவே உணருவீர்கள்.இப்போது அவரவர் இல்லங்களுக்கு செல்லுங்கள்"

கோபியர்களின் கண்களில் கண்ணீருடன் சொல்கிறார்கள்..

"கண்ணா! எல்லாவற்றையும் துறந்து,உன்னிடம் ஓடி வந்த எங்களை உதறுவது நியாயமா?வீடு,குடும்பம்,குழந்தைகள் என கடமைகள் எங்களுக்கு உண்டு.ஆனால்..உன் மீது பற்று வைத்த பின், அவற்றின் மீது எங்களுக்கு நாட்டம் வரவில்லை.எங்கள் இதயம் உன் வசப்பட்டு விட்டது.நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் போகச் சொல்லாதே! இனி உன்னைத் தவிர எங்களுக்கு வேறு யாருமில்லை .எங்களை நீ ஏற்க மறுத்தால்,இப்பவே..உன் பாதங்களில் உயிர் துறப்போம்"

கண்ணன் அவர்களின் மன உறுதியைப் புரிந்து கொண்டான்.அவர்களை அழைத்துக் கொண்டு யமுனை நதிக்கரையின் வெண்மணல் பரப்பினை அடைந்தான்.அனைவரோடும் "ராசலீலை" செய்தான்.

வைஜயந்தி மாலை அணிந்த, பட்டுப் பீதாம்பரதாரியான கண்ணன், நூற்றுக் கணக்கான கோபியர்களுடன், வேணுகானம் இசைத்தபடி நடனம் ஆடினான்.அவர்களை உல்லாசத்தில் ஆழ்த்தி,பல்வேறு காமக் கேளிக்கைகள் செய்தான்.பருவப் பெண்கள்,சிறுமிகள்,மணமானவர்கள்,மூத்தவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி அவனுடன் கலந்து இன்பமடைந்தனர்.வேட்கை தணிந்தனர்.கூடவே கர்வமும் அடைந்தனர். 

அண்ட சராசரங்களையும் த்ன்னுள் கொண்டுள்ள கண்ணன்,தங்களிடம் மையல் கொண்டு,தங்களை  மோகிக்கிறான் எனும் நினைப்பு  கோபியர்களின் மனதில் தோன்றியது.கூடவே தங்கள் அழகின் மீது கர்வமும் அடைந்தனர்.

ஒவ்வொரு அணுவின் அசைவினையும் தெரிந்து கொள்ளும் மாயனுக்கு,கோபிகைகளின் எண்ணம் புரியாமலா இருக்கும்.அவர்களின் கர்வத்தை அழிக்கத் தயாரானான்.கோபியர்கள் மத்தியிலிருந்து மாயமானான்.

கிருஷ்ணனைக் காணாத கோபியர்கள் திகைத்தனர்.தேடினர்.கண்டுபிடிக்க முடியாது பரிதவித்தனர்.மரம், செடி கொடிகளிடமெல்லாம் நின்று"எங்கள் கண்ணனைப் பார்த்தீர்களா", என்று கேட்டு அழுதனர்.பைத்தியம் பிடித்தவர்கள் போல ஊரை சுற்றிச் சுற்றி வந்தனர்.

கண்ணனைப் போல, பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும்,தங்களை அவனாகவே பாவித்துக் கொண்டனர்.அவனது பாலலீலைகளை அபிநயத்து ஆடினர்.அவர்கள் சுயநிலைக்கு வரும் போது...கண்ணனின் மகிமைகளைச் சொல்லிச் சொல்லி புலம்பிப் பாடினர்.அந்தப் பாடல்களே "கோபிகா கீதம்"எனப்போற்றப்படுகிறது.

கோபியர்களை சோதித்தது போதும் என்று கருதிய கண்ணன்,அல்ங்கார சொருபீயாக,மன்மதனே வெட்கப்படும் அழகியவனாக அவர்கள் முன் தோன்றி அவர்களை அழைத்தான்.

 அருகே கண்ணனைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீருடன் ஓடி வந்தனர்.

ஒருத்தி தன் கைகளோடு அவன் கைகளை சேர்த்துக் கொண்டாள்

தாபத்தால் அவன் விரல்களைப் பற்றி நெரித்தாள் இன்னொருத்தி

அவன் தோள்மீது சாய்ந்து கொண்டு,அவனது புஜத்தை வலிக்காமல் கடித்தாள் மற்றவள்

ஒருத்தி மார்புற தழுவிக் கொண்டு, தன் திரண்ட மார்பகங்களில் அவன் தலையை சாய்த்துக் கொண்டாள்

மற்றொருத்தி அவன்முதுகின் மீது தன் மார்பகங்களை வைத்து அழுத்தி,அணைத்து,இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

அவன் தலை முடியைப் பற்றி,சிவந்த உதடுகளை அன்புடன் ஒத்தி,அவனது திவ்விய உருவத்தை கண்களில் நிரப்பிக் கொண்டு,அதிலிருந்து அவன் வெளியேற முடியாதபடி ஒருத்தி.

