Tuesday, July 28, 2020

7 - துருவனின் கதை

பிரம்மனின் மகனான சுவாயம்புவ மனுவிற்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள்.மகன்கள் பெயர் பிரிய வரதன்,உத்தானபாதன்.

உத்தானபாதன் ,சுநீதி என்னும் பெண்ணை மணந்து அவர்களுக்கு துருவன் எனும் மகன் பிறந்தான்.உத்தானபாதன் ,சுருசி எனும் மற்றொரு பெண்ணைக் காதலித்து மணம் புரிந்தான்.

இரண்டாவது மனைவி சுருசியின் மீது மிகவும் மோகம் கொண்ட உத்தானபாதன், முதல் மனைவி சுநீதியை மறந்து போனான்.அவளை மறந்து சுருசியின் அந்தப்புரமே கதி எனக் கிடந்தான்.சுருசிக்கும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.அதற்கு உத்தமன் எனப் பெயரிட்டு இருந்தரகள்.

குழந்தைகள் இருவரும் வளர்ந்து சிறுவர் ஆயினர்.

ஐந்து வயது துருவன்..தனது தந்தை தன்னைக் காண வராததால் அவரைத் தேடி சுருசியின் அந்தப்புரம் வந்தான்.அங்கு தனது தம்பியான உத்தமனோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது உத்தமன் அங்கு அமர்ந்திருந்த தந்தையின் மடியில் அமர்ந்து கொள்ள,துருவன் தானும் தந்தையின் மடியில் அமர முயன்றான்.அப்போது அவனின் சிற்றன்னை சுருசி கோபத்துடன் துருவனைப் பிடித்துத் தள்ளினாள்.

பின் அவனிடம், "நீ மன்னனின் முதல் மகனாய் இருக்கலாம்.ஆனால், அதனாலேயே தந்தையின் மடியில் அமரும் உரிமையும், அரியாசனத்தில் ஏறும் தகுதியும் உனக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளாதே!அந்த பாக்கியம் என் மகன் உத்தம னுக்கே! அடுத்த ஜென்மமாவது எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என தவம் செய்து இறைவனிடம் வரம் பெற்று வா" என்று  கூறி அவனைத் துரத்தி விட்டாள்.

சிற்றன்னையின் கடு மொழியால்  மனம் வேதனையடைந்த துருவன், கண்ணீருடன் வெளியேறினான்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் உள்ளம் வேதனை அடைந்தாலும்..சுருசிக்கு பயந்து மௌனமாகிவிட்டான்.

துருவன் அழுதுக் கொண்டே தாயிடம் ஓடி வந்து அவள் மடியில் விழுந்து கதறினான்.சுநீதி பதறிப் போனாள்.துருவன் நடந்த விஷயங்களைக் கூறினான்.

சுநீதி மனம் உடைந்தாள்.கணவர் தன்னைப் புறக்கணித்ததுடன் தன் குழந்தையையும் புறக்கணிக்கிறாரே..அவனிடம் இப்படி நடந்து கொண்டுவிடடர்களே..என மனம் வருந்தி, பின் மகனிடம் கூறினாள்..

"துருவா..விதி நம்மை வஞ்சித்துவிட்டது.என் வயிற்றில் பிறந்ததால்தான் உன் தந்தையின் மடியில் உட்கார உனக்கு இடமில்லாது போய் விட்டது.ஆதரவற்ற நம்மை அந்த ஆண்டவன்தான் காக்க வேண்டும்.நீ பகவான் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்..நல்லதே நடக்கும்" என்றாள்.

"அம்மா..நாராயணனை பிரார்த்தனை செய்தால், அவர் என்ன தருவார்?

"நீ வேண்டும் அனைத்தும் தருவார்.பிரம்மன் அவரை பூஜித்தே பிரம்ம பதவியினை அடைந்தார்.பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தினைப் பெற்றனர்.நீ அரசப் பதவியை அடைய விரும்பினாலும் சரி..தேவலோகத்தையேக் கைப்பற்ற நினைத்தாலும் சரி..இறைவனை சரணடைந்தால் நடக்கும்"

தயைன் இந்த வார்த்தைகள் துருவனின் மனதில் ஆழமாகப் பதிய, தாயின் அனுமதியினைப் பெற்று தவம் செய்ய காட்டுக்குச் சென்றான்.

