Thursday, July 23, 2020

4 - பூமியை மீட்ட வராக அவதாரம்


அரண்மனையில்.. தான் செய்த தவறுக்கு பரீட்சித் வருந்தினான்.

எளிய அந்தணரை அவமதிப்பது பாவம்.அதிலும் ஒரு முனிவருக்கு நான் அபசாரம் செய்து விட்டேன்.புத்திக் கெட்டுப்போய் எப்படி இப்படி ஒரு செயலைச் செய்தேன்.இதற்கு பரிகாரம் என்ன? என்றேல்லாம் வருந்தினான்.

இந்நிலையில் ரிஷியின் குமாரன் தனக்கு சாபம் அளித்து விட்டான் என்ற விஷயமும் அவனுக்கு எட்டியது.

"மன்னன் எனும் ஆணவத்தால்,நான் செய்த தவறுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்" என மனதை சமாதானப் படுத்திக் கொண்டான்.

அடுத்து செய்ய வேண்டியவற்றை செய்யத் தொடங்கினான்..

முதலில் தன் மகன் ஜனமேஜயனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அரசை அவனிடம் ஒப்படைத்தான்.அனைத்தையும் துறந்து, அரண்மனையைவிட்டுப் புறப்பட்டு கங்கைக்கரையை அடைந்தான்.தர்ப்பைப்புல்லை பரப்பி அதன் மீது வடக்கு நோக்கி அமர்ந்தான்.மீதமுள்ள ஏழு நாட்களும்..அன்னம்,தண்ணீர் அருந்தாது பட்டினியோடு இருந்து பகவானை எண்ணியபடியே உயிரைவிடத் தீர்மானித்தான்.

பக்திமானான அவன் முடிவினை அறிந்து ஏராளமான முனிவர்களும், ரிஷிகளும் அங்கு வந்தனர்.நாரதர்,அகத்தியர்,பிருகு,அங்கிரஸ்,விசுவாமித்திரர் என்ற மாமுனிவர்களும் கூட கூடினர்.

பரீட்சித் அனைவரையும் வணங்கினான்.

பின் கைகளைக் கூப்பி சொல்லலானான்..

"மகரிஷிகளே! முனிவரின் மகனின் சாபத்தை நான் முழுமனதுடன் ஏற்கிறேன்..இந்த உலகத்தில் பந்தபாசத்தால் கட்டுண்டு உழல்வதைவிட உயிர் துறந்து விண்ணுலகம் செல்வதை அவர் எனக்கு ஒரு வரமாகத் தந்ததாகவேக் கருதுகிறேன்.நான் நல்லவிதமாக மோட்சத்தினையடைய நீங்கள்தான் அருள்பாலிக்க வேண்டும்" என்றான்.

அப்போது  வானத்தில் பல் மங்கல வாத்தியங்கள் முழங்கின.தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர்.பிரகாசமான ஒளியுடன் "சுகர்" மகரிஷி அங்கு வந்தார்.பரீட்சித் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான்.

"பின் மகரிஷியே! தங்கள் பாதங்கள் பூமியில் பதிந்ததால் இந்த பூமி புனிதமாயிற்று. எனது மரண சமயத்தில் எனக்கு அனுஹ்ரகம் செய்ய இங்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியினைத் தருகிறது.தங்கள் தரிசனம்
 என் பாவங்களைப் போக்கும்.என் ஆயுளின் கடைசி  இந்த ஏழு நாட்கள்..நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தாங்கள்தான் கூறி அருள வேண்டும்" என வேண்டினான்.

சுக மகரிஷி பரீட்சித்தை ஆசிர்வதித்து விட்டுக் கூறினார்.."மன்னனே! ஒரு மனிதன் வாழ்ந்த நாட்களில் எப்படி வாழ்ந்திருந்தாலும்,தனது இறுதி நாட்களில் பகவானிடம் சரணடைந்து, அவன் திருநாமங்களை உச்சரித்து..அவனையே தியானித்து வந்தால்..உறுதியாக நல்வினையடைவான் என்பது நிச்சயம்.நீயும் மனதினை அடக்கி உணர்ச்சிகளை வென்று..நாராயணனின் பாதக்கமலங்களிலே உன் நினைவினைச் செலுத்து.அதனால் பிறவியின் உன்னத நிலையை நீ அடைவாய்"

"அப்படியே ஆகட்டும்.ஸ்ரீநாராயணனின் நினைவை நான் எந்தத் தருணத்திலும் கைவிட்டதில்லை.இப்போது என் மரணத் தறுவாயிலும் கண்ணனின் லீலா.. ,அளக்கமுடியா அவன் புகழினையும்..பெருமைகளையும் கேட்டபடியே உயிரைவிட ஆசைப்படுகின்றேன்.தயவு செய்து தாங்கள் இவ்வுலகை ரட்சிக்கும் பரமாத்வாவின் கதையான, பாகவதத்தைக் கூற வேண்டும்" என பரீட்சித் கேட்டுக் கொண்டான்.