"கண்ணா எங்களை விட்டு ஏன் பிரிந்து சென்றாய்?எங்களை ஏன் சோதிக்கிறாய்?எங்களை விட்டு ஏன் பிரிந்து சென்றாய்?"என கெஞ்சலாகவும்,கொஞ்சலாகவும், கோபமாகவும் கேட்டனர்.

"ஒரு பொருளைத் தொலைத்து விட்டு,அதைத் தேடி ஏங்கி, மீண்டும் அது கைக்குக் கிடைத்தால் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்குமல்லவா? அந்த சந்தோஷத்தை நீங்கள் உணரவேண்டும் என்றே காணாமல் போனேன்' என்றான்."ஊடலுக்குப் பின் கூடல்களும் தேனாய் இனிக்கும் தெரியுமா" என்று கள்ளநகைப் புரிந்தான்.

யமுனையின் வெண்மணல் பரப்பு.நிலவின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.ஒரு சிறு மணல் குன்றின் மீது, கோபிகைகள் தங்கள் மேலாடைகளை விரித்தனர்.நடுவே கண்ணனை அமர்த்தி,அவனைச் சுற்றி அமர்ந்தனர்.அவனைப் பிரிந்து தவித்தது,துடித்தது,தாபவசப்பட்டது என பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.நேரம் போவதேத் தெரியாமல், இரவு கழிந்துக் கொண்டிருந்தது.

பின்னர் "ராஸநடனம்" தொடங்கியது.

ஒருவர்..ஒருவருடன் கைகளைக் கோர்த்து..வட்ட வட்டமாகக் கூடிக் கொண்டும், ஒருவர் தோள் மீது ஒருவர் கைவைத்து அணைத்துக் கொண்டும் ஒரே லயத்துடன் நடனமாடினர்.கண்ணனும், கோபியர்களும் ஆடிய அந் த ராஸலீலை கண்களைக் கவர்ந்தது.

கண்ணனின் ராஸலீலையைக் காண, வானவர்களும் விண்ணில் கூடினர்.கந்தர்வர்களும் கானம் பாடினர்.யாழ் இசைத்தனர்.அப்சரஸ்களும் கலந்து கொள்ள நடனத்தின் வேகம் கூடியது.கால் சலங்கைகளும், கை வளையல்களும் குலுங்கும் சப்தம் இன்னிசையாக எங்கும் ஒலித்தது.

ஒவ்வொரு கோபிகைகளும் தனித்தனியே..கண்ணன்கள் ஏராளமாக உருவாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.வேகம்..வேகம்..என வேகம் கூடியதில்  சோர்வடைந்த கோபிகைகளின் வேர்வைத் துளிகளால் கண்களில் இட்ட மை கலைந்து வழிந்தது.நெற்றித் திலகம் ஈஷிக் கொண்டது.கூந்தல் கலைந்தது.ஆடைகள் நழுவின.ஆபரணங்கள் கலைந்து விழுந்தன..மாலைகள் உதிர்ந்தன.

ஆட்டம் முடிந்து கோபியர்களை அணைத்து,யமுனை நதியின்  குளிர்ந்த நீரில் குளிக்கச் செய்தான் கண்ணன்.

அங்கும் சிரிப்பும், கேலியும், குதூகலமுமாக "உல்லாச ஜலக்ரீடை" நடத்தினான்.

ஆமாம்..பிருந்தவனத்திலிருந்து கோபிகைகள் அனைவரும் யமுனை நதிக்கரைக்கு வந்துவிட்டார்களே! அவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாதா?

தெரியாது..ஏனெனில்..

கண்ணனுடன் கோபிகைகள் இருந்த அதே நேரத்தில் அவர்கள் கணவர்களுடனும் இருந்தனர்.பிரம்மா குறும்பு செய்த போது, தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் உருக் கொண்ட மாயவன், கோபியர்கள் வடிவத்திலும் தானே கோபிகைகளாகவும் இருந்தான்.
அதனால்தான், கண்ணனின் லீலைகளில் மனம் குளிர்ந்து, கோபிகைகள் வீடு திரும்பிய போது, அவர்களின் கணவர்கள் தங்களை விட்டு அவர்கள் பிரிந்திருந்ததை உணரவில்லை.இதுவரை கோபியர்களாக இருந்தது கண்ணன்தான் என்பதை கணவன்மார்களும் அறியவுமில்லை.

கோபியர்களுடான "ராஸலீலை" என்பது,ஆத்மா..பரமாத்மா என்பதான ஜீவ தத்துவம்.

இந்த உலகமே பிருந்தாவனம்.இங்கு வாழும் ஜீவன்களே கோபியர்கள்.பரமாத்மாவாகிய கிருஷ்ணன் , இந்த ஜீவன்களிடம் மறைந்தும், வெளிப்பட்டும் விளையாடுகிறான்.தான் பரமாத்மா..என்பதை ஜீவன்கள் உணர்ந்து தன்னிடம் லயப்பட வேண்டும் என அவன் இப்படி செய்கிறான்.எனவே, இருஷ்ண லீலை எல்லாம் ஜீவன்கள் சுகப்படத்தானேத் தவிர..தான் சுகப்பட அல்ல.



No comments:

Post a Comment