அப்போது திரிலோகசஞ்சாரியான நாரதர் அந்தப் பக்கம் வந்தார்.சிறுவன் ஒருவன் காட்டுப்பாதையில் பயமின்றி செல்வதைக் கண்டார்.அவனைத் தடுத்து நிறுத்தி, "பாலகனே! நீ யார்?கொடிய விலங்குகள் நடமாடும் இக்காட்டிற்குள் எதற்காக வந்தாய்?"என்றார்.

துருவன் அவரிடம், "நான் உத்தானபாதனின் மகன்.கடவுளைக் காண்பதற்காக தவம் இருக்க  செல்கிறேன்" என்றான்.

இத்தனை சிறு வயதில் தவம் செய்யப் போகிறானா இச்சிறுவன் என ஆச்சரியத்துடன் நாரதர், குழந்தை யார் பேசுவதையோக் கேட்டு அறியாமையால்  பேசுவதாக எண்ணி துருவனுக்கு புரியும்படியாக"குழந்தாய்!இறைவனைக் காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல.பெரியப் பெரிய முனிவர்களும், ரிஷிகளும் ஆண்டாண்டு காலங்களாக தவமிருந்தும் க்டவுளைக் காணமுடியாத நிலையில் இருக்கும்போது..உன்னால் எப்படி முடியும்? நால் சொல்வதைக் கேள்..நீ பெரியவன் ஆனதும் முயற்சி செய்..இப்போது திரும்பிப் போ" என்றார்.

ஆனால் துருவன் பின் வாங்கவில்லை."என்னால் முடியும்.நான் கண்டிப்பாக பகவானை சந்திப்பேன்.நாம் உண்மையான அன்புடன் கூப்பிட்டால், கண்டிப்பாக கடவுள் வருவார் என என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்"என்றான் துருவன்.

நாரதர் மேலும் தவமிருப்பதில் உள்ள கஷ்டங்களைச் சொல்லியும் சிறுவனின் மனவுறுதி தளரவில்லை.அவனின் நம்பிக்கையையும், திடமான எண்ணத்தையும் கண்டு அவனுக்கு உதவ அவர் தீர்மானித்தார்.

"குழந்தாய் உன் நம்பிக்கை எனக்கு திகைப்பூட்டுகிறது.மகிழ்ச்சியைத் தருகிறது.உனது முயற்சியில் நீ வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்."என்று கூறிய நாரதர் அவனுக்கு தவம் செய்யும் வழிமுறைகளைக் கூறினார்.பின்..

"துருவா! யமுனை நதிக்கரையில் மதுவனம் எனும் புண்ணியத்தலம் இருக்கிறது. நீ அங்கு சென்று உன் தவத்தை ஆரம்பி.ஸ்ரீஹரியை மனதில் நிறுத்தி தவம் செய்.இப்போது நான் சொல்லும்'ஓம் நமோ பகவதே வாசுதேவாயா" என்ற மகாமந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வா.பகவான் நாராயணன் கண்டிப்பாக உனக்கு தரிசனம் தருவார்"என ஆசிர்வதித்து அனுப்பினார்.

துருவன் மதுவனம்நோக்கிச் சென்றதும் நாரதர் துருவனின் தந்தை உத்தான பாதனிடம் சென்றார்.அங்கு அவன் துருவனை நினைத்து வருந்திக் கொண்டிருந்தான்.நாரதரைக் கண்டதும் வணங்கி தன் வேதனைகளைச் சொன்னான்.

"துருவனைப் பொறுத்தவரை ஒரு தகுதியில்லாத தந்தையாக நடந்து கொண்டு விட்டேன்.மனம் வெறுத்து அவன் காட்டுக்கு சென்று விட்டான்.கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படலாம்.எங்கு கஷ்டப்படுகிறானோ..அவன் உயிரோடு இருக்கிறானோ என்று கூட பயப்படுகிறேன்"

ஆதற்கு நாரதர், "உனது மகன் துருவன் யாராலும் சாதிக்க முடியாததை சாதிக்கப் பிறந்தவன்.அவன் கண்டிப்பாக கடவுளை தரிசித்து அவன் அருளைப் பெறுவான்.பெரும் புகழைப் பெறுவான்.மனம் வருந்தாதே" என்று கூறினார்.