பரீட்சித்தின் வேண்டுகோளின் படி சுகர் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அவனுக்கு பாகவதத்தைக் கூறத் தொடங்கினார்...

"பரீட்சித்து மன்னனே! பாகவதமானது, எதிலும் பற்றில்லாமல் ஜீவமுக்தி அடைந்த ரிஷிகளின் மனதினையும் கவரக்கூடியது.இதை இயற்றியவர் எனது தந்தையான வேதவியாசர்.வேதங்களைத் தொகுத்து, இதிகாசங்களை எழுதி முடித்து,மேலும் பதினெட்டு புரணங்களையும் கூட அவர் செய்து முடித்தார். ஆனால்..இத்தனை செய்து முடித்தும் அவருக்கும் மனதில் ஏனோ  திருப்தி இல்லை.எதையோ தான் செய்ய்த் தவறிவிட்டது போல ஏதோ ஒரு தரப்பு அவரை உறுத்திக் கொண்டிருந்தது.ஆனால் அது என்ன என்று தெரியவில்லை.இதைப் பற்றி நாரதரிடம் சொல்லி வருந்தினார்..அவர்..

அப்போது நாரதர் கூறினார்..

வியாசரே! அதற்கான  காரணம் எனக்குத் தெரியும்.வேதம், வேதாந்தம்,இதிகாசங்கள்,புராணங்கள் என்று எத்தனையோ தாங்கள் செய்தும்..முக்கியமான ஒன்றை செய்யத் தவறி விட்டீர்கள்.உலகைக் காத்து ரட்சிக்கும் நாராயணனின் பெருமைகளையும், மகிமையையும்,
திருக்கல்யாண குணங்களையும் எடுத்துச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்.

நீங்கள் இயற்றிய காவியங்களும்,புராணங்களும் மக்களிடையே கடவுள் பக்தி ஏற்படுவதற்குப் பதிலாக.அவர்களை பந்தபாசங்களில் பற்று கொண்டவர்களாகவே மாற்றிவிட்டன.புராண,இதிகாசங்களில் இறைவனின்
பெருமைகளையும் அவனுடைய மகிமைகளையும் நீங்கள் ஆங்காங்கே கூறியிருந்தாலும், சத்தியம்,தர்மம்,நல்லொழுக்கம் போன்றவற்றுக்கே முக்கியத்துவம் தந்ததால் பகவானின் பெருமையும்,புகழும் முழுமையயையாமல் போய் விட்டது.இதனாலேயே தங்கள் மனதில் ஒரு நிறைவின்மை ஏற்பட்டுள்ளது..

ஆகவே, மனிதர்களுக்கு பக்தி ஏற்படும்படியாக இறைவனின் லீலைகளையும், மகிமைகளையும் போற்றி..அவனது எல்லையில்லா கருணையை மனிதர்கள் மனதில் பதியுமாறு ஒரு காவியத்தை இயற்றுங்கள்.இதைச் செய்தாலே உங்களின் மனக்குறை நீங்கி ஆத்ம திருப்தி கிடைத்துவிடும்" என்றார்.

என் தந்தை இதைக் கேட்டு மகிழ்ந்தார்.எவன் ஆதியும்..அந்தமுமாய் இருக்கின்றானோ...எவன் மோட்சத்தை அளிக்கக் கூடியவனோ..அந்தத் திருமாலின் திவ்விய லீலைகளைப் பாடத் தீர்மானித்தார்.

உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டவும்,அநீதியை அழிக்கவும் பகவான் விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார்.ஆனால் அவதாரங்களில் நாராயணனின் அம்சங்களைச் சொன்ன அதிகாரங்கள் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமுமே.

அதிலும் ஸ்ரீராமன் தன்னை கடவுளாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.மானிட அவதாரம் எடுத்து..மனிதனாகவே வாழ்ந்துக் காட்டிய அவதாரமாகும்.

