Wednesday, July 29, 2020

8 - இந்திரன் திருடிச் சென்ற குதிரை

துருவனுக்குப் பிறகு அரசாண்ட அவன் மகன் உத்கலன் ஒரு துறவிபோல வாழ்க்கை நடத்தினான்.தியானத்திலேயே காலத்தைக் கழித்தான்.அரச பரிபாலனம் ஸ்தம்பித்துப் போனது.

உத்கலனுக்கு பதிலாக மற்றொரு மனைவியினான பிரமியின் மகன் வத்சரன் மன்னனாக்கப்பட்டான்.அவன் சுவிதி என்பவளை மணந்து வம்சத்தை விருத்தி செய்தான்.

வத்சரனுக்குப்பின், புஷ்பார்ணன்,வியுஷ்டன்,சர்வட்ஹேஜன்,சக்ஷூஸ்,உல்முகன்,அங்கன் ஆகியவர்கள் அரசாண்டனர்.

அங்கன் அரசாண்டபோது ஒரு அசுவமேதயாகம் செய்தார்.ஆனால் யாகத்தில் அளிக்கப்பட்ட அவிர்பாகத்தை பெற்றுக் கொள்ள தேவர்கள் யாரும் வரவில்லை.அதனால் அங்கன் வேதனைப்பட்டான்..

"எக்குறையும் இல்லமல்தானே யாகம் நடத்தினேன்.அப்படியிருக்கையில் தேவர்கள் ஏன் அவிர்பாகம் பெற்றுக் கொள்ளவில்லை.நான் என்ன தவறிழைத்தேன்' என வருந்தினான்.

அப்போது அங்கு வந்த மகரிஷி ஒருவர்,"மன்னா..இப்பிறவியில் நீ எந்தத் தவறும் செய்யவில்லை .யாகத்திலும் எந்தக் குறையும் இல்லை.ஆனால் முன்ஜன்மத்தில் நீ செய்த பாவத்தின் விளைவாக இப்பிறவியில் உனக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை.அப்படி உனக்கு சந்ததி இல்லாததால்தான் தேவர்கள் அவிர்பாகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்" என்றார்.

இதனால் மனம் கலங்கிய அங்கன்'இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என்றான்.

"முதலில் நீ உன் வம்ச விருத்திக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்.அதன் பலனாக சந்ததி பெருகும்.அதன்பிறகு நீ யாகத்தைச் செய்.தேவர்கள் வந்து அவிர்பாகத்தை ஏற்றுக் கொள்வார்கள் "என்றார்.

அங்கன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்.அந்த யாகத்தின் போது, யாக குண்டலத்திலிருந்து கையில் தங்கப் பாத்திரத்துடன் ஒரு தேவ புருஷன் வெளிப்பட்டு அங்கனிடம் அப்பாத்திரத்தைக் கொடுத்து, "இந்தப் பாத்திரத்திலிருக்கும் பாயசத்தை உன் மனைவிக்குக் கொடு"எனச் சொல்லி மறைந்தான்.

பாயசத்தைப் பருகிய அங்கனின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.

அக்குழந்தைக்கு "வேனன்" எனப்  பெயர் சூட்டி பாசத்துடன் வளர்த்தான் அங்கன்.ஆனால், அக்குழந்தை மிகவும் கொடியவனாகவும், கொடுமைக்காரனாகவும் வளர்ந்தது.

சிறுவயதிலேயே மிருகங்களை சித்ரவதை செய்து கொல்வதும், சக சிறுவர்களை வதைப்பதும், குழந்தைகளின் கழுத்தைத் திருகிக் கொல்வதுமாக பல கொடூரச் செயல்களைச் செய்தான்.

அங்கன் அவனைத் திருத்த எவ்வளவோ முயன்றும் அவன் திருந்தவில்லை.அதனால் விரக்தியடைந்த அங்கன் யாரிடமும் சொல்லாமல் ராஜ்ஜியத்தைத் துறந்து கானகத்திற்குச் சென்று விட்டான்.

அரசன் காணாமல் போனதை அறிந்த மந்திரிப்பிரதானிகள் அதிர்ந்து போனார்கள்.