துருவன் வருகையால் மதுவனம் பலமடங்கு பசுமையுடன் இருப்பது போலக் காட்சியளித்தது.பறவைகளின் இனிய ஒலியும்..மான்களின் துள்ளலுமாக ரம்யமாகக் காட்சியளித்தது.

துருவன் யமுனை நதிக்கரையில் நாரதர் உபதேசித்தபடி தீவிரமான தவத்தில் ஈடுபட்டான்.பகலில் மட்டும் சாப்பாடு..இரவில் உபவாசம் இருந்தான்.

அந்தப் பகல் உணவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை விளாம்பழத்தினையும்,இலந்தம்பழத்தைனையும் மட்டுமே சாப்பிட்டு வந்தவன்...இரண்டாம் மாதம்..ஆறு நாட்களுக்கு ஒருமுறை புல்,சருகு, இலை மட்டுமே சாப்பிட்டான்.மூன்றாம் மாதம் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை நீரை  மட்டுமே உணவாகக் கொண்டான்.நான்காம் மாதம் வெறும் காற்றினை உணவாகக் கொண்டான்.ஐந்தாம் மாதம் அதையும் நிறுத்தி கல் போல இறுகிப் போனான்.மகாவிஷ்ணுவை தியானித்து ஒற்றைக்காலில் நின்று அவன் செய்த தீவிர தவத்தால் பூமி நடுங்கியது.தேவர்கள் திணறினர்.தவத்தின் உக்கிரகத்தால் வெப்பம் சுட்டெரித்தது.அனைவரும் பயந்து விஷ்ணுவிடம் ஓடிச்சென்றனர்.

துருவனின் பெருமையை தேவர்கள் உணர வேண்டும் என காத்திருந்த பெருமாள் துருவனுக்கு முன் தோன்றினார்.

இடைவிடாது விஷ்ணுவை தியானித்துக் கொண்டிருந்தவன் அவர் நேரில் வந்ததை உணரவில்லை.

மகாவிஷ்ணு புன்னகையுடன் தன் கையிலிருந்த சங்கினால் துருவனின் கன்னத்தை வருடியபடியே"துருவா  கண்விழித்துப் பார்.உன் மகாவிஷ்ணு வந்திருக்கின்றேன்"என்றார்.

பகாவானின் இனிய குரலினைக் கேட்டு கண் விழித்த துருவன்..எதிரில் விஷ்ணுவைப் பார்த்து மெய் சிலிர்த்தான்..பலவித துதிப் பாடினான்."பகவானே என்றும் உம்மை மறக்கா வரம் வேண்டும்" என வேண்டினான்.

விஷ்ணுவும், "என் அன்பு பாலகனே! நீ அடைய விரும்புவதை நான் அறிவேன்! உன் தந்தை உத்தான பாதன் ராஜ்ஜியத்தை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் செல்லப் போகிறான்.நீ இந்த பூமியை நீதி தவறாது ஆண்டு வருவாயாக.பின்னர், விண்ணுலகில் அழிவில்லா நித்தியமான ஸ்தானத்தை அடைந்து சிறப்படைவாய்"என வரம் அளித்தார்.

துருவன் மனத்திருப்தியுடன் நாடு திரும்பினான்.அவன் இறைவனை நேரில் தரிசித்து வரும் செய்தி எங்கும் பரவியது.உத்தனபாதனும்,துருவனின் தாயும், சிற்றன்னையும் மற்றும் நாட்டு மக்களும் ஒன்று திரண்டு   வரவேற்றனர்.சிற்றன்னை சுருசி மனம் திருந்தி துருவனை கொஞ்சி மகிழ்ந்தாள்.

தாய் சுநீதி, மகனைத் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.தந்தை உத்தான பாதன் துருவனுக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.பின் ராஜ்ஜியத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்ய காட்டுக்குப் போனான். 

துருவன் நாட்டை நல்ல முறையில் ஆண்டான்.சிம்சுமாரன் என்னும் பிரஜாபதியின் மகளான பிரமியை மணந்தான்.அவர்களுக்கு கல்பன்,வத்சரன் எனும் பிள்ளைகள் பிறந்தனர்.பின் வாயுமகளான 'இளை"என்பவளை மணந்து அவள் மூலம் உத்கலன் எனும் மகனையும் ஒரு பெண்ணையும் பெற்றான்.