ஆனால், கிருஷ்ணன் பிறந்தது முதல் தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொண்ட அவதாரம். பால்ய பருவத்தில் பல லீலைகள் செய்து எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்டவன்.எனவே கிருஷ்ணனின் லீலாவினோதங்களிலேயே மனம் லயித்து, அவனது பெருமைகளையும் ,புகழையும் மகிமையையும் வைத்து காவியம் எழுதத் தொடங்கினார்.

சரஸ்வதி நதியின் மேற்குக் கரையில்,"சம்யாப்ராசம்" எனும் ஆசிரமம் அமைத்து,கண்ணனின் திருவிளையாடல்களை"பாகவதம்" எனும் பிரபந்தமாக இயற்றினார்.பின் அந்த பாகவதத்தை எனக்கும் போதித்தார்.

பாகவதமானது கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் பாவங்களைப் போக்கி பலவிதங்களில் நன்மையினைத்  தரக்கூடியது.பந்தபாசங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு,பிறவிப் பெருங்கடலில் இருந்து மீட்டு மோட்சம் தரக்கூடியது...என பாகவதத்தின் சிறப்புகளைக் கூறிய சுக மகரிஷி, "கோபால கிருஷ்ணனின் லீலாவினோதங்களை அழகாகச் சொல்லும் பாகவதம்,நாராயணனின் அன்டசராசரங்களையும் படைப்பதும்,காப்பதும், அழிப்பதுமான செயல்களிலிருந்து தொடங்குகிறது..என்றபடியே கதையைச் சொல்லத் தொடங்கினார்.

உலகளந்த நாயகன் விஷ்ணு தன்னுடைய செயல்களை ஒடுக்கிக் கொண்டு நித்திரையில் இருக்கும் காலத்தில்..உலகங்கள் எல்லாம் நீரில் மூழ்கிப் போய்க் கிடந்தன.இப்படி பகவான் ஆயிரம் ஆண்டுகள் நித்திரையில் இருந்த பிறகு,சிருஷ்டியானது மீண்டும் செயல்படும் நேரம் வந்தது.

அப்போது விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து ஒரு தாமரை வெளிப்பட்டது.தாமரை மலரின் மீது பிரம்மன் தோன்றியிருந்தார்.அவர் வெளிப்பட்டவுடன் ஆவலுடன் நான்கு புறமும் திரும்பிப் பார்த்தர்.எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பி இருக்க,தான் மட்டும் எப்படி தோன்றினோம் என்று புரியாமல் திகைத்தார்.குழம்பினார்.

அப்போது பகவான் நாராயணன் அங்குத் தோன்றி..பிரம்மனுக்கு அருள்பாலித்து,அவரை உலக சிருஷ்டியை உண்டு பண்ணுமாறு பணித்தார்.

சிருஷ்டியானது இப்படித்தான் தோன்றியது.

பிரம்மன், திருமாலின் கட்டளைப்படியே தாவரங்கள்,விலங்குகள்,மனிதர்கள்,தேவர்கள் என்று சகலஜீவராசிகளையும் படைத்தார்.

காலம் எனப்படுவதை பகவான் படைத்தார்.நிமிடம், நாழிகை,மாதம்,வருடம் என்று பலவிதமாக கால  நிர்ணயங்களை அவர் வகுத்தார்.கிருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என நான்கு யுகங்களைப் படைத்தார்.

இதன்படியே, மனிதர்களுக்கு நூறு வருடங்கள் என்பது  தேவர்களுக்கு ஒருநாள் ஆகும்.உத்திராயணகாலம் தேவர்களுக்கு பகல் பொழுது.தட்சிணாயன காலம் அவர்களுக்கு இரவுப் பொழுது.இதில் பகல் பொழுதில் பிரம்மன் சிருஷ்டியைச் செய்வார்.இரவுப்பொழுதில் உறங்குவார்.அப்படி பிரம்மன் உறங்கும் காலம் பிரளயம் ஏற்படும் காலமாகும்.

பிரம்மன் அனைத்தையும் படைத்த போது..கூடவே, அறியாமை,உடலையே தானாகப் பாவித்துக் கொள்ளும்  தவறான எண்ணம்,போகத்தின் மீது ஆசை,கோபம்,மரணமே முடிவு என நினைப்பவர் போன்ற ஐந்து   குணங்களையும் சிருஷ்டித்துவிட்டார்.