அரசன் இல்லா ராஜ்ஜியம் அபாயகரமானது.தீயவர்கள் கட்டுக்கடங்காமல் வளர்ந்து அக்கிரமம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.அப்பாவி மக்கள் இவர்களிடம் சிக்கிக் கடும் துன்பம் அடைவார்கள்.எதிரி நாட்டு அரசர்களும் படையெடுத்து வந்து ராஜ்ஜியத்தை அபகரிக்க முயல்வார்கள்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்த அமைச்சர்கள், தீயவன் எனத் தெரிந்தும் வேறு வழியில்லாமல் மகன் வேனனை அரசனாக்கினார்கள்.ஆனாலும்..அவன் அட்டகாசம் மேலும் அதிகரித்தது.அரசன் என்பதால் தானும் கடவுள் போல பாவித்துக் கொண்டான்.

நாட்டில் யாகம், ஹோமம்,தானம், தவம் எதுவும் நடைபெறக்கூடாது என கட்டளையிட்டான்.அதையும் மீறி செய்ய முறையிட்ட ரிஷிகளையும்,முனிவர்களையும் சிறையில் அடைத்து சித்திரவதைப் படுத்தினான்.அவர்களைக் கொன்றான்.

இதனால் மகரிஷிகள் பதறினர்.அனைவரும் அவனிடம் சென்று , இறைவனைத் துதிப்பதற்கும், யாகங்கள் நடததவும் அனுமதியளிக்கும்படி வேண்டினர்.

இவர்கள் சக்தியை அறியாத வேனன் ஆணவமாக சிரித்தான்.பின், "மன்னனும் கடவுளின் அம்சம்.அதனால் நானே இனி கடவுள்.ஆகவே எனக்குக் கோயில் கட்டுங்கள்.மற்ற கோயில்களை இடியுங்கள்.என்னை ஆராதித்தே வேள்விகளும்,வழிபாடுகளும் நடக்கட்டடும்."என்றான்.

முன்பு அங்கன் ராஜ்ஜியத்தைத் துறந்து சென்றபோது அமைச்சர்கள் எப்படி பயந்தனரோஅப்படி இப்போதும் பயந்தனர்.

வேனன் இறந்து போனபின்னர்,மீண்டும் ஆள அரசன் இல்லாததால் நாட்டில் அதர்மம் தலைவிரித்தாடியது.கொலையும், கொள்ளையும் நடைபெற்றன.மக்கள் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

இதனால் ரிஷிகள் ஒரு முடிவிற்கு வந்தனர்.வேனனின் வம்சம் அவனுடன் முடிந்து போகாமல் தொடர தீர்மானித்தனர்.

இறந்துபோன வேனனின் தொடையைக் கடைந்தார்கள்.அதிலிருந்து கோரமான உருவமுடைய ஒருவன் தோன்றினான்.அவனால் நாட்டுக்கு நன்மை ஏற்படாது என உணர்ந்த முனிவர்கள் அவனை "விலகி இரு" என்றனர்.அவன் வம்சத்தில் வந்தவர்கள் நிஷாதர்கள் என்று அழைக்கப்பட்ட வேடர்கள் ஆவர்.இவர்கள் ராஜ்ஜியத்தைவிட்டு விலகி காட்டுக்குள் இருந்து கொண்டனர்.

பின் முனிவர்கள் வேனனின் புஜங்களைக் கடைய,அதிலிருந்து ஒரு ஆணும்,ஒரு பெண்ணும் தோன்றினர்.அவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமாகத் தோன்றியவர்கள் என்பதால் ஆணுக்கு பிருது என்றூம் பெண்ணுக்கு அர்ச்சி என்றும் பெயர் சூட்டினார்கள்.

பின்னர், பிருதுவிற்கு அர்ச்சியை திரும்ணம் செய்து வைத்தனர்.வானவர்கள் பூமாரி பொழிய,கந்தர்வர்கள் கானம் பாட,அப்சரஸ்கள் நடனமாட, தேவர்கள் வெகுமதிகளைக் கொணர்ந்து குவித்தனர்.

பிருது அனைவருக்கும் நன்றி கூறி வணங்கி நாட்டை ஆளத் தொடங்கினார்கள்.

ஆனால் நாட்டில் பசியும் பட்டினியும் ,பஞ்சமும் என மக்கள் துன்பப்பட்டுக்கொண்டுதான் இருந்தனர்.பூமியில் விளைச்சலே இல்லை.