துருவனின் தம்பியான உத்தமனோ,திருமணம் செய்து கொள்ளாமல், வேட்டையில் பிரியம் கொண்டவனாகத் திகழ்ந்தான்.ஒருநாள் இமயமலைச் சாரலில் வேட்டைக்குச் சென்றபோது ஒரு யட்சனால் கொல்லப்பட்டான்.உத்தமனைத் தேடிப்போன அவன் தாய் சுருசியும் மகன் இறந்த துக்கம் தாளாமல் மடிந்தாள்.

இதைக் கேள்விப்பட்ட துருவன்..விண்ணுலகில் யட்சர்களின் நகரமாகிய அளகாபுரியின் மேல் படையெடுத்துச் சென்று..யட்சர்களைப் போருக்கு அழைத்து தன்னை எதிர்த்தவர்களைக் கொன்றுக் குவித்தான்.

யட்சர்கள் மாயப் போரில் இறங்கி,மறைந்து அஸ்திரங்களை எய்தினர்.
துருவன் ,மகாவிஷ்ணுவைத் தியானித்து நாராயணாஸ்திரத்தைத் தொடுத்தான்.அதன் சக்தியால் மாயைகள் விலக ..யட்சர்கள் பலர் மடிந்தனர்.

அப்போது..துருவனின் பாட்டனார் மனு அங்கு தோன்றி போரை நிறுத்தும்படி துருவனுக்கு ஆணையிட்டார்.'உத்தமன் விதி முடிந்து விட்டது.அதனால் யாரோ ஒரு யட்சன் செய்த தவறுக்கு எல்லா யட்சர்களையும் கொல்வது நியாயமில்லை "என்றார்.

மனுவின் சொற்களைக் கேட்டு,துருவன் போரினை நிறுத்தினான்.யட்சர்களின் தலைவன் குபேரனுடன் சமாதானம் செய்து கொண்டான்.குபேரனும் மனம் மகிழ்ந்து "தங்களுக்கு வேண்டும் வரம் கேளுங்கள்"என்றான்.

துருவன் அவரிடம், "அற்ப சுகங்கள் ஏதும் வேண்டாம்.எல்லாக் காலங்களிலும் இறைவனை மறக்கா வரம்  வேண்டும்" என்றான்.

பின் துருவன் பூவுலகிற்கு  திரும்பி பல ஆண்டுகள் சிறப்பாக ஆட்சிச் செய்தான்.பின் தன் மகன் உத்கலனிடம் ராஜ்ஜியத்ததை  ஒப்படைத்துவிட்டு துறவறம் மேற்கொண்டான்.பத்ரிகாசிரமம் சென்று தவத்தில் மூழ்கினான்.

ஒருநாள் விண்ணூலகிலிருந்து தங்க விமானம் ஒன்று வந்தது.அதிலிருந்து இறங்கிய இருவர், "நாங்கள் பகவான் நாராயணனிடம் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறோம்" என்றனர் துருவனிடம்.துருவன் விமானத்தில் ஏறிக் கொள்ள, வானவர்கள் பூத்தூவி   ,கந்தர்வர்கள் கானம் பாடினர்.

விஷ்ணு அருள் பாலித்தபடி துருவன் வானமண்டலங்களைத் தாண்டி ஆகாயத்தில் நட்சத்திரமாக மாறிப் பிரகாசித்தான்...

துருவனின் கதையை சொல்லி முடித்தார் சுகப்பிரம்ம ரிஷி.பின் "பரீட்சித் மன்னா..துருவ சரித்திரன் அற்புதமானது.இதைக் கேட்டாலோ..பாராயணம் செய்தாலோ..மிகுந்த பலன்கள் உண்டாகும்.யார் யாருக்கு என்ன தேவையோ அது கிடைக்கும்.பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.எப்போதும் கடவுள் பக்தி மனதில் நிறைந்திருக்கும்" என்றார்.

சிறிது நேரத்திற்குப் பின் "பரீட்சித் மன்னனே! இந்த துருவ நட்சத்திரம் போலவே அவனுக்குப் பின் வந்த பிருது சக்கரவர்த்தியின் வரலாறும் விசேஷமானது.அதையும் சொல்கிறேன்" எனத் தொடர்ந்தார்.

No comments:

Post a Comment