பின் ஒரு கட்டத்தில் இந்த ஐந்து குணங்களைப் படைத்ததற்காக வருந்திய பிரம்மா,கடவுளைத் தியானித்து மனதைத் தூய்மைப் படுத்திக் கொண்டு மீண்டும் சிருஷ்டியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் சனகர்,சனந்தர்,சனாதனர்,சனத்குமாரர் என்ற நான்கு ரிஷிகளைப் படைத்தார்.அவர்களிடம், புத்திரர்களே! நீங்கள் நால்வரும் இனி உங்கள் சந்ததியை விருத்தி செய்து அதன் மூலம் உலகை நிரப்புங்கள் என்றார்.

ஆனால், நால்வருக்குமே இல்லறத்தில் ஈடுபட விருப்பமில்லை.அவர்கள் பகவான் நாராயணன்மீது பற்றுக் கொண்டார்கள்.புலன்களை அடக்கி தியானத்தில் மூழ்கிப் போனார்கள்.

இதைக்கண்ட பிரம்மன் ஆத்திரம் அடந்தார்.தன் வார்த்தைகளை மதிக்காமல் மகன்கள் தியானத்தில் மூழ்கிவிட்டார்களே என்ற கோபம் ஏற்பட்டது.அவரின் புருவங்களின் மத்தியிலிருந்து அது பொறியாக வெளிப்பட..அந்தப் பொறியிலிருந்து குமரன் ஒருவன் வெளிப்பட்டான்.

சிவந்த நிறமுடைய அவன் ..அழுதவாறே பிரம்மனை வழிபட்டு:நான் எங்கு வாழ வேண்டும் எனக் கூறுங்கள்?" என்றான்.

பிரம்மன் "நீ தோன்றியபோதே அழுதுக் கொண்டு பிறந்ததால் "ருத்ரன்" என்ற பெயரைப் பெறுவாய்.இதயம் மற்றும் இந்திரியங்கள்,உயிர்,ஆகாயம்,வாயு,அக்னி,நீர்,பூமி,சூரியன்,சந்திரன் ,தவம் போன்ற பதினோரு இடங்கள் உன் இருப்பிடங்கள்" என்று கூறி..ருத்ரனுக்கு
காலன்,மனு,மகா காலன்,வாமதேவன் என மேலும் பல பெயர்களையும் சூட்டினார்.
"ருத்ரா!இந்த பதினோரு பெண்களையும் உனது மனைவிகளாக்கிக் கொண்டு இவர்கள் மூலம் சந்ததிகளை உண்டாக்கு" எனக் கட்டளையிட்டார்.

ருத்ரனும், பிரம்மனின் கட்டளைப்படியே தன் மனைவிகள் மூலம் தன்னைப்போலவே சக்தி கொண்டவர்களாகவும்,கோபமுடையவர்களாகவும் ஏராளமான பிள்ளைகளைப் பெற்றான்.

ருத்ர அம்சத்துடன் சினம் கொண்டவர்களாகப் பிறந்த பிள்ளைகளைக் கண்டு பிரம்மன் கலக்கமும், கவலையும் அடைந்தார்.

ருத்ரனை அழைத்து ,"ருத்ரனே! நீ பெற்ற பிள்ளைகளின் சுட்டெரிக்கும் பார்வையால் எல்லாத் திக்குகளும் பொசுங்கிப் போகின்றன.தேவர்களும் அஞ்சுகின்றனர்.இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றது போதும்.இனி நீ,தவத்தில் ஈடுபடுவதே நன்மை விளைவிக்கும்" என்றார்.

பிரம்மன் சொன்னபடி ருத்ரன் தவம் செய்யலானான்.

அடுத்து பிரம்மன் தானே பிள்ளைகளை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கினார்.உலகத்தை விருத்தி செய்வதற்காக தன்னைப்போலவே சக்தி கொண்டவர்களாக மரீசி,அத்ரி,அங்கிரஸ்,புலஸ்தியர்,புலகர்,கிருது.புருகு,வசிஷ்டர்,தட்சர்,நாரதர் என பத்து மகன்களை உண்டாக்கினார்.

ஆனால், இதன் பிறகும் உலகம் அவர் எதிர்ப்பார்க்கும் விருத்தியை அடையவில்லை.அதனால் பிரம்மன் மனம் வருந்தி வேதனைப்பட்டபோது, அவருடைய  உடலே இரண்டாகப் பிரிந்தது.அதில்  ஒரு பாதி ஆணாகவும் ஒரு பாதி பெண்ணாகவும் ஆனது.