இதைக் கண்டு மனம் வருந்திய பிருது..அதற்கானக் காரணத்தை ஆராய்ந்த போது, பூமாதேவியே காரணம் என அறிந்தான்.அனைத்து விதமான தானியங்களையும்,விதைகளையும் தனக்கெனவே வைத்துக் கொண்டதால்தான் பூமியில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என அறிந்து ஆத்திரம் அடைந்தான்.

பூமாதேவியைத் தண்டிக்க வில்லில் அம்பைத் தொடுத்து தாக்க முற்பட்டான்.
பூமாதேவி நடுக்கத்துடன் ஒரு பசுவாக மாறி ஓடத் தொடங்கினாள்.
பிருது அவளைத் துரத்திப் பிடித்தான்.

பூமாதேவி பயத்துடன் "பிருது மன்னனே! ஒரு பெண்ணைப் போய்க் கொல்ல நினைக்கின்றாயே?" என்றாள்.

"மக்களுக்கு கெடுதல் நினைப்பவர்களை தண்டிப்பது மன்னனின் கடமை.யாகங்கள் செய்யப்படும் போது அளிக்கப்படும் அவிர்பாகத்தைப்  பெற்றுக் கொண்டு பிரம்மன் அளித்த தானியவகைகளைத் தராமல் பதுக்கி வைத்துக் கொள்கிறாயே..அது நியாயமா? ஏன் இப்படி மக்களை வதைக்கிறாய்" என்றான் பிருது.

முன்பு வராக அவதாரம் எடுத்து தன்னைக் காத்த மகாவிஷ்ணுவின் அம்சமே பிருது மன்னன் என்பதை உணர்ந்த பூமாதேவி பண்புடன் கூறினாள்.

"மன்னனே! பூமியில் நீண்ட நாட்களாக பூஜைகள்,யாகங்கள்நடைபெறாததால் விளைச்சலை வெளியிடாது அடக்கிக் கொண்டேன்.நெடுநாட்களாக அவை எனக்குள் அடங்கிவிட்டதால் மொத்தமும் ஜீரணம் ஆகிவிட்டது.பகவான் அம்சமாகிய உன்னால் முடிந்தால் அவற்றைப் பெற்றுக்கொள்"

பிருது சில வினாடிகள் யோசித்தான்.பின், தன் முன்னோரான சுவாயம்புவ மனுவை கன்றாக்கி, தன்னையே மாடு கறப்பவனாக ஆக்கிக் கொண்டு பூமியாகிய பசுவிலிருந்து  புல்,பூண்டு,மூலிகைகள்,தானியங்கள்,விதைகள் போன்ற மக்களுக்குத் தேவையான அனைத்து விளைச்சலையும் கறந்து கொண்டான்.

பிருதுவைப் போலவே மற்ற தேவர்களும்,முனிவர்களும், ரிஷிகளும் கூட பூமாதேவியிடமிருந்து தங்களுக்குத் தேவையான ஞானத்தையும்,அமிர்தத்தையும்,மது போன்றவற்றையும் கறந்து கொண்டனர்.

அரசன் பிருது பூமியை தனது மகளாகவே ஏற்றுக் கொண்டதால், பூமிக்கு பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டது.ம லைகளையும்,சிகரங்களையும் தகர்த்து சமமாக்கி..நிலங்களைச் சமப்படுத்தி பயிர்கள் செழிப்பாக வளரச் செய்தான்.நாடு,நகரங்கள்,கிராமங்களை நிர்ணயித்தான்.குடிமக்கள் சுபிட்சமாக வாழுமாறு பார்த்துக் கொண்டான்.

இதனால் பிருது மன்னன் பூவுலகில் சக்ரவர்த்தியாக அசுவமேதயாகம் செய்ய தீர்மானித்தான்.நூறு அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தான்.அதற்கு மூவுலகில் இருந்து அந்தணர்களும்,ரிஷிகளும்,முனிவர்களும் வந்து குவிந்தனர்.யாகத்திற்கு பிரம்மா, விஷ்ணு,சிவன் என மும்மூர்த்திகளூம் வந்து கலந்து கொண்டனர்.ஒன்றன் பின் ஒன்றாக யாகங்கள் நடைபெற்று வந்தன.

தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் இதைக் கண்டு மனதிற்குள் பயந்தான்.அசுவமேதயாகங்கள் செய்து..பிருது தனது இந்திரப்பதவியை அடைந்து விடுவானோ என எண்ணி யாகம் நடைபெறாமல் இருக்க திட்டம்மிட்டான்.

யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, யாருக்கும் தெரியாமல் யாகக்குதிரையைத் திருடிக் கொண்டு சென்று விட்டான்.இதைக் கண்ட அத்ரி மகரிஷி, பிருதுவின் மகனான விஜிதாஸ்வனிடம் ,குதிரையை மீட்டுக் கொண்டு வரச் சொல்லி அனுப்பினார்.

விஜிதாஸ்வனிடம் இருந்து தப்ப, இந்திரன் துறவி வேடமிட்டு ஆகாயத்தில் சஞ்சரித்தான்.துறவி வேடத்தில் இருப்பது இந்திரனே என் அறிந்த விஜிதாஸ்வன் அவனைத் துரத்திப் பிடித்தான்.

சிக்கிக் கொண்ட இந்திரன், அப்போதைக்கு குதிரையை விட்டுச் சென்றான்.ஆனால் முயற்சியைக் கைவிடாது மீண்டும் திருடிச் சென்றான்.

இதனால் பிருது கோபமடைந்தான்.தானே சென்று இந்திரனைக் கொன்று குதிரையை மீட்டு வருவதாகக் கூறினான்.

ரிஷிகள் அவனை சமாதானப் படுத்தினர்.

"மன்னா! யாகத்துக்கு தீட்சை எடுத்த நீ இங்கிருந்து போகக் கூடாது.அதுமட்டுமின்றி, யாகப்பசுவைத் தவிர வேறு எந்த ஜீவனையும் கொல்லவும் கூடாது.நாங்கள் மந்திரங்கள் சொல்லி,இந்திரனை இங்கு வரவழைத்து யாககுண்டத்தில் பலியாக்கி விடுகிறோம்" என்றனர்.

அப்போது பிரம்மன் அவர்களைத் தடுத்தான்.

'யாகங்களில் அவிர்பாகம் பெற்றுக் கொள்ளும் தேவர்களின் அதிபதியான இந்திரனைக் கொல்வது சரியல்ல.தொண்ணூற்றி ஒன்பது யாகங்களை செய்து பிருது இந்திரனைவிடப் புகழ் பெற்று விட்டான்.எனவே அவன் நூறாவது யாகத்தைச் செய்ய வேண்டிய அவசியமில்லை"என்றான்.

பின் ,பிருதுவிடம் "மன்னனே! ..தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி பயத்தில் இந்திரன் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டான்.நீயும் இந்திரனும் ..இருவருமே விஷ்ணுவின் அம்சம் கொண்டவர்கள்.எனவே இந்திரனை மன்னித்துவிடு"என்றனர்.

பின் பிருது தனது தொண்ணூற்று ஒன்பதாம் யாகத்தை மகாவிஷ்ணுவின் முன் பூர்த்தி செய்தான்ன்.அதற்கு இந்திரனும் வந்து வாழ்த்தினான்.மகாவிஷ்ணு, பிருதுவிடம்"வேண்டும் வரம் கேள்" என்றார்.

பிருது அவரை வணங்கி"பகவானே! எப்போதும் உம்மையே துதித்து..உங்களையேப் பாடி..உங்கள் புகழினைக் கேட்டு பரவசமாக வேண்டும்" என்றான்.

"அதன்படியே பக்திமானாகவே பிருது நீண்ட காலம் அரசாண்டான்.முதுமையில், தன் மகன்களிடம் அரசை ஒப்படைத்துவிட்டு கானகம் சென்றான்.அங்கு தவமிருந்து இறைவனடி சேற்ந்தான்"...என்று சுகர் மகரிஷி சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தான் பரீட்சித்.

"மகரிஷி..நான் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணிய இன்று உங்கள் திருவாய் மூலம் புண்ணியக் கதைகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.அந்த இறைவனுக்கும்,புண்ணிய சீலரான தங்களுக்கும் நன்றி.தொடர்ந்து சொல்லுங்கள்" என்றான்.

No comments:

Post a Comment