ஆணுக்கு சுவாயம்புவ மனு என்றும், பெண்ணுக்கு சதருபை என்றும் பெயர் ஏற்பட்டது.சுவாயும்புவ மனுவுக்கு சதருபை மனைவியானாள்.பின்னாளில் இவர்களூக்கு ஐந்து  குழந்தைகள் பிறந்தனர்.இரு ஆண் குழந்தைகளூக்கு பிரியவிரதன்,உத்தானபாதன் என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆஹூதி,தேவஹூதி,பிரஹூதி என்றும் பெயர் சூட்டப்பட்டது.

மூன்று பெண்களும் முறையே ருசி,கர்தமர்,தக்ஷன் என்பவர்களை மணந்தனர்.இவர்கள் மூலம் உலகில் மனித குலம் விருத்தியானது.சுவாயம்புவ மனுவின் சந்ததியினர் மூலமாகத் தோன்றியவர்கள் என்பதாலேயே மானிடர்கள் மனுஷர்கள் என்றாயினர்.

உலகம்.....முதலில் உலகமானது சுவாயம்புவ மனுவும் சதரூபையும் தோன்றியபோது இருக்கவில்லை.பிரம்மனிடம் இருந்து தோன்றிய அவர்கள் பிரம்மனை சென்று வணங்கினார்கள்.

மனு பிரம்மனிடம் "பிரம்மதேவரே! இனி  நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி சொல்லுங்கள்" என்று கேட்டனர்.

பிரம்மர் அவர்களிடம் "மனுவே! நீயும் சதரூபையும் சேர்ந்து மக்களைப் பெற்று இனவிருத்தி செய்து பூமியாகிய உலகத்தை  ஆண்டு வாருங்கள்"என்று கூறினார்.

மனு அதைக் கேட்டு திகைத்தான்."பூமியா..அது எங்கு இருக்கிறது? என் கண்களில் தென்படவில்லையே!" என்றான்.

பிரம்மாவிற்கும் அப்போதுதான் பூமி பிரளய வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பது நினைவிற்கு வந்தது.

மனுவும், சதரூபையும் மக்களைப் பெற்று வாழ வேண்டுமானால், பூமியாகிய உலகம் வேண்டும்.ஆனால் அதுவோ நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது.அதை எப்படி வெளியே பிரம்மனின் மூக்குத் துவாரத்தின் வழியாக கொண்டு வருவது என யோசித்தார்.வழி ஏதும் தெரியாததால் கவலையில் மூழ்கினார்.பகவானை பிரார்த்தித்தார்.

அப்போது விஷ்ணு  பிரம்மனின் மூக்கு துவாரத்தின் வழியாக கட்டைவிரல் அளவுள்ள குட்டிப் பன்றியாகத் தோன்றி வெளிப்பட்டார்.சிறிது நேரத்திலேயே அந்தப் பன்றியானது படிப்படியாக வளர்ந்து ஒரு காட்டுயானை அளவிற்கு ஆனது.

பகவான் எடுத்த அந்த அவதாரமே வராக அவதாரம்.அதை உணர்ந்த பிரம்மா,மரீசி மற்றும் பல ரிஷிகள் பகவானைப் போற்றி வணங்கினர்.

அந்தப் பன்றி தனது கோரைப் பற்களை நீட்டிக் கொண்டு, பூமியை நீரில் இருந்து மீட்டு வர..கடலினுள் புகுந்தது.நீந்தியபடியே பாதாளலோகம் சென்று பூமி மூழ்கிக்கிடந்த இடத்தைக் கண்டு பிடித்தது,இரு கோரைப்பற்களால் பூமியை மீட்டுத் தூக்கியது.

அப்போது வராகத்தைத தடுக்கும் விதமாக ஒரு கட்டளைக் குரல் கேட்டது.
"ஏய்..வராகமே! நில்..இந்த பூமி பாதாள லோகத்தில் வாழ்பவர்களுக்காக பிரம்மன் படைத்தது.மரியாதையாக அதை அங்கேயே வைத்துவிட்டு என்னோடு வந்து யுத்தம் செய்"

அந்தக் குரல் அரக்கன் இரண்யாட்சகனுடையது.

யார் இந்த இரண்யாட்சகன்?பகவானின் வராக அவதாரத்தையே எதிர்ப்பவன் என்பதை அறிய சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும்..

திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தில் நடந்த அந்நிகழ்ச்சியினைப் பார்ப்போம.

No comments:

Post a